Friday, September 17, 2010

இன்று இப்படியாக

தமிழகம் இன்று இப்படியாகப் இருப்பதில், மிகவும் முக்கியப் பங்காற்றியவர்களுள் ஒருவர் என்றால் அதில் தந்தைப் பெரியாருக்கு மிக முக்கியமான இடமுண்டு.

பெரியாரின் பிறந்த தினமான (17 செப்டம்பர்) இன்றைக்கு அவரது உழைப்பையும் சிந்தனைகளையும் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.




பெரியாரிய சிந்தனைகளையோ அல்லது பெரியாரினது எழுத்துக்களையோ அதிகம் வாசித்தவன் கிடையாது. அதனால் பெரிய திறனாய்வுக் கட்டுரை எழுதும் அளவிற்கு சரக்கும் கிடையாது. ஆனால், இன்றைக்கு நான் நானாக இருப்பதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்ற ஒன்றே அவரை நினைவு கூற போதுமானதாக இருக்கிறது.

தமிழ்மணம் அறிமுகம் செய்த பூங்காவின் முதல் இதழில் நண்பர்/அண்ணன் திரு. தங்கமணி அவர்களது கட்டுரை பெரியார் குறித்த மிக நுட்பமானதொரு பார்வையை முன்னிறுத்துகிறது.

http://poongaa.com/content/view/66/1/



Monday, September 13, 2010

இளங்கலை கணிதம் மாணவர்களுக்கு - ACM2010


இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்களுக்கு, Indian Institute of Mathematical Sciences, Taramani யில் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. அறிவியலில் கணிதத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக "Algebra and Analysis" இல் மாணவர்களின் புரிதலையும் பங்களிப்பையும் ஊக்கப்படுத்தும் முகமாக இப்பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.(பெரிது படுத்திப்பார்க்க புகைப்படத்தின் மேல் அழுத்தவும். கீழே சுட்டியில் தெளிவான வண்ணப்படம் காணக்கிடைக்கும்)

அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வி நிறுவனங்களில் துறை முதல்வரின் பரிந்துரையுடன், இறுதியாண்டு இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு கூறுகிறது. மேலும், Federation of Science clubs of Tamil Nadu (FSCT) இல் ஏற்கனவே உறுப்பினராக இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 20 -24 , 2010 ல் காலை 9 - மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு குறிப்பிடுகிறது.

பதிவுசெய்தல் அனைவருக்கும் இலவசம் எனவும், பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் கல்விச்சாதனங்கள், பங்கேற்புச் சான்றிதழ், சிற்றுண்டி, மற்றும் உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.



கீழுள்ள சுட்டியில் இப்பயிற்சி வகுப்பு குறித்து மேலதிகத் தகவல்கள் பெறலாம் :
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010Poster.pdf
(மேலே புகைப்படமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.)

கீழுள்ள சுட்டியில் விண்ணப்பப் படிவம் கிடைக்கிறது:
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010RegistrationForm.pdf

உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டிலோ அல்லது நட்பு வட்டத்திலோ யாருக்கேனும் பயன்படலாம், என்ற நோக்கில் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. டில்லி பாபு அவர்களுக்கு நன்றிகள்

பயண அனுபவம்

சமீபத்திய கார்பயண அனுபவம் பற்றி சில குறிப்புகள். நீல நிறத்தில் இருப்பவை எனது சொற்கள். மற்றவை ஓட்டுனருடையது.

"குட் மார்னிங்க சார்.. "

போய்க்கொண்டிருக்கும்போது, "யாரோ பெரியவங்களாயிருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன் சார், இவ்ளோ சின்னப்பையனா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை சார்.. "

" :( "

" பாட்டு போடட்டுமா சார்"

"ம் போடுங்க.."

"காலையில பக்தி பாட்டுலதான் சார் ஆரம்பிப்பேன், நீங்க பக்திப் பாட்டெல்லாம் கேப்பீங்கள்ள சார்"

"ம் கேட்பேங்க"

" இந்த அம்மாவுக்கு (எல். ஆர். ஈஸ்வரி) என்னா குரல் சார், எங்க ஊர் அம்மன் திருவிழா எல்லாம் இந்த அம்மாவோட பாட்டோடதான் ஆரம்பிக்கும்"

"இந்தோ வருது பாருங்க சார், இந்த காலேஜ் பசங்க, அன்னிக்கு ..... இப்படியெல்லாம் கூத்தடிச்சாங்க சார். நீங்க படிக்கும்போது, இப்படியெல்லாம் ஜாலியா இருந்தீங்களா சார்.."

" நீங்க சொல்ற அளவுக்கு இல்லை"

"பாத்தாலே தெரியுது சார், ஒரு மணி நேரமா ஒன்னா வர்றோம், இப்போதான் சார் பேசறீங்க, நானேதான் பேசிகிட்டு வந்தேன். "

" :) "

போகிற வழியில் வந்த ஒவ்வொரு பொறியியல் கல்லூரி பற்றியும் அதன் மாணவர்கள் மற்றும் நிறுவனர்கள் பற்றியும் ஒவ்வொன்றைக் குறிப்பிட்டார்.

" பக்திப்பாட்டு போதும் சார், வேற பாட்டு போடுவோமா சார்"

"ம். போடுங்க"

"சினிமாவெல்லாம் பாப்பீங்களா சார், சினிமா பாட்டெல்லாம் கேப்பிங்களா"

".. ம்.. கேட்பேங்க"

"என்னதான் சொல்லுங்க சார், ஆஸ்கர் அப்படி இப்படின்னாலும், நம்ம இளைய ராஜா பாட்டு மாதிரி வராது சார். வந்த புதுசுல கேக்கறமாதிரி இருக்கும்சார், ஆனா போகப்போக போரடிக்கும் சார், ஆனா இளையராஜா பாட்டு அப்படி இல்லை சார், எப்போ வேணாலும் கேக்கலாம் சார்."

" :) " (மனதிற்குள் : நீங்க மட்டும் பதிவரா இருந்தா உங்களைக் கும்மிருப்பாங்க)

"நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுல ஒரு ரேடியோ இருக்கும் சார், அதுல தினமும் காலைல கொஞ்ச நேரம் பாட்டு போடுவாங்க, அதக் கேட்டுட்டுதான் சார் ஸ்கூலுக்கே போவோம். இப்போதான் டிவி வந்துடுச்சு எப்போ பாத்தாலும் பாட்டு போடுறாங்க.."

"உங்களுக்கு இளையராஜா பாட்டு புடிக்குமா இல்ல ரகுமான் பாட்டு புடிக்குமா சார்"

" .... "

"ரெண்டு பேரும், நல்லாதான் சார் போடுறாங்க, ஆனாலும் நமக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒன்னு இருக்கும்ல சார்"

" ..... "

" இளையராஜாவோட பாட்டுல ஒரு உயிர் இருக்கும் சார். அவரு எல்லாத்தையும் ஏற்கனவே போட்டுவச்சுட்டாரு சார், இப்போ இருக்கவங்க அவரு போட்டு வச்சதை அங்கங்க உருவி கலந்து அடிக்கிறாங்க சார் அவ்ளோதான்"

" :) "


" நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

" .... "

" அப்படின்னா என்னா செய்வீங்க? எனக்கு கூட ஸைன்ஸல் ரொம்ப இண்டரஸ்ட் உண்டு சார்?

அது எப்படி வேலை செய்யுது, இது என்ன? இதை எப்படி சார் கண்டுபிடிச்சாங்க? என தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

" இந்த மனுசன் தனக்காக என்னவெல்லாம் கண்டு பிடுச்சு வச்சிருக்கான் சார், நினைச்சுப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு சார்"

" சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா சார்? எத்தனை மொழி சார் தெரியும்"

"ஹிந்தி தெரியாதுங்க.."

" நமக்கு தமிழும் கொஞ்சம் இங்கிலீசும் தான் வரும். அதான் நம்ம கலைஞர் ஹிந்தியெல்லாம் வேணாண்டா தமிழ மட்டும் படிடா போதும்னு சொல்லிட்டாரு"

" கோயம்பத்தூர் செம்மொழி மாநாடு டிவில பாத்தீங்களா சார்? எவ்ளவோ பேர் வெளிநாட்லேருந்தெல்லாம் வந்திருந்தாங்களாம் சார்"

அதெல்லாம்விட இந்த மொழின்றத யார் சார் கண்டுபிடிச்சாங்க? இது இப்படி எழுதினா இதுன்னு யாரு சொன்னாங்க? எப்படி உலகத்துல இத்தனை மொழியைக் கண்டுபிடிச்சாங்க?

எனக்கு தெரிந்தவரை எதையோ சொல்லி வச்சேன்.

" உங்களாள இன்னைக்கு ஒரு புது விசயம் தெரிஞ்சிகிட்டேன் சார், இதை நியாபகம் வச்சிருப்பேன், இரஞ்சித் சார் வந்தாரு அவருகிட்டேருந்து இதைத் தெரிஞ்சிகிட்டோம்னு"

"காபி சாப்பிடலாமா சார்.. "

" ம்.. சாப்பிடலாங்க.."

மொத்தமாக காரில் அவருடன் பயணம் செய்த அந்த ஐந்து மணி நேரத்தில், எவ்வளவோ பேசமுடிந்தது. அடிக்கடி " நான் ரொம்ப பேசி டிஸ்டர்ப் பண்றேனா சார் " னு கேட்டுக்கொண்டார். ஆனாலும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதோயொரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டும் என்று நினைக்காமல், தனக்கு என்ன தெரியும், எது தனக்கு ஆர்வமூட்டும் என்பதை அறிந்து அந்த திசையிலேயே உரையாடலை இட்டுச் சென்றுகொண்டிருந்தார். இடையிடேயே காரின் டோர்லாக்குகளைக் கையால்வது பற்றியும், தற்போது வெளிவரும் பல மாதிரிகளின் நிறை குறைகள் என்னென்ன என்றும், தனது பணி நிமித்தமான அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த பயணத்தின் உரையாடல் அவருடைய போக்கிலேயும், மையக்கரு அவரிடமிருந்தே வருமாறும் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். இந்த சார் எல்லாம் வேணாம்னு சொன்னாலும், பின்னர் சாரோடு எனது பெயரைச் சேர்த்திக்கொண்டு இரஞ்சித் சார் என்று அழைக்க ஆரம்பித்தார். புகைப்படக் கருவி எதுவும் கையில் இல்லாததால் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியோ ஆர்வமூட்டும் ஒரு மனிதராகவும் நல்ல பயண அனுபவமும் தந்தார் என்பது மட்டும் உண்மை.








Wednesday, September 1, 2010

உமாசங்கர் I.A.S. - விண்ணப்பம்





உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************************************************

இந்தத் தேரிழுப்பில் சற்று தாமதத்தில் வந்த கையாக இங்கே பதியப்படுகிறது.