Thursday, December 31, 2009

2009...2010..

ம்ம்... மற்றுமொரு ஆண்டு நிறைவடைந்து விட்டது.. நாளை மற்றுமொரு நாளாகவே இருந்தாலும், கொண்டாட்டங்களும், வாழ்த்துக்களும் புதிய சட்டையின் வாசத்தினைப் போல சுழ்ந்து கொண்டிருக்கின்றன. இனி புதிய நாட்காட்டி, புதிய டைரி.. என புதியவை சூழ்ந்த வாசத்துடன் ஒரு வாரம் செல்லும்.

2009 ஐத் திரும்பி பார்த்தால்..தனிப்பட்ட வாழ்க்கையின் சுக துக்கங்களைத் தவிர்த்து, சமூக வாழ்வில் வெறுமையும் ஆற்றாமையும்தான் விஞ்சி நிற்கிறது. கடந்து சென்ற 2009 தமிழர்கள் நவீன கால ஆதிவாசிகளே என்பதைப் பல நிகழ்வுகளில் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. போன்றோரைக் குறிக்கும் குறியீடாய் ஆற்றாமையைத், தீ உண்ண; துவங்கியது 2009. என்ன நேர்ந்தாலும் தனது மீளாத் துயிலிலிருந்து எழுவதில்லை என்று உறுதி பூண்டு நகர்ந்துகொண்டும் நகர்த்தப் பட்டுக்கொண்டுமிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

எனது வரவேற்பறையின் அலங்கார விளக்குகளும், சன்னலின் கண்ணாடிகளும் மெருகேறிக் கொண்டேயிருந்தாலும், உயிர்ப்பின் நிழல் தேடி அலைவதிலேயே கழிந்தது 2009 .

நாளை 2010..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... :)

Thursday, December 17, 2009

மீள்பதிவு

முதல் அறிமுகத்தில் முழுவதும் தொலைத்தேன்
மீண்டும் புதியவளாய் அறிமுகமாகிறாய்
-பழைய புத்தகம்

மூவர்ண வெறியர்களின் களியாட்டம்
தவிக்கிறது வாழ்க்கைச் சக்கரம்
- இந்தியா

வண்டுறங்கியபின் பூக்களின் ரீங்காரம்
மாலை நேர மின்வெட்டு
-குழந்தைகள்

மிதமிஞ்சிய சோம்பல்
கிறுக்கியதையே கிறுக்கினேன்
-மீள்பதிவு.

முதல் மூன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவைதான், அதை மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யும் போது என்னைப்பற்றி மனதில் தோன்றிதை நான்காவதாகச் சேர்த்துவிட்டேன்.

Tuesday, December 15, 2009

வார்த்தைகள்

பற்றியும் சுற்றியும்
விரட்டியும் மிரட்டியும்
இகழ்ந்தும் மகிழ்ந்தும்
அயர்ச்சியும் உணர்ச்சியுமாய்
அங்கிங்கெனாதபடி எங்குமாய்
உருத்து ஊட்டும்
வார்த்தை சூழ் உலகு...