Wednesday, January 13, 2010

வாடிவாசல் - பொங்கல் வாழ்த்துகள்

டேய், வாடா பசிக்குதுடா..

இருடா போகலாம்.

...... :(

டேய்ய்..

ம்ம்.. இருடா இதோ வர்றேன்டா மணி..

........... :(

டேய் அரை மணிநேரமா வெயிட் பண்றேண்டா.. இதுக்கும் மேல லேட்டா போனா மெஸ்ஸில ஒன்னும் இருக்காது..

ம்ம்ம்.. சரி வா..போகலாம்..நான் இதோடவே வர்றேன் மெஸ்சுக்கும்..

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை.. இப்போதான தொறந்த அப்புறம் பாத்துகலாம் வாடா..

சரி நடங்க போகலாம் இதோடவே வர்றேன்..

டேய் சாப்புட்றா..

நீங்க சாப்பிடுங்க.. பின்னாடி சேந்துகிறேன்..

ம்ம்ம்ம்ம் அப்ப்ப்பாடா.... இப்போதாண்டா இரத்த கொதிப்பு அடங்கிருக்கு...

என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க.. ஒரு முறை கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் போது புத்தகங்கள் வாங்கிட்டு வந்தோம். உள்ள நுழைஞ்ச வுடனே திறந்த புத்தகம்தாங்க திரு. சி.சு செல்லப்பா எழுதிய - "வாடிவாசல்" .

அதை வாசிக்கத் துவங்கியபின் நண்பனுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்தான் மேலே இருப்பது.

இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னரும் சரி இதுவரையிலும் கூட இப்படி வெறியூட்டப்பட்ட நிலையில் ஒரு புத்தகத்தை வாசித்ததாக நினைவில்லை. (கிராமியப் பின்புலம் இருப்பதாலும், அதன் மீது ஒரு ஈடுபாடும் இருப்பதாலும் கூட இருக்கலாம்).

இதைச் சிலர் குருநாவல்னு சொல்றாங்க, சிலர் நெடுங்கதைன்னு சொல்றாங்க, எப்படிவேனா இருந்துட்டுப் போகட்டும் ஆனா, சிறப்பான வாசிப்பனுபவம் தரும்னு மட்டும் என்னால உறுதியாச் சொல்ல முடியும்.

இது அப்படியே உங்களை கிராமியச் சூழலுக்கு இழுத்துட்டுப் போகும்னோ, ஜல்லிக்கட்டை நேர்ல பார்க்கிற மாதிரி அனுபவம் தரும்னோ எழுதினா அது குறைந்த மதிப்பீடுன்னுதான் தோணுது.

பக்கங்களை புரட்ட புரட்ட நீங்கள் உங்கள் முறுக்கேறிய உடலுடன் ஒரு மாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள், என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இப்புத்தகம் ஒரு பன்முக வாசிப்பைக் கோரும் புத்தகமும் கூட, அப்படியெல்லாம் இல்லாமல் ஒரு நேர்கோட்டுப் பார்வையில் வாசித்தாலும் நான் மேலே சொன்ன எல்லாமும் உங்களுக்கும் நிகழும்.




படம்: http://tamilnol.blogspot.com/2006/12/blog-post_2230.html

பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வரும் எல்லாவற்றோடும் இப்போது, சி.சு.செல்லப்பாவும், வாடிவாசலும் சேர்ந்திருக்கிறது..

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்