Showing posts with label கிரகிப்பு. Show all posts
Showing posts with label கிரகிப்பு. Show all posts

Friday, October 31, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - IV - உணர்வு - கலாச்சாரம்



ஆன்மீகம் - பற்றிய முந்தய
ஆன்மீகம் - கிரகிப்பு - I, ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை & ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல் ஆகிய மூன்று பதிவுகளின் தொடர்ச்சியாக ஆன்மீக உணர்வு, நம்பிக்கை மற்றும் அதனடிப்படையில் விளையும் சமூகக் கலாச்சாரம் மற்றும் அதன் எதிர்வினைகள் என இக்கட்டுரை நீள்கிறது.

ஆன்மீகம், மனிதனின் வளர்சூழல் சார்ந்த பார்வையினடிப்படையில் எழும் உணர்வு ரீதியான தேடல் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால், ஆன்மீக உணர்வுகள் வளர்சூழல் சார்ந்த கிரகிப்புகளினடிப்படையில் பழக்கப்படுத்திக்கொள்பவை என்ற கண்ணோட்டத்தில் அது இயற்கையிலேயே பிறக்கும்போது தோன்றுமோர் உணர்வல்ல. வளர்சூழலில் தோன்றியதாயிருந்தாலும் ஆன்மீகமும் மனிதனின் சிந்தனைத்திறத்தால் உருவாகும் ஓர் உணர்வே.

இவ்வுணர்வு ரீதியினாலான தேடலும், கடுமையான பயிற்சியின் மூலமே சாத்தியப்படுத்தப் படமுடியும் என்பதாக நம்பப்படுகிறது. மேலும், இப்பிரபஞ்ச இரகசியத்தை நோக்கிய ஒரு உண்ணதத் தேடல் என்றும், அத்தேடலின் விளைவால் அறிந்த உண்மைகளின் உதவியோடு சமூக வாழ்விலிருந்து மனிதனை உய்விப்பதையே தனது தலையாயக் கடமையாக வரிந்துக்கொள்கிறது ஆன்மீகம். மேலும், மனதை சுத்தப்படுத்துதல், அழிவில்லாத ஆன்மா, பிரபஞ்ச இரகசியத்தை உணர்தல் என்பன போன்ற கதையாடலாக சமூகத்தினுள் நுழைந்து தனது இருத்தலுக்கான அவசியத்தையும், நியாயத்தையும் கற்பிக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகத் தேடல் ஒருவனது வாழ்வினை முழுமைப்படுத்துவதாகவும், மனிதனின் பிறப்பே இத்தேடலுக்காக, போன்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகள் மெல்ல உடலைத் தாழ்த்தி, ஆன்மாவை முதன்மைப் படுத்து முனைகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகளைக் கொண்ட இனக்குழுக்களின் உளவியல் எப்படியிருக்கிறது, அல்லது அதன் விளைவாகச் சமூகச் சூழல் எப்படி உருமாறியிருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

ஆன்மாவையும், மனதையும் முதன்மைபடுத்தி உடலை வருத்திக்கொள்ளும் அல்லது தாழ்த்திக்கொள்ளும் இனக்குழுக்களிடம் இருக்கும் பொதுவான பண்புகளில் சில:

1. குழந்தைகளுக்கு தண்டனையாக உடலில் வலியை ஏற்படுத்துதல்.

2. சமூகத் தண்டனைகளாக உடல் வன்முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல்.

3. பெண்களை, ஒரு பொருளாகக் கருதுதல். மேலும், உடல்குறித்தான கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி பெண்களை ஒடுக்குதல். இதன் மூலம் திருமணங்களை ஒரு வியாபாரம் போல பாவித்து, பொருள் கொடுத்துப் பெண்ணின் உடலைக் கொள்ளுதல். (இது நமது சமூகத்தில் இன்னும் மோசமாகயுள்ளது, பெண்ணை ஒரு பயனுள்ள பொருளாகக் கூடக் கருதாமல், பெண்ணையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்தல்.)

4. இவ்வகைச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு உடல் ரீதியான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், மது, போதை ஆகியப் பழக்கங்களில் ஆர்வம் காட்டுதல்.

5. மணவாழ்க்கைக்கு வெளியே (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவு வைத்துக் கொள்ளுதல், உயிரை எடுக்கும் அளாவிற்கான குற்றமாகக் கருதுதல்.

6. ஆயுதம் தாங்கியக் கடவுளரை வழிபடுதல்.

இவை பல்வேறு தென்னாப்பிரிக்க மற்றும் தென்னமெரிக்கப் பழங்குடியினரையும், ஒப்பீடு செய்தும், வட அமெரிக்காவின் சில மாகாணங்களில் பெருகிவரும் வன்முறைக்கும், இளைஞர்களின் போதைகளுக்குமான காரணங்களாகவும் கண்டறியப்பட்டவை. இப்பண்புகளோடு நமது தற்ப்போதைய சமூகப் பண்புகளின் ஒப்புமையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

மேலும், முன்னர் விடுத்த இரண்டு புள்ளிகளையும் நினைவு கூர்தல் நன்று. முற்றிலும் துறத்தல் என்பதில் துவங்கிய தத்துவங்கள் பின்னர் தங்களது இறை வடிவத்தில் கூட நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளாதது, இயற்கை குறித்தான கருத்துக்களில் மனித விலங்கின் சமூக வாழ்விலிருந்து விலகி, பேரண்டம், பிரபஞ்சத்தின் தோற்றம், உண்மை அல்லது தோன்றவைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்/சக்தி குறித்த கதையாடல்களுக்குள் நுழைந்தது, என தொடர்ச்சியாக உயிரும் பொருண்மையும் சிறுமைப்படுத்தப்பட்டதை உணர்தல் அவசியம்.

வளர்சூழலின் கிரகிப்பினடிப்படையில் தோன்றிய ஓர் உணர்வாகயிருந்தாலும், இப்படியானதொரு உணர்வை மறுப்பதற்கில்லை. சிந்தனைத் திறனால் ஏற்படும் அறிதல் வேட்கைக்கான ஒரு வடிகாலாகவே இவ்வகையுணர்வு செயல்படுகிறது. இவ்வுணர்வும், ஒருவகை போதைக்கிணையான ஒன்றாகவே நோக்கலாம். இவ்வகைச் செயல்பாடுகளின் போது மூளை எனப்படும் உயிர்வேதிக்கலனில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் சுரக்கும் ஒரு வகைத் திரவம் அளிக்கும் சுகானுபவமே இவ்வுணர்வும். ஆன்மீகம் இவ்வகையானச் செயல்பாடே என்பதைச் செயற்கையாகத் தியானத்தின் உணர்வை ஒருவரின் மூளையின் சில பகுதிகளை மின் தூண்டியதன் மூலம் அறிவியல் நிரூபித்திருக்கிறது.[1,2] உணர்வுகளின் ஒன்றான வலியை முதன்முதலாக அருதியிட்டு எண்மதிப்பில் அளப்பதற்கான படிநிலையை அடைந்திருக்கின்றன ஆய்வுகள்[3]. வரும் காலங்களில் உணர்வுகள் உணரப்படவேண்டியவை போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகலாம்.

ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

பிறக்கும் போது பாலூட்டிவிலங்குகளுக்குப் பொதுவானதாகத் தோன்றும் பலவகையுணர்வுகள் தவிர அனைத்தும் வளர்சூழல், மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்தவை. மனிதனின் சுற்றுச் சூழலும், அறிவியல் அறிவும் வளர்ந்து வரும் சூழலில், இவ்வகையுணர்வுகளும் அதனடிப்படையில் முளையில் உருவகிக்கப்படும் பிம்பங்களும் மாற்றமடைந்து வருவன. உதாரணமாகப் பிரபஞ்சம் குறித்த அரைகோள பிம்பம் துவங்கி பால்வழி அண்டத்தின் அமைப்பு வரை.

இப்பூமியில் உயிர் தோன்றியிருந்தாலும் அல்லது தோன்றாவிட்டாலும் பொருண்மை மற்றும் ஆற்றல் உறவினடிப்படையில் பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கும். இப்பிரபஞ்சம் ஏதோவொரு நோக்கத்தினடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது இப்படியியக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் குறித்த புரிதலில் ஒருவேளை ஆன்மீகத்தில் விடைகிடைத்தாலும் சூரியன் தன் அழிவை நிறுத்திவைத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும், இப்பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் நிகழ்கின்றன என்ற உணர்வே மனிதனின் சுயார்வத்தினால் விளைந்த கேள்விக்கான தேடுதல் வேட்கையைத் தணிப்பதற்கான அனுமானமேயன்றி, பூமிக்குச் சூரியனைச் சுற்றுவதற்கோ அல்லது தனது பரப்பில் உயிரைத் தோற்றுவித்திக் கொள்ளவேண்டுமென்ற நோக்கமோ எண்ணமோ கிடையாது.

உயிரின் இரகசியம்- ஆன்மீகத்தின் வாழ்வும் சாவும், இவையணைத்தும் இங்கே புதைந்திருக்கிறது பொருண்மை (உணவு).
இப்படியாக எழுதத் தூண்டிய சாத்தானின் உறக்கத்தினால், எனது இருள்நீங்கி துவங்குகிறது உங்களிருள், தற்காலிக முடிவுகளோடு தற்காலிகமாக முடிகிறது கட்டுரைத் தொடர். :)


1.
இனி அறிவியல் மூலமாக யோகநிலை அடையலாம் - சதுக்கபூதம்
2. http://www.nytimes.com/2007/08/23/science/23cnd-body.html?_r=2&hp&oref=slogin&oref=slogin
3. "எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள் - கையேடு

இதையும் வாசிக்கலாம்
காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல் - பைத்தியக்காரன்.


புகைப்படம்: பிரெஞ்சு ஓவியம்.

Thursday, October 2, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்









ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும் ஒப்புமைப்படுத்தப்படுகின்றன.

ஆன்மீகம் மற்றும் அறிவியல் இவையிரண்டும் ஒன்றா? இரண்டுமே தேடல் அடிப்படையிலானவையெனில் அவையிரண்டும் ஒன்றுதானே...??

ஆன்மீகம், ஒரு இலக்கு நோக்கிய தேடல். ஆனால், அறிவியல் இலக்கற்றத் தேடல். இவையிரண்டும் அடிப்படையிலேயே முரணானவை.


ஆன்மீகம் என்பது முடிவுகளை எழுதிவிட்டு செய்யப்படும் ஆய்வுக்கிணையானது. முடிவுகளுக்குச் சாதகமானவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை அனுகுவது. முன்னனுமானங்கள் அறிவியலிலும் இருக்கலாம், ஆனால் அவ்வனுமானங்களுக்கு முற்றும் எதிரான முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.

சூழல் குறித்தான பார்வையில் விளைவதாலேயே, அறிவியல் ஆன்மீகம் இரண்டுமே பரிணாமத்தில் மனிதனுக்கான சிந்தனைத் திறன் தோன்றியவுடனேயே துவங்கியவையாக இருக்க வேண்டும்.

ஒரு மூலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முன்வைத்துவிட்டு அதனை நோக்கிய தேடலும், நம்மைச் சுற்றியிருப்பவை பற்றிய புரிதலை நோக்கிய தேடலும், முற்றிலும் முரணானவை.


இரண்டின் துவக்கப் புள்ளியும் சூழல் குறித்தான பார்வையில் துவங்குவதாலேயே அவை இணையும் புள்ளிகள் பல இருக்கலாம், பல இடங்களில் அப்படியொரு தோற்ற மயக்கத்தைக் கொடுக்கலாம். அப்படிச் சந்தித்தாலும், ஆன்மீகத்திற்கு அதன் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள இச்சந்திப்பு புள்ளிகள் தேவைப்படலாம். ஆனால், அறிவியலுக்கு இவ்விணைவுப் புள்ளிகள் தேவையா என்றால், தேவையற்றதாகவேயிருக்கிறது.


உதாரணமாக ஆன்மீகத்தில் ஆற்றல் குறித்த கதையாடல் எப்போதும் ஒளிவடிவமாக வர்ணிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்புள்ளியில் ஆன்மீகம் பேசும் “ஆற்றல்” மனிதனின் சூழல் குறித்தான கிரகிப்புத்தன்மையில் (perception) விளைந்தது என்பது தெளிவாகிறது. ஆன்மீகம் என்பதும் வளர்சூழலிருந்து தோன்றிய ஒன்றாகயிருப்பதால் சூழல் குறித்தான நிகழ்வுகளையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விளைந்தவையாகவேயிருக்கின்றன. அதனாலேயே ஆற்றல் குறித்தான ஆன்மீகக் கதையாடல் அனைத்தும் கண்ணுறு ஒளிவடிவமாகவே ஆற்றலை உருவகப்படுத்துகின்றன. ஆனால், அறிவியல் பல வகை ஆற்றல்களைப் பற்றிய புரிதல் கொண்டுள்ளது. ஆன்மீகம் பேசும் ஆற்றல் என்பது எப்போதும் கண்ணுறு ஒளிவடிவமாகவேயிருப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று ஆதிகால மனிதனின் ஆற்றல் குறித்தான கிரகிப்புத்தன்மை சார்ந்தது. இவை ஒரு வகையான கட்டமைப்பின் அடிப்படையில் பழக்கப்படும்/பழக்கப்படுத்தப்படும் நிகழ்வுகள். இது வெறும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால், மனிதனது மூளையின் செயல்பாடுகளுள் பல இப்படியான கிரகிப்புகளின் அடிப்படையில் இயங்குவதுதான். இதனடிப்படையிலேயே நமது மூளை தொடர்பற்ற நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பொருளறிந்து பார்த்து, தமக்கான முடிவுகளை ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் ஒரு கருவியாகவேயிருக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகம் பெரும்பாலும், பொருண்மை குறித்த கதையாடலைத் துவங்குகிறது. ஆதாவது மூளை என்னும் பொருண்மையில் தோன்றும் மனது/சிந்தனை மற்றும் அதன் செயல்பாடுகளினது ஆற்றலானது இப்பிரபஞ்ச இயக்கம் மற்றும் அவ்வாற்றல் மூலத்திற்குமான தொடர்பு, குறித்தான கதையாடலாகயிருக்கிறது.

இக்கூற்றுகளில் எதுவும் தவறிருப்பதுவாகத் தெரியாது, ஏனெனில் மனித மூளையில் தோன்றும் மனது என்பது உருவமற்றது (மனது என்ற கருத்தே கேள்விக்குறியாகிக் கொண்டுதானிருக்கிறது). மனித மூளையின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் மின் மற்றும் காந்த சமிஞ்சைகள் குறித்து அறிவியல் பேசியதால், இதைத்தான் ஆன்மீகம் குறிப்பிடுகிறது என்று எளிமையாகத் தொடர்புபடுத்த முடிந்தது. இம்மனதிலிருந்து தோன்றும் ஆற்றலானது இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலத்துடன் நம்மைத் தொடர்புபடுத்துவதாகவும் எளிதாகத் தொடர்பு படுத்த முடிந்தது. அப்படித் தொடர்பு படுத்துவது என்ன தவறா? எப்படியானாலும் அதைத்தானே அறிவியலும் சொல்கிறது என்பதுதான் மனித மூளையின் உடனடிச் செயல்பாடு. இது, ஒரு வகையில் மனிதனின் சிந்தனைத் திறத்தினால் எழும் வேட்கையினைத் தணிப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் ஒரு அனுமானம் அல்லது முடிவு.

இப்புள்ளியில் மேம்போக்காக வெறும் கருத்தாகப் பார்த்தால் அறிவியலும் ஆன்மீகமும் இணையத்தான் செய்கின்றன. ஆனால், அறிவியல் மூளையிலிருந்து மின் மற்றும் காந்த விசைகளின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாலும் அதோடு நின்றுவிடுவதில்லை. மூளை எனும் மின்வேதிமக்கலனில் இருக்கும் நியூரான்கள் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. ஒருவர் தியானம் அல்லது அமைதியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, நமது மூளையில் உருவாகக் கூடிய சில வேதி மாற்றங்கள் மற்றும் நியூரான்களின் இணைப்புகளின் மாற்றத்தினால் ஏற்படும் செயல்பாட்டு மின்னழுத்தம் 0.0005 - 0.0015 வோல்டுகளாகவும், இவ்வகை மின்சமிஞ்சைகளின் வீச்சு 0.000010 - 0.000050 வோல்டுகளாகவும், இருப்பதாக அளவிடப்பட்டிருக்கிறது. மூளையில் நிகழும் அயனி இயக்கங்களின் நிகழ்வுகளால் ஏற்படும் மின் மாற்றங்களை மனிதனின் மண்டையோட்டு எலும்புகளுக்கு வெளியே அளவிடுவது இயலாத காரியம். ஆனால், இவ்வகை அயனிகளின் இயக்கங்களினால் ஏற்படும் காந்தப்புலம் அளவிடக் கூடியது. இப்படி அளவிடப்பட்ட காந்தப்புலமானது ஏறத்தாழ ~10ன் அடுக்கு -15 டெஸ்லா (காந்தப் புலத்தின் அலகு). இக்காந்தப்புலத்தின் எண்மதிப்பு பூமியின் காந்தப் புலத்தைவிட(~10-6T)ஏறத்தாழ ஒன்பது அடுக்குகள்(ஒன்பது மடங்குகள் அல்ல ஒன்பது அடுக்குகள்) குறைந்தது. இவ்வலிமை குறைந்த புலத்தை பூமியின் புறவிசைகளிலிருந்து தனித்து அளக்க வேண்டுமெனில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.[1]

இப்படிப்பட்ட அமைதிநிலையில் தியானித்திருக்கும் ஒருவர், பூமியுடன் சேர்ந்து மணிக்கு 1,038 மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றி வினாடிக்கு 18.5 மைல்கள் வேகத்திலும், பால்வழியிண்டத்தின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் சுற்றிக் கொண்டும், பேரண்டவெளியில் ஏறத்தாழ வினாடிக்கு 1000 மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டுமிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மனிதனது மூளையிலிருந்து வெளிப்படும் இவ்வலிமை குறைந்த காந்த விசையின் செறிவு, மற்றும் அவ்விசைகளின் பாயம் செயல்படும் வெளியின் அளவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இப்பேரண்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆற்றல் மூலத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமா..??[1]

இயற்கை மற்றும் சூழல் குறித்த பார்வை, இரண்டிலும் பெரிதும் குவிமையப்படுத்தப்படுவது, இப்பேரண்டமும் பிரபஞ்ச இயக்கங்களும் மட்டுமே. உயிர், உடல் குறித்தான பார்வைகள் முதன்மைப்படுத்தப்படுதில்லை. இவ்வகையான, அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் துறக்கும் மெய்யியல் மற்றும் மனிதகுல வாழ்வையும் உலகத்தின் உண்மையும் "உணரும்" கதையாடலைக் கொண்ட ஆன்மீகம் மனித சமூகத்தின் கண்காணிப்பாளனாகத் தம்மை மாற்றிக் கொண்டதும் அதனைத் தொடர்ந்து சிந்தனைகள் அசைக்கமுடியா நம்பிக்கைகளாக மாறியதையும் அதன் எதிர்விளைவுகளைக் குறித்தும் அடுத்த பகுதியில் தொடர்வோம். மேலும், உணர்வுகளுக்கிடையான ஏற்றத்தாழ்வு அரசியலை மையப்படுத்தியதன் மூலம் அதன் நிறுவனத்தன்மையை உறுதிபடுத்திக்கொண்டது.

நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியலில் கூட இவ்வகையான ஏற்றத்தாழ்வுகளும் நம்பிக்கைகளும் உண்டு ஆனால் அது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக அறிவியல்/விஞ்ஞானம் என்றாலே பேரண்டம், பேரண்ட இயக்கம், துகள்பொளதீகம் போன்றவற்றை முன்னிறுத்துதல்.


அறிவியலை விமர்சிக்கும்(**) மற்றும் ஆழமான புரிதலில் விவாதிக்கும் வேறு பல கட்டுரைகள் .(*)

(*)
தமிழனின் இட்லியும் ஏகாதிபத்தியமும் - மீன்துள்ளியான்

http://ravisrinivas.blogspot.com/2008_06_01_archive.html

அழிவின் அறத்தில் உயிரும் பொருளும் - நாகார்ஜூனன்

ப்ரூனோ லத்தூர் - விஞ்ஞானமும் உண்மை-உருவாக்கமும் - நாகார்ஜூனன்

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது - ராஜன்குறை(சுட்டி-மீள்பதிவு ஜமாலன்)

திரு. நாகார்சுனன், ரவிஸ்ரினிவாஸ் ஆகிய இருவரின் கட்டுரைகள் மற்றும் ராஜன்குறையின் இக்கட்டுரையும், ஆழ்ந்த கருப்பொருட்களை முன்னிறுத்தி விவாதிப்பவை. இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கு ஓரளவிற்குப் புரிந்த கட்டுரைகளை மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளேன்.


(**)

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?


அறிவியல்-ஆன்மீகம் குறித்த வேறுசில கட்டுரைகள்.

http://cyrilalex.com/?p=403
http://cyrilalex.com/?p=400
http://cyrilalex.com/?p=401

[1].
“Prayer - A neurological Inquiry” - David C.Haas.

Monday, August 11, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி.

"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.


II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.


இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.


கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )

ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.

தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).


உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.


ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.

தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.

சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.

ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).


[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).

Sunday, August 10, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - I


இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1]


இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு உரையாடல்.

கடவுள் - இந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலம் உண்மையில் வியக்க வைக்கிறது. இவ்வார்த்தை வெறும் வார்த்தையல்ல, மொழியின் உணர்வு ரீதியிலான ஆளுமையை சர்வ வல்லமையுடனும், வீச்சுடனும் தெரியப்படுத்தும் ஒரு வார்த்தை. இவ்வார்த்தையும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் (அல்லது அவ்வார்த்தையின் போர்வைக்குள்) மட்டுமே தற்போதைக்கு, உலகின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமென்று கூறலாம்.

கடவுள் - சர்வவல்லமை படைத்த படைப்பாளி, ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பருப்பொருட்களும் எவ்வாறிருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற வரையறையை வகுத்தவன்(ள்). ஆனால், யாரும் கண்டறியமுடியா உருவமுமில்லா, வரையறையுமில்லாத ஒன்றாக குவார்க்குகளுக்கும் (quarks - அணுவின் உட்கருவுக்குள்ளிருக்கும் துகள்) நெபுலாக்களுக்குமிடையே (nebulas - பேரண்டத்தில் இருக்கும் அடர்வான ஹைட்ரஜனைப் பெரிதும் உள்ளடக்கிய வாயு) கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் அச்சர்வவல்லமை. உருவமில்லாதது என்றவுடனேயே, கோயில்களுக்குள் இருக்கும் உருவங்களெல்லாம் வெறும் கலைவடிவங்களாகவும், அக்கற்சிலைகளைவிட அதைச் செதுக்கிய சிற்பி அதிக மதிப்பையும் பெற்றுவிடுகிறான் என்பதுதான் உண்மை. அப்படியானால் உருவம் கொடுத்த படைப்பாளி சிறந்தவனாகிவிடுகிறான். அது அவனது உணர்தலுக்கான உருவமெனில், அதே கடவுளரை நிர்வாணமாக உணரும் ஒரு படைப்பாளி நாடு கடத்தப்படவேண்டியவனாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சித்தரிக்கவேண்டிய அவசியமில்லையென்றாகிறது, அல்லது, அப்படிச் சித்தரிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தின் பின்னிருக்கும் பக்தி கேள்விக்குறியதாகிறது. (இப்புள்ளிக்கு மீண்டும் வருவோம்)

குவார்க்குளையும், நெபுலாக்களையும், கடவுள் படைத்தானா? என்ற விடை தெரியாத கேள்வி ஒரு புறமிருந்தாலும், உயிரையும் உயிருள்ளவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது ஆய்வகங்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது[2]. அப்படியானால், உயிருள்ளவற்றுக்கு கடவுள் தேவையில்லை, ஏனெனில் அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிரற்ற குவார்க்குக்கும், நெபுலாவுக்கும் ஒருவேளை நன்றிக்கடனாக அது (கடவுள் என்ற கருத்தாக்கம்) தேவைப்படலாம்.

உருவமுள்ள மற்றும் ஓரிடத்தில் அமர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளைச் செய்யும் கடவுளே அவசியமற்றதாகிவிட்டது எனும்போது அதனைச் சுமந்துகொண்டிருக்கும் மதங்களும் மத அடையாளங்களும் குப்பையில் வீசப்பட வேண்டியவையாகிவிடுகிறது. அதனால், முப்பணிகளைச் செய்யும், உருவமுள்ள கடவுள் மற்றும் மதம் ஆகிய இரண்டுவார்த்தைகளையும் அதனுடன் சேர்ந்த விவாதங்களையும் இப்போதே புறந்தள்ளிவிடலாம். அவை அயற்சி தருபவை. ஆன்மீகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்த உரையாடலாகத் தொடரலாம்.

“ஆன்மீகம்”, ஒரு அதிர்வை நம்மைச் சுற்றி உருவாக்ககூடிய வார்த்தை, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையே உள்ள தொடர்பை அற்ப மானிடருக்குப் புரிய வைக்கும், கடவுளுக்கிணையான மற்றொரு வார்த்தை. இப்படியான கருத்துருவாக்கத்துக்குப் பின்னிருக்கும் கலாச்சாரம், சமூகச்சூழல், அரசியல், அறிவியல், மாயப் பிம்பங்கள், உணர்வுகள் என இது குறித்தான உரையாடலைத் தொடர்வோம்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு என்ற திசையில் உரையாடல் தொடரும்.