Thursday, April 1, 2010

மனிதனின் பரிணாமம்.. !!!???

குறிப்பு: கட்டுரையின் நீளம் கருதி எழுத்துறு சிறிதாக இருக்கிறது. "cntrl +" பயன்படுத்திப் பெரிது படுத்திக் கொள்ளலாம்.

நண்பர் வால்பையன் அவர்களின்
இந்த இடுகையைப் பார்த்தவுடன் நீண்ட நெடுநாட்களாக எழுதாமல், சோம்பலாக அவ்வப்போது குறிப்புகள் செய்து காலம் கடத்தி வந்த இடுகையை தூசு தட்டி எழுதியிருக்கிறேன்.

பொதுவாக பரிணாமம் குறித்த பெரும்பான்மையினருக்கு எழும் சில கேள்விகள், மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு ஏன் இன்னும் இருக்கிறது? மனிதன் குரங்கிலிருந்து வந்தால் இப்போதிருக்கும் குரங்கு எப்போ மனிதனாகும்? ம
னிதன் பரிணமிக்கிறானா அப்படியென்றால் எப்படிப்பட்ட உயிரினமாகப் பரிணமிப்பான் ? மனிதன் பரிணமிக்க வில்லையென்றால் ஏன் இல்லை? இதில் குரங்கு பற்றிய கேள்விக்கான பதிலைச் சுருக்கமாக ஏற்கனவே இங்கே எழுதியிருப்பதால், அடுத்த கேள்விக்கு நகருவோம். இக்கேள்விக்கான விடை பற்றி உரையாடும் முன்னர், சிலவற்றைப் பேசிவிட்டுப் போகலாம்.

மனிதன் பரிணமிக்க முடியுமா அல்லது பரிணமிக்கிறானா? என்பது குறித்த சில கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கவே இவ்விடுகை. இவ்விடுகை முற்றுமுடிவானது அல்ல, இவ்விடுகையில் பேசப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை முன்வைத்து நாம் உரையாடலாம் அல்லது வேறு புள்ளிக்கு நமது புரிதலை நகர்த்திக்கொள்ளலாம், அவ்வளவே. இக்கட்டுரையில் உள்ள ஆய்வுகளுக்கு எதிரான முடிவுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இணைந்து யோசிக்கலாம்.

பரிணாமத்தைப் பற்றிய ஒரு மீள் பார்வை

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உலகிலுள்ள அனைத்து "உயிரினங்களும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

முக்கியாமானதொரு நினைவுப் புள்ளி: "பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species"

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

சரி இப்போ மனிதன் பரிணமிக்கிறானா என்ற கேள்விக்கு வருவோம்:

மனிதன் பரிணமிக்கிறானா என்பதற்கு முன்னர், மற்ற உயிரிகள் இன்றும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்கலாம்.


தற்போதைய சூழலுக்கு தகுந்தார்போல் பிற விலங்குகளின் உடலில்/மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறதா?

பிற விலங்குகள் தற்போதும் பரிணமித்துக் கொண்டிருந்தால், தங்களது சூழலுக்கு தகுந்தார்போல், அவற்றின் வாழ்க்கைமுறை/ உடற்கூறுகள்
மாறியிருக்க வேண்டும். இரண்டு எளிய உதாரணங்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட கூற்றைக் காணலாம்.

உதாரணம் 1: பசுபிக் பெருங்கடலில் வாழும் குறிப்பிட்ட வகை மீனினத்தின் இனப்பெருக்கத்தில் பெரும் மாற்றத்தை அவதானித்திருக்கிறார்கள். அதாவது இத்துனை ஆண்டுகளில் இம்மீனினத்தின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று அம்மீன் அதிக அளவில் உணவாக உட்கொள்ளப்பட்டதுதான் என்று முன்மொழியப்பட்டது. ஆனால், சமீப காலமாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அது எப்படி? என்று நோக்கினால், அவற்றின் இனப்பெருக்க சுழற்சியின் கால அளவை அவை குறைத்திருக்கின்றன. அதாவது குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யத் துவங்கியிருக்கின்றன. ஆக இக்குறிப்பிட்ட இம்மீனினத்தை அதிகரிக்க அவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும் போல.. :)

உதாரணம் 2: இரண்டாவது உதாரணம் இயற்கையான சூழலோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் மிக முக்கியமான மற்றும் மிக ஆச்சர்யமூட்டும் ஒரு குறுகிய கால மாற்றத்தைக் குறிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் சிம்பன்சி ஒன்றின் செயல்பாடுகளில் திடீர் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மிகவும் முரட்டு
த்தனமாக மாறியதாகவும், பூங்காவிற்கு வருபவர்களை கற்களை கொண்டு தாக்குவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இதனை அவதானிப்பதற்காக ஒரு குழு பணிக்கப்பட, அவர்களோ மிகவும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளை அவதானித்திருக்கிறார்கள்.

வாரயிறுதி நாட்களில் இப்பூங்காவிற்கு சிறுவர் சிறுமியர் அதிகமாகத் தொடர்ந்து வந்திருக்கின்றனர். அதோடு கூட்டம் அதிகரிக்க அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டும், இக்குரங்கினை விளையாட வைக்கும் பொருட்டு, குச்சிகள் மற்றும் கற்கள் கொண்டு அதனை இடையூறு செய்திருக்கின்றனர். அவர்களை எதிர்கொள்ளும் நோக்கில் அச்சிம்பன்சி கற்களை வீசத் துவங்கியிருக்கிறது. அட இதுதான் நம்ம
குரங்கு-தொப்பிக்காரன் கதையிலேயே கேள்விப்பட்டிருக்கிறோமேன்னு தோணுதா?? அவசரப் படாதீங்க, செய்தி இன்னும் முடியலை.

இதில் சிறப்பு என்னவெனில், வாரயிறுதி நாட்களில் மட்டும் பூங்கா திறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர், அது இருக்கும் திறந்த வெளிக் கூண்டில் இ
ருக்கும் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கித் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கத் துவங்கியிருக்கிறது. இதுதான் மிகவும் ஆச்சர்யம் தரும் நிகழ்வு. அதாவது வாரத்தின் எந்த நாட்களிலும் செய்யாமல், வாரயிறுதி நாட்களில் மட்டும் விடயற்காலையில் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் மக்கள் வந்தவுடன் தனது தாக்குதலைத் துவங்கியிருக்கிறது.

இதுவரை, மனிதன் தவிர வேறு எந்தவொரு விலங்கும் (யானைகள் விதிவிலக்காக இருக்கலாம்) பசி தவிர வேறு எதற்காகவும், எதிர்காலம் குறித்த சி
ந்தனையுடன் இருந்தது கிடையாது.
இது தவிர, காலம் குறித்த ஒரு கணக்கீட்டையும் செய்
திருக்கிறது. ஆக, நீண்ட கால நினைவு மற்றும், எதிர்காலம் பற்றிய உணர்வு இவை இரண்டிற்கும் அது தன்னை தயார் செய்து கொண்டுள்ளது.

மேலே சொன்ன உதாரணங்களில் இரண்டாவதை ப
ரிணாம மாற்றமாக கொள்ளயியலாது, ஆனால், சூழலின் நிர்பந்தத்தில் மனிதனின் தனித்துவமாக கருதப்படுபவற்றை மனிதனின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான சிம்பன்சி தாமாகவே பழகிக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான நிகழ்வுகளில் ஒன்று.

நான் வாசிப்பு சுவாரஸ்யத்திற்காக எளிதான உதாரணங்களைக் குறிப்பிட்டாலும், மரபணுவியல் ஆய்வுகளில் தொடர்ந்து பல விலங்குளின்/தாவரங்களின் பரிணாம மாற்றம் இன்றைக்கும் உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது/வருகிறது. குறிப்பிட்ட இரண்டு உயிரினம் சார்ந்த பரிணாமத்தை கூட்டுப் பரிணாமம் (co-evolution) என்று அழைக்கின்றனர். அப்படியானதொரு கூட்டுப் பரிணாமம் குறிந்த இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இடுகை இங்கே . ஆக, பரிணாமம், இயற்கைச் சூழல் மாற்றத்துக்கினங்க விலங்குகளில் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வுதான். (அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை)

சரி இப்போ மனித விலங்குக்கு வருவோம்.

பரிணாமக் கொள்கையை முன்மொழிந்த டார்வின் கூ
ட மனிதன் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட தயக்கம் காட்டியே வந்திருக்கிறார். பின்னர், வாலஸ், மற்றும் இன்னபிறரின் தூண்டுகோலினால் மனிதன் குறித்த தனது ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது முழுக்க உண்மையில்லை, டார்வின் தமக்கே மனிதன் குறித்த பார்வையை உறுதிப்படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

சரிங்க விசயத்துக்கு வருவோம்:

அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது, உணவு மற்றும் இனப்பெருக்கம். பரிணாம மாற்றம் என்பது உணவு மற்றும் இனப்பெருக்கம் சார்ந்ததாகவே இருக்கும், என்பதை ஒருமுறை நினைவு படுத்திக் கொள்வோம்.

மனிதன் பரிணமித்திக்கொண்டேயிருந்தால் அவனது சூழல் மாற்றத்திற்கிணங்க அவனது உடற்கூறில் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருக்கிறதா? மனிதனின் உடலில் அவனாக உண்டாக்கிய சமூக அமைப்பின் தாக்கங்கள் என்ன? இப்படியான கேள்விகளை முன்வைத்து மேலும் பேசலாம். ஆனால் அதற்கு கலவையான பல்வேறு ஆய்வு முடிவுகளை முன்னிறுத்தி உரையாட வேண்டியிருக்கும்.

கலவையான பல ஆய்வு முடிவுகளை எளிதான தர்க்
கத்திற்காக, I. இல்லை பரிணமிக்கவில்லை , II.ஆம் பரிணமிக்கிறான்,என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதலில் மனிதன் பரிணமிக்க வில்லை என்பதற்கான காரணிகள் மற்றும் ஆய்வு முடிவுகள் பற்றி பேசலாம்.

I. மனிதன் பரிணமிக்க வில்லை - ஏன்?

பரிணாம மாற்றம் என்பது மரபணுக்களின் விதங்கள் (variety) பொறுத்தே அமையும், ஆக மரபணுக்களில் இருக்கும் விதங்களைத் தொடர்ந்து அவதானித்தே பரிணாமம் ஏற்படுகிறதா என்பதை கணிக்க முடியும். மனிதனது சமூக அமைப்பு எப்படி அவர்களின் மரபணுக்களில் பொதிந்து விடுகிறது என்பதைப் பற்றிய சில ஆய்வுக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதனது மரபணுக்களைப் பரிசோதித்துப் பார்த்த ஆய்வாளர்கள், அறியப்பட்ட மனித இங்களது மரபணுக்களில் பெரிய வேறுபாடு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இன்றளவில் மரபணுக்களில் பல விதங்களை உள்ளடக்கிய மனிதர்கள் இருக்கும் ஒரு நிலப்பிரதேசம் ஆப்பிரிக்கா மட்
டுமே என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மனிதனின் மரபணுக்களனைத்தும் அப்பிரிக்காவுடன் தொடர்புடையதே என்றும் குறிப்பிடுகின்றனர். இதைப் பற்றிய சமீபத்திய ஆய்வறிக்கையும், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வு முடிவுகளைப் பற்றிய குறிப்புகளையும் நம்ம பேராசிரியர் தருமி அவர்களின் இந்த இடுகையில் காணமுடியும். ஆக மனிதயினத்தில், உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மற்றொரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மரபணுக்களில் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருக்கிறது. இச்சூழ்நிலையில், மனிதன் இனிமேலும், பரிணமிக்க முடியாது என்ற முடிவை நோக்கி நாம் நகரலாம். இதற்கு வலு சேர்க்கும் விதமான ஆய்வு முடிவுகளையும் பார்த்துவிடலாம்.

சமூக அமைப்பின் தாக்கங்கள்

அ). ஆப்பிரிக்க கண்டத்தில் நதிக்கரைக்கு இரு பக்கங்களிலும் இருந்த இருவேறு ஆதிவாசியினங்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பை முதலில் பார்ப்போம். இவர்கள் தங்களது முக அலங்காரங்களில் தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றனராம். இவ்வாறு வேறுவித முக அலங்காரம் கொண்ட இருகுழுக்களுக்கிடையே கலப்பு மணம் (அதாவது மரபணுப் பரிமாற்றம்) நடைபெறாமல் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆ). அதேபோல், 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐரோப்பா
விலுள்ள பல்வேரு மொழி பேசும் மக்களிடையே மிகுந்த மொழித் தேசிய உணர்வினால் அவர்களிடையே நீண்ட நெடுங்காலம் மரபணுப் பரிமாற்றம் நிகழாமல் இருந்தது என்பதுவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இ). நமது தமிழ்ச்சமூகத்தில், மரபணுக் கலப்பு என்பது சாதீயம், மதம், மொழி மூலம் தடுக்கப்பட்டு வந்ததையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம், பல்வேறு விதமான மனிதனது மரபணுக்கள் கலக்காமல் இருப்பதுவும், சாதீயத்தின் சுவடுகள் அல்லது கூறுகள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வேர்விடத் துவங்கிவிட்டது என்பதையும் இதன் மூலம், கட்டுக்கோப்பான சமூக அமைப்பிற்கே உண்டான மரபணு சார்ந்த நோய்கள் அப்படியே தங்கிப் போகும் அபாயம் உண்டு என்பதையும் முன்மொழிந்து சமீபத்திய ஆய்வுக்குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் பற்றிய தருமி சாரின் இடுகை இங்கே .

ஈ). "Sexual selection" - மனிதனது இனப்பெருக்கத் துணைத் தேடல் என்பது எப்படி இருக்கிறது? இதைப் பற்றி டார்வினின் கருத்தை ஒரு தனி நெடும் கட்டுரையாகவே எழுதலாம். (வாய்ப்பிருந்தால் பின்னர் பேசலாம்.) இப்போதைக்கு சுருக்கமாக: மற்ற விலங்குகளில் துணைத் தேடல் என்பது ஆரோக்கியமான வாரிசுகளை உருவாக்கும் வலிமையுடைய ஆண், மற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்குமான உணவு மற்றும் பாதுகாப்பைத் தரவல்ல ஆண் இணை என்ற அடிப்படையிலேயே தேர்வுகள் இருக்கும். இத் துணைத் தேடலை சில பறவைகள் எப்படிச் செய்கின்றன என்பதை நண்பர் இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இந்த இடுகையில் பார்க்கலாம். பெரும்பாலும், துணைத்தேடலில், தனது துணையை உறுதி செய்யும் பொறுப்பு பெண்ணிடமே இருக்கும், ஆண்கள் முட்டி மோதி தகுதியானவன் என்று நிரூபிக்கும் வரை அமைதியாகக் காத்திருக்கும், பெண்.

இயற்கையின் இணைத் தேடலின் அடிப்படையில் மனிதனது இணைத் தேடலும் இருக்க வேண்டுமென்றால், உடல் வலிமை உள்ளவனும், விலங்குகளை வேட்டையாடியோ அல்லது உணவு உற்பத்தியில் சிறந்தவனோதான் இனப்பெருக்கம் செய்ய முடியும். இப்போ அப்படி இருக்கா என்ற நாம் தர்க்கம் செய்து புரிந்து கொள்ளவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.. :).

பல மனித சமூகங்களில் இணைத்தேடுதல் உரிமை என்பது பெண்ணுக்கு வழங்கப்படுவதேயில்லை என்றும், இணையைத் தீர்மானிக்கும் காரணிகள் புறக்காரணிகளாகவே இருக்கின்றன என்றும் டார்வின் குறிப்பிடுகிறார்.

மனிதனது வாழ்க்கை முறையானது இயற்கையிலுள்ள மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு, தனது சமூகக் கட்டமைப்பு தரும் சூழலைச் சார்ந்தும் நோக்கியும் இருக்கிறது. இப்படி இயற்கையினடமிருந்து தனித்து அல்லது இயற்கையின் போக்கில் பரிணாம மாற்றம் நடைபெற பெரும் தடையாக இருப்பவை அல்லது மனிதனை இயற்கையான வாழ்விலிருந்து பிரித்துவைப்பதில் மிக முக்கியமானவையாக நான் கருதுவது.

i. உணவு உற்பத்தி.

ii.சமூகக் காரணிகளை உள்ளடக்கிய தடைகளை சுருக்கமாகக் கீழுள்ள கோட்டோவியம் மூலம் கொடுத்திருக்கிறேன்.




கோட்டோவியத்தை மேலும் புரிந்து கொள்ள இச்சுட்டி பயன்படலம். http://en.wikipedia.org/wiki/Chastity_belt

அடுத்து மனிதன் இன்றைக்கும் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் என்ற தர்க்கப் புள்ளிக்கு வருவோம்.

II. மனிதன் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் - எப்படி?

மனிதன் பரிணமிக்க வேண்டும் என்றால் அவனது சூழலுக்கு ஏற்றார்போல், அவனது உயிரியல் உடலில் ஏதாவது மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். இந்தக் கேள்விக்கு ஒரேயொரு புள்ளியில் இருந்து பதில் தேடினால் ஒரு முடிவுக்கு வர இயலாது. வெவ்வேறு துறை சார்ந்த ஆய்வுகளைக் கலந்து யோசித்தால் சில புள்ளிகளைச் சென்றடையலாம்.

சரி மனிதனுக்கும் அவனது சூழல் மாற்றத்திற்கும் உயிரியல் ரீதியாக தொடர்பு இருக்கிறதா?

அ). முதலில் சமீப காலங்களில் (ஏறத்தாழ 10,000 ஆண்டுகளில்) மனிதனின் சமூக மாற்றங்களால் உடலமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு முடிவை பார்க்கலாம்.

பொதுவாக குழந்தைப் பெற்றெடுக்கும் காலங்களில் பெண்களுக்கு, உமிழ் நீர் சுரப்பது, சர்க்கரையின் அளவில் மாறுபாடு எனப் பல மாற்றங்கள் ஏற்படுவதால், அவை பெண்களுக்கு அதிகமான சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன, என்பது நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள். இதனடிப்படையில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெண் எலும்புக் கூடுகளின் உடற்கூறுகளை ஆய்ந்திருக்கிறார்கள்.

கீழ்த் தாடையைப் பரிசோதிக்கும் போது, சற்றேரக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன்னர் வயதினையுடைய எலும்புக்கூடுகளில் பெண்களுக்கு சொத்தைப் பற்கள் உண்டாவது மிகவும் அரிதாகவும், அதே சமயம் 10000 ஆண்டுகளுக்குப் பின்னர் வயதுடைய எலும்புக்கூடுகளில் சொத்தைப் பற்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதற்கான ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதான் மனிதயினம் ஒரேயிடத்தில் தங்கி உணவு உற்பத்தியைத் துவங்கிய காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வேட்டையாடுதல், உணவுக்காக இடம்பெயர்தல் போன்றவற்றால் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பதற்கும் மேலாக, அப்போது பெண்களுக்கும் இனப்பெருக்கத்தின் மேல் அதீத ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. தனது வாரிசு மற்றும் தனக்கான உணவுத் தேவைஅதாவது, விவசாயம் மூலம் உணவு உற்பத்தி முறையைக் கண்டடைந்தவுடன் பெண்களினது உயிரியல் உடலில் இனப்பெருக்கத்திற்கான தூண்டுதல்தன்மை அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே, ஏறத்தாழ 800-10000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணினது எலும்புக்கூடுகளில் அதிகமான சொத்தைப் பற்கள் உள்ளன என்று முன்மொழியப்பட்டது.

(குறிப்பு: குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலான எலும்புக் கூடுகளும், அக்காலத்தைய மனிதனது உணவு முறை மாற்றங்கள், மற்றும் அதனால் உண்டாகும் பற்சிதைவுகளும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது ஆய்வில்.)

ஆ). மனிதனது மரபணுக்களில் பிற விலங்குகளின் (ஆடு, மாடு) பாலை செரித்துக்கொள்ளும் தன்மை உட்புகுந்ததே ஒரு பரிணாம மாற்றம்தான் என்று குறிப்பிடுகின்றனர். அதிகமாக விலங்குகளை மேய்த்தலையும் நாடோடி வாழ்க்கை முறையும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே தான் இம்மாற்றம் மிகுதியாக இருந்திருக்கிறது. வேட்டையாடுதல் முறையில் உணவு சேகரித்தல் மற்றும், காடுகளில் வசிக்கும் குழுவினரிடம் இவ்வகை செரிப்புத்தன்மை இயல்பானதாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இ). இன்றைக்கும் சில பிரதேசங்களில் வாழும் மக்களிடையே அவர்கள் வாழும் இடத்திற்கேற்ற நோய் எதிர்ப்புச் சக்திகள் உற்பத்தியாகியிருப்பதுவும், பல புதிய நோய்களுக்கு மனிதனது உடல் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக்கொண்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், மனிதனது உடலில் சூழலுக்குத் தகுந்த மாற்றம் நடை பெற்று வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.


சரி என்னதான் முடிவு இப்போது

தற்காலிக முடிவு: மனிதன் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால், பெரும்பாலும் பலரும் எதிர்பார்ப்பது போன்ற வேறு ஒரு வகை உயிரனமாகவோ அல்லது முழுவதும் புதிய வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரியாகவோ பரிணமிக்க வில்லை அல்லது அதற்கான சாத்தியங்களும் குறைவு. (உதாரணமாக மனிதனுக்கு இனி வாலோ, கொம்போ முளைக்காது.. :) கொம்பிருப்பதாகக் கருதிக்கொள்வது இங்கு கணக்கில் வராது ).

கட்டுரையின் மையக்கரு:

ஒரு கலவையான புரிதலில், மனிதயினம் பரிணமிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பரிணாமம் மற்ற விலங்குகளுக்கு நிகழ்வது போலல்லாமல் மனிதன் வகுத்துக் கொண்ட சமூக அமைப்பையினையொட்டி நிகழ்வதுவாக இருக்கிறது. அதனால், மனிதன் இனி தனித்து வேறு வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரினமாக மாறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால், மொழி, இனம், தேசம், சாதி, மதம், உணவு உற்பத்தி போன்ற சமூகக் கட்டமைப்பினடிப்படையில் உருவாகும் மரபணு பரிமாற்றக் கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை தனது சமூகக் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களுக்குத் தொடர்ந்து உள்ளாகிக் கொண்டிருக்கும் மனிதனது உடல்.

*********************************************************************************************

தரவுகள்:

ஆங்காங்கே வாசித்த கட்டுரைகளின் முடிவுகளின் தொகுப்பு இக்கட்டுரை. மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுகளுக்கான தரவுகளில் சில pdf வடிவத்தில் இருக்கின்றன அதனை முழுமையாக வாசிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் (kaiyedu@gmail.com).

ஏற்கனவே குறிப்பிட்டது போல இக்கட்டுரையில் இருப்பவை எனது வாசிப்பு மற்றும் புரிதலுக்கு உட்பட்டவையே, மாற்று முடிவுகளைக் கொண்ட நிரூபனங்கள் இருப்பின் அறியத்தாருங்கள் இணைந்து பேசலாம்.

22 comments:

வால்பையன் said...

பல அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தல!

நீங்களும் ஆட்டத்துக்கு வரணும்னு ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்!
நன்றி

கையேடு said...

நன்றிங்க வால்பையன்.. ஆட்டத்துக்கு வந்தாச்சு.. :)

கல்வெட்டு said...

.

அப்பாடா ..துறை சார்ந்த வல்லுநரின் பதிவு வந்தாகிவிட்டது.

நன்றி ..கையேடு!

.

கையேடு said...

நன்றிங்க கல்வெட்டு,

துறை சார்ந்த வல்லுனரெல்லாம் இல்லங்க, வெறும் துறை சார்ந்த வாசிப்பு மட்டும்தாங்க.

வினவு said...

நன்றியும், வாழ்த்துக்களும்!

கையேடு said...

நன்றிங்க வினவு

Anonymous said...

பரிணாமம் பற்றிய அருமையான கட்டுரை. தொடருங்கள்.

கையேடு said...

நன்றிங்க அனானி.

http://thavaru.blogspot.com/ said...

இடம்பெயர்ந்து கொண்டேயிருந்த மனிதவிலங்கு எப்பொழுது ஓரிடத்தில் நின்றது. எப்பொழுது நின்றதோ அன்றிலிருந்து தொடங்கியது முரண்பட்ட இயற்கையின் பயன்பாடு. இதற்கான காலகட்டம் எப்படியாக இருந்திருக்க முடியும் வறட்சியா ? வளமையா ?

கையேடு said...

//இடம்பெயர்ந்து கொண்டேயிருந்த மனிதவிலங்கு எப்பொழுது ஓரிடத்தில் நின்றது. எப்பொழுது நின்றதோ அன்றிலிருந்து தொடங்கியது முரண்பட்ட இயற்கையின் பயன்பாடு. இதற்கான காலகட்டம் எப்படியாக இருந்திருக்க முடியும் வறட்சியா ? வளமையா ?//

மிகவும் முக்கியாமான கேள்விகளுள் இதுவும் ஒன்றுங்க.

ஆனால், மனிதனது இடப்பெயர்ச்சி என்பது நின்றுவிட்டது என்பதாகக் கொள்ள முடியாது. இன்றைக்கும் இப்படியான இடப்பெயர்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஆனால், இடப்பெயர்வுக்கான சமூகக் காரணங்கள் பல இருப்பினும் அவற்றினும் மேலாக, ஆதாரப் புள்ளியாக உணவு இருக்கிறது. அது சாத்தியப்படும் வழிகளை நோக்கி இன்றைக்கும் மனித இடப்பெயர்ச்சி என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இடப்பெயர்ச்சி நிகழும் வடிவங்கள் மாறியிருக்கின்றன, ஆனால் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

மேலும், மனிதனது இடப்பெயர்ச்சி என்பது எப்போதும் ஒரு பன்முகத் தன்மை கொண்ட காரணுங்களுக்காகவே நடந்திருக்கிறது, ஆனால் உயிரியல் ரீதியான ஆதாரப் புள்ளியாக எப்போது உணவு மற்றும் உயிர்த்தலுக்கான முனைப்பு இவையே இருக்கின்றன.
அந்த வகையில் வறட்சி என்பது எப்போதும் இடப்பெயர்தலுக்கான முக்கியப் புள்ளியாகவே இருந்து வந்திருக்கிறது.

ஓரிடத்தில் நிலையாகத் தங்குதல் என்பது வளமையின் அடிப்படையிலேயே நிகழ முடியும். உணவு உற்பத்தி என்பது அந்த வகையில் பல இயற்கை முரண்களுக்கான துவக்கப்புள்ளியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இது குறித்து இன்னும் விரிவாகப் பேசலாம், தற்போதைக்கு சுருக்கமாக.

நன்றிங்க தவறு..

ஜமாலன் said...

வழக்கம்போல் செறிவாகவும் ஆழ்ந்த நோக்குடனும் சொல்லப்பட்டுள்ள பதிவு. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை எழுதுங்கள் நண்பரே...

இதுபற்றி எழுதக்கூடிய பதிவர்கள விரல்விட்டு எண்ணிவிடலாம். பயனுள்ள பதிவு இது.

மனிதனின் அடுத்த பரிணாமம் பற்றியக் கேள்வியின் அடிப்படையில் பரிணாமக் கொள்கையை பொய்யாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து படித்துள்ளேன் முன்பு. ஆனால் உங்கள் விளக்கம் நுட்பமாக அதற்கான பதிலை தருகிறது.

வாழ்த்துக்கள்.

ஜமாலன் said...

இது பின்தொடரலுக்காக..

கையேடு said...

தொடர் ஊக்கத்திற்கு நன்றிங்க ஜமாலன்.

Thekkikattan|தெகா said...

கையேடு தெளிவா சொல்லியிருக்கீங்க. இதனையே மற்ற இடங்களில் பரிணாமம் பொருத்து மக்கள் எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்கு ஒரு நிரந்தரமான இணைப்பாக கொடுத்து விடலாம். நன்றி!

கல்வெட்டு said...

.

வருத்தமான விசயம்:

இங்கே பின்னூட்டம் இட்ட அனைவரும் ஏற்கனவே இந்தக் கருத்தை ஆமோதிப்பவர்கள் அல்லது இன்றளவில் ஏற்றுக்கொண்டு அதன் மீது மேலும் கேள்வியை எழுப்பி அதிகம் புரிந்து கொள்ளப் பார்ப்பவர்கள்.

ஆனால், இந்தக் கொள்கையை ஏற்காத மத நம்பிக்கையாளர்கள் யாரும் இங்கே பின்னூட்டமிடவில்லை
(ஒரு வேளை படித்திருக்கலாம் அல்லது இனிமேல் பின்னூட்டம் இடலாம்).

நம்பிக்கை அடிப்படையில் எதிர் துருவங்களாக இருப்பவர்களுக்கு இது போன்ற அறிவியல் விளக்கங்கள் பயன்படாது அல்லது அவர்கள் இதைச் சட்டை செய்யப்போவது இல்லை என்பதே எனது புரிதல்.

****

அறிவியலாளர்களுக்கு , அறிவியலை கேள்வி கேட்டு , மேலும் மேலும் சோதனைக்கு உள்ளாக்கி, உண்மையை நோக்கி பயணிக்க (பயணிக்கத்தான் ...இன்றைய அறிவியல் நம்பிக்கை நாளை புதிய சோதனைகளில் கலைத்துப்போடப்படும் என்ற புரிதலோடு) விரும்புவர்களுக்கு நிச்சயம் இது போன்ற பதிவுகள் தேவை.

**

கையேடுவுக்கு மறுபடியும் நன்றி!

**

கையேடு said...

நன்றிங்க தெகா.

//உண்மையை நோக்கி பயணிக்க (பயணிக்கத்தான் ...இன்றைய அறிவியல் நம்பிக்கை நாளை புதிய சோதனைகளில் கலைத்துப்போடப்படும் என்ற புரிதலோடு) விரும்புவர்களுக்கு நிச்சயம் இது போன்ற பதிவுகள் தேவை.//

உண்மைதாங்க,

நன்றிங்க கல்வெட்டு.

அறிவாளன் said...

அருமையான கட்டுரை.
இதைத் தொடர்ந்து உங்களது மற்ற கட்டுரைகளையும் படித்தேன்.சிறப்பாக உள்ளன.
பேராசிரியர் தருமி அவர்களைப் போன்று பக்குவத்துடன் எழுதுகிறீர்கள்!
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
கல்வெட்டு அவர்கள் குறிப்பிட்டது போல் படிக்க வருபவர்கள் குறைவாகக் காணப்படுவது வருத்தமான விஷயம்தான்.
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அறிவாளன்,
USA.

கையேடு said...

நன்றிங்க அறிவாளன். உங்களது அறிவியல் கட்டுரைகளும் சிறப்பாக வந்துள்ளன. அவை பற்றி அங்கேயே பேசுவோம்.

தருமி said...

கையேடு,

காலந்தாழ்த்தி வந்துள்ளேன். நீங்கள் எழுதியபடி உங்களிடமுள்ள தொகுப்பை அனுப்பி வைக்கணும். நன்றி அதற்கு.

மனித இடப்பெயர்ச்சி பற்றிய எனது ஐயத்திற்கு இன்னும் விளக்கமான பதில் கிடைக்கணும்.

கையேடு said...

நன்றிங்க தருமி,

தொகுப்பை அனுப்பிவிட்டேன்.

இடப்பெயர்ச்சி குறித்து, உங்கள் இடுகையில் எதிர்பார்க்கும் அளவிற்கு தெளிவான பதில் கிடைக்குமா என்பது அய்யமே.

பொதுவான உயிரியல் காரணிகளை அனுமானமாக (வெகு சில ஆதாரங்களைக் கொண்டு) முன்மொழிவது மட்டுமே தற்போதைக்கு சாத்தியமாகியிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இது குறித்து எனக்கொரு சிந்தனை இருக்கிறது. மனிதனின் நினைவாற்றல் பரிணாமத்தில் எப்படி இருந்துள்ளது என்பதில் சூட்சுமம் இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன். ஒரே இடத்தில் தங்கவும், தங்கிய இடத்திற்கு திரும்ப வராமலும், ஒரு இடத்தை தொடர்ந்து புறக்கணிக்கவும் நினைவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உதாரணமாக இன்றைய ஆதிவாசிச் சமூகத்தில் மக்களினது நினைவாற்றல் செயல்படும் விதம் வேறுவிதமாக இருக்கிறது.

நம்முடைய curiosity யைத் தவிர்த்துப் பார்த்தால், ஏன் அவர்கள் இடம்பெயர்ந்தார்கள், ஏன் இடம்பெயரவில்லை என்பதற்கு இறுதியான பதில் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

இதுவும் ஒரு வகையில் அண்டம், பூமி,உயிர்.. ஏன் உருவாகவேண்டும் என்பது போன்ற curiosity driven கேள்வியாகவே தங்கிவிடும் என்றே கருதுகிறேன்.

Anonymous said...

நன்றி

Anonymous said...

நன்றி, மனிதன் உடலில் முடியின் அளவு குறைந்து வருகிறதே இதனையும் பரிணாமத்தில் சேர்த்து கொள்ளலாமே ,மரியா