Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, June 22, 2009

சில நேரங்களில் சில முகங்கள்

மறத்தல், நினைத்தல், மறந்தது போல் நடித்தல், பின் மீண்டும் நினைத்தல், மறத்தல்...... என்பதாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு.

பல சமயங்களில் இவையெல்லாம் மறந்து போனால் என்ன? என்று தோன்றுவதுண்டு. இவற்றை எனது மூளைச் செல்களின் இடுக்குகளில் துழாவி எடுத்து வெளியே எறிய முடிந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று கூடத் தோன்றுவதுண்டு.

வகைதொகையில்லாமல் ஒன்று கூடி பித்து நிலைக்கு விரட்டிவிடுவதுண்டு சில முகங்கள்.

அவர்கள் இப்போது எப்படியிருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு?
என திடீரென்று மின்னலாய் வெட்டிச் செல்லும் சில நினைவில் தங்கிய முகங்கள் பற்றிய ஒரு மீள்பார்வையே இவ்விடுகை.

**********************************************************************************************

மழையினை இரசிக்காத நாளும், ஆளுமுண்டா? ஆனால், அப்படியொரு மழைச்சாரலில் திடீரென தோன்றும் சில கேள்விகள் இவை "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? "

சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தினை உயர்த்தி தனது பெருமையை உயர்த்தத் துடித்துக்கொண்டிருந்தது அரசு. அதன் விளைவாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகள் இடம்பெயற நிர்பந்திக்கப்பட்டனர், வழமைபோல், சரியான மாற்று நிலங்கள் வழங்காமை, மற்றும் போதிய பதிலீடு செய்யாமை என அரசின் எல்லா குப்பைச் செயல்பாடுகளும் இங்கேயும் உண்டு. மேலும், அதிகமான ஊழல் நடந்துள்ளதாக உலக வங்கி பின்வாங்கிக் கொண்ட பெருமைமிகு செயல்பாடுகளும் இவ்வணைக்கட்டுத் திட்டத்திலுண்டு.





புகைப்படம்: http://www.narmada.org/images/satyagraha2003/sat8.jpg

"Narmada Bachao Andolan" மற்றும் மேதா பட்கர் உண்ணாநிலை ஆகியவை அநேகமாகப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், அதைப்பற்றி ஒன்றும் பேசப் போவதில்லை. அதுகுறித்த விரிவான கட்டுரையொன்று இங்கே
(நர்மதா தரும் செய்தி - http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html) இருக்கிறது. இது குறித்து மேலதிகத் தகவல்கள், தற்போதைய நிலவரம் மற்றும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்: http://www.narmada.org/

இவ்வணைப் பிரச்சனையை முன்வைத்து "Drowned out" என்ற ஆவணப்படமொன்று வெளிவந்தது. அதிலே புகாரியா மற்றும் அவரது மனைவி என்றொரு சிறு அதிவாசிக் குடும்பம் வரும். திடீரென மழை பொழியும் நாட்களில் அவர்களைப் பற்றிய நினைவு வரும். அப்போதே அவர்கள் வீட்டு வாசல்வரை தண்ணீர் வந்திருந்தது, "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? " கீழே அவ்வாவணப்படத்தின் சிறு பகுதியொன்று இருக்கிறது.




அத்திரைப்படத்தில் வரும் ஆதிவாசிகள் பலரும் பயன்படுத்தும் வார்த்தைகள் "அவர்கள் " - "நாங்கள்" ... எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் வல்லரசு இந்தியாவின் நவீனப் பிரஜைகள், மண்ணின் மைந்தர்களிடமிருந்து.. திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் புகாரியின் மனைவி "அவர்கள் நாங்கள் சாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்" - என்று குறிப்பிட்டு ஒரு விநாடி நிறுத்துவார், விழிகளிலிருந்து ஒரேயொரு சொட்டுக் கண்ணிர் விழும். அவ்வொருவிநாடி மொளனமும் ஒரு சொட்டுக் கண்ணீரும் ஏற்படுத்தும் வலி ..........

*************************************************************************************************

அடுத்ததாக கீழேயுள்ள ஆவணப்படம், ஆனந்த் பட்வர்தன் அவர்களால் எடுக்கப்பட்ட மற்றொரு ஆவணப்படம் "War and Peace". தலா 50 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் இரண்டு குறுந்தகடுகளாக கிடைத்தது. இப்படத்திலும் அரசியல் தளத்தில் உரையாடப பல இருந்தாலும், அதுபற்றி பேசப்போவதில்லை. கீழே கொடுக்கப்பட்ட சிறுபகுதியில் கூட அரசியல் உரையாடல் மட்டுமே இருக்கும், வேறு பகுதிகள் இணையத்தில் கிடைக்கவில்லை தற்போதைக்கு இதுதான் கிடைத்தது.







இவ்வாவணப் படத்திலும், பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் இருக்கும் அதிவாசிகள் சமூகத்தினர் பற்றிய சில பகுதிகள் உண்டு. அங்கேயே பிறந்து வளர்ந்து, பின் மருத்துவம் பயின்ற மருத்துவர் மீண்டும் தம்மக்களிடமே சென்று அங்கே அவரது மக்களுக்கு யூரேனியத் தாதுக்களினால் ஏற்படும் கதிரியக்கக் பாதிப்புகளுக்கான சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இறுதியில் அவருக்கும் புற்றுநோய் தாக்க, கண்கள் மட்டும் வெளித்தெரியும் படி ஒரு முகமூடியுடன் "உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்று பேட்டி அளித்திருப்பார்.

"அவர் இப்போது எப்படி இருப்பார்? என்னவாகியிருக்கும் அவருக்கு? "

அங்கேயிருக்கும் மக்களும் தங்கள் உரையாடலில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் "அவர்கள்"-"நாங்கள்"... ஆம் அவர்களினது வடுக்களின் மீது ஏறிநின்றுதான் நாம் தினமும் மாலையில் மின்விளக்கையேற்றுகிறோம்/ ஏற்றப்போகிறோம் வல்லரசுக் கனவுகளோடு.

***********************************************************************************

இவ்விடுகையை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் மேற்கு வங்கத்தின் "லால்கார்க்"கில் சில முகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு http://sanhati.com/front-page/1083/


தமிழில்: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!
இங்கேயும்: http://www.thenaali.com/thenaali.aspx?A=349
புகைப்படம் 29/06/09 அன்று பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டது.
************************************************************************************

இதெல்லாவற்றுக்கும் மேல் பித்து நிலைக்கு் விரட்டும் முகங்கள் சிலவுண்டு.

சில மாதங்களுக்கு முன் பி.பி.சி தனது வலைத்தளத்தில், பதுங்கு குழிகளுக்குள்ளே இருந்து மருட்சியோடு வானை நோக்கும் ஈழத்துப் பள்ளிச் சிறுவர் சிறுமியர் சிலரினது புகைப்படத்தை வெளியிட்டது. குண்டடிபட்ட இறந்த உடல்களைவிட இக்குழந்தைகளின் மருட்சி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாகவேயிருக்கிறது. மேலேயுள்ள எல்லா முகங்களும் குற்றவுணர்ச்சியில் சிறுகச் செய்தாலும், இக்குழந்தைகளின் முகங்கள் என்கைகளில் இருக்கும் உறைந்து போன இரத்தக் கறையின் வாடையோடு வந்து போகிறது. என்ன செய்து கழுவுவது....
????

************************************************************************************
மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......

Friday, January 25, 2008

குழந்தையும், இதுவும் அதுவும் - இடையில் நானும்

விழிப்புநிலையில் காலத்தைப் போக்கவேண்டுமே என நானும் குழந்தையும் விளையாட ஆரம்பித்தோம்.

எதை வைத்து விளையாடுவது.. என்று குழந்தைத் தனமாக நான் கேட்க, 'இந்தா பிடி நீ இதை வைத்துக்கொள் நான் அதை வைத்துக்கொள்கிறேன்' என்றது.
சரி விளையாடுவதற்கு முன் ஒரு சந்தேகம் என்றது குழந்தை..

இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள சந்தேகமா என்றேன்..
'அது'க்குள்ள இல்ல 'இது'க்குள்ள என்றது..
இதுக்குள்ளயா அப்படீன்னா.. இதோ உன்கிட்ட இருக்கே 'இது' இதுக்குள்ள என்றது.. 'இது'க்குள்ளயா சரி கேள் என்றேன்.

'இது' ஏன் இப்படியிருக்கிறது என்றது.. இதுவா 'இது' இதனால் இப்படியிருக்கிறது என்றேன்.. உடனே 'அது..?' என்றது குழந்தை.. ஓ 'அது'வா அது அதனால் அப்படியிருக்கிறது என்றேன்..
சரி விளையாடுவோமா என்றேன்..

இதனால், இப்படியிருப்பதால் 'இது' ஏன் 'இது'வாக இருக்கவேண்டும்.. என்றது.. ம்ம்ம்ம்ம்... அதனால் அப்படியிருக்கும் 'அது' 'அது'வாக இருப்பதால் இப்படியிருக்கும் 'இது' இதனால் இதுவாக இருக்கிறது என்றேன்.. ம்ஹீம் புரியல.. என்றது.. ம்ம்.. 'இது' 'இது'தான் 'அது' 'அது'தான் சரியா... ம் என்றது..
'இது' இப்படித்தான் 'அது' அப்படித்தான் சரியா.. ம் என்றது..

சரி சரி நாம் விளையாடுவோமா.. என்றேன்..

'இது' 'அது'வாக முடியுமா என்றது.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இதை அப்படியாக்கினால் அதனால் 'இது' 'அது'வாகிவிடும் என்றேன்.. அப்போ 'அது' 'இது'வாக முடியுமா..என்றது.. அதை இப்படியாக்கினால் இதனால் 'அது' 'இது'வாகிவிடும் என்றேன்..
இல்லையே அதிலிருந்து 'இது' 'அது'வாகத்தானே இருக்கிறது என்றது.. இல்லை இல்லை இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும்தான் இருக்கும்.

சரி நீ போய் தூங்கு..என்றேன்..

இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும், அதிலிருந்து 'அது' 'இது'வாகவும் 'இது' 'அது'வாகவும் இருந்தால் 'இது' 'இது'வா இல்ல 'அது'வா.. 'அது' 'அது'வா இல்ல 'இது'வா..

எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

இப்போது குழந்தை நகைத்தது... என்ன?? என்றேன்.. இல்ல அங்க பாத்தியா ஒரு புதிய 'அது' இருக்கு, அதையும் வச்சு விளையாடுவோமா..

சரி.. வா.. அந்த 'அது' அதனால் அப்படியிருப்பதால் அதுவாகயிருந்தால் இந்த புதிய 'அது' புதிய அதனால் புதிய 'அது'வாக இருக்கா..!? என்றது.. ஆம் என்றேன்..

மீண்டும் குழந்தை ஆரம்பித்தது, இந்தப் புதிய 'அது' வந்தவுடன் பழைய 'இது'வும் 'அது'வும் சேர்ந்து 'அது'வாவும், இப்புதிய 'அது' புதிய 'இது'வாவும் ஆயிடுச்சே ஏன்.. என்றது.

நீ விளையாடுறத விட தூங்கறதுதான் நல்லது.. என்றேன்.. யாருக்கு?? என்றது..

சரி எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

சரி நாளைக்கு புதிய 'அது'க்களையும் 'இது'க்களையும் வைத்துத் தொடருவோம் என்று கூறி கையில் ஒட்டியிருந்த கற்பூர வாசனையை முகர்ந்துகொண்டு குழந்தை உறங்கச் சென்றது..

கீழே சிதறியிருந்த வெங்காயத் தோல்களையும் காய்ந்து போன நீர்திவளைகளையும் பார்த்துவிட்டு உண்டு உறங்கச் சென்றேன்.


குறிப்பு: வெங்காயம் - நண்பருடனான உரையாடலில் கிடைத்தது.

Wednesday, October 17, 2007

இருவழிப்பாதை - தோழியுடன் ஓர் பயணம்


நீ எப்போது எப்படி எனக்கு அறிமுகமானாய் என்றெனக்கு நினைவிலில்லை. எத்தனையோ அறிமுகங்களின் நிகழ்வுகள் நினைவற்றுப் போவதுபோல் உன்னுடைய அறிமுக ஆச்சர்யங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் உன்னுடனான உறவு இனி இறுதிவரை நீளப்போகின்ற ஒன்று என்பது உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிகழ்வுகளின் தாக்கங்களில் சலிப்புற்றிருந்தாலும் சரி, சோம்பலின் வெளிப்பாடாய் முடங்கிக் கிடந்தாலும் சரி, நான்கு சுவற்றுக்குள் சிறைவைத்துக்கொண்ட என்னைப் பிடரியில் இடித்து, எனக்கும் இவ்வுலகிற்குமான நெருக்கத்தைப் புரிய வைப்பாய். அறைக்குள் முடங்கிக் கிடந்த என்னை அழைத்து மழைச் சாரலின் இன்பத்தையும், மாமரக் குயிலின் ஒலியீர்ப்பையும் உணர வைத்தவள் நீ. துக்கம், இன்பம், சலனம் என்றெந்தவொரு மனோநிலையையும் ஒரு மெல்லிய தென்றலினுதவியில் சீர்செய்து சமன் செய்யும் வித்தையை நீ எங்கு கற்றாய்.

உன்னுடனான இருத்தலைவிட உன்னோடான எனது பயணங்கள் எப்போதும் சுகமளிப்பவை. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே உன் தோள்களில் தலைசாய்த்து பயணிப்பதையே விரும்புகிறேன்.


என் பயணங்களின் நோக்கமும், மார்க்கமும் எதுவாயினும் உன்னுடனான பயணம் ஒரு சுகானுபவமே. இவ்வுலகத்தின் பல்வேறு பிரதேசங்கள், மக்கள், அவர்களின் வாழ்வியல், அறிமுகமில்லாக் குழந்தைகளின் கையசைப்பு அறிமுகம் என்று உன்னோடு கதைத்துக்கொண்டே செய்த எனது வாழ்வியல் பயணங்களில் எனது வாழ்க்கைப்பயணத்தை செழுமைப்படுத்தினாய்.
ஊடலும் கூடலும் கலந்த களவுவாழ்வுபோல் உன்னுடனான பூசல்கள், உன் கண்களை மறைத்து ஆடை அணிவித்து என் ஆடை களைந்த வேளைகள் மட்டுமே. என்ன செய்வது நீ என்னை மட்டுமா இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துகிறாய், எப்போதும் இருவழிப்பாதையாகவே இருக்கிறாய்.
நீயில்லாத ஒரு அறை சிறைக்கூடமாகவும், நீ இல்லாத ஒரு வாழ்வு தண்டனையாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
உன் தோழமையின் பெருமையுணர்ந்ததால்தான் பில்கேட்ஸ் கூட அவர் மென்பொருளுக்கு "windows" என்று உன் பெயரை வைத்திருப்பாரோ...!!!