Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, October 4, 2010

காகங்களுக்காக சாலை விதிகளை மதிப்போம்

இந்தக் காணொளி, மனிதன் அமைத்துக்கொண்ட சமூக அமைப்பை நம்மை சுற்றியுள்ள ஒரு உயிரி எப்படி உள்வாங்கியிருக்கிறது என்பதை அற்புதமாக விளக்குகிறது. இந்தியாவில் இருக்கும் காகத்தின் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்.

*****************************************************************************************

***************************************************************************************

Friday, September 17, 2010

இன்று இப்படியாக

தமிழகம் இன்று இப்படியாகப் இருப்பதில், மிகவும் முக்கியப் பங்காற்றியவர்களுள் ஒருவர் என்றால் அதில் தந்தைப் பெரியாருக்கு மிக முக்கியமான இடமுண்டு.

பெரியாரின் பிறந்த தினமான (17 செப்டம்பர்) இன்றைக்கு அவரது உழைப்பையும் சிந்தனைகளையும் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.




பெரியாரிய சிந்தனைகளையோ அல்லது பெரியாரினது எழுத்துக்களையோ அதிகம் வாசித்தவன் கிடையாது. அதனால் பெரிய திறனாய்வுக் கட்டுரை எழுதும் அளவிற்கு சரக்கும் கிடையாது. ஆனால், இன்றைக்கு நான் நானாக இருப்பதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்ற ஒன்றே அவரை நினைவு கூற போதுமானதாக இருக்கிறது.

தமிழ்மணம் அறிமுகம் செய்த பூங்காவின் முதல் இதழில் நண்பர்/அண்ணன் திரு. தங்கமணி அவர்களது கட்டுரை பெரியார் குறித்த மிக நுட்பமானதொரு பார்வையை முன்னிறுத்துகிறது.

http://poongaa.com/content/view/66/1/



Monday, September 13, 2010

பயண அனுபவம்

சமீபத்திய கார்பயண அனுபவம் பற்றி சில குறிப்புகள். நீல நிறத்தில் இருப்பவை எனது சொற்கள். மற்றவை ஓட்டுனருடையது.

"குட் மார்னிங்க சார்.. "

போய்க்கொண்டிருக்கும்போது, "யாரோ பெரியவங்களாயிருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன் சார், இவ்ளோ சின்னப்பையனா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை சார்.. "

" :( "

" பாட்டு போடட்டுமா சார்"

"ம் போடுங்க.."

"காலையில பக்தி பாட்டுலதான் சார் ஆரம்பிப்பேன், நீங்க பக்திப் பாட்டெல்லாம் கேப்பீங்கள்ள சார்"

"ம் கேட்பேங்க"

" இந்த அம்மாவுக்கு (எல். ஆர். ஈஸ்வரி) என்னா குரல் சார், எங்க ஊர் அம்மன் திருவிழா எல்லாம் இந்த அம்மாவோட பாட்டோடதான் ஆரம்பிக்கும்"

"இந்தோ வருது பாருங்க சார், இந்த காலேஜ் பசங்க, அன்னிக்கு ..... இப்படியெல்லாம் கூத்தடிச்சாங்க சார். நீங்க படிக்கும்போது, இப்படியெல்லாம் ஜாலியா இருந்தீங்களா சார்.."

" நீங்க சொல்ற அளவுக்கு இல்லை"

"பாத்தாலே தெரியுது சார், ஒரு மணி நேரமா ஒன்னா வர்றோம், இப்போதான் சார் பேசறீங்க, நானேதான் பேசிகிட்டு வந்தேன். "

" :) "

போகிற வழியில் வந்த ஒவ்வொரு பொறியியல் கல்லூரி பற்றியும் அதன் மாணவர்கள் மற்றும் நிறுவனர்கள் பற்றியும் ஒவ்வொன்றைக் குறிப்பிட்டார்.

" பக்திப்பாட்டு போதும் சார், வேற பாட்டு போடுவோமா சார்"

"ம். போடுங்க"

"சினிமாவெல்லாம் பாப்பீங்களா சார், சினிமா பாட்டெல்லாம் கேப்பிங்களா"

".. ம்.. கேட்பேங்க"

"என்னதான் சொல்லுங்க சார், ஆஸ்கர் அப்படி இப்படின்னாலும், நம்ம இளைய ராஜா பாட்டு மாதிரி வராது சார். வந்த புதுசுல கேக்கறமாதிரி இருக்கும்சார், ஆனா போகப்போக போரடிக்கும் சார், ஆனா இளையராஜா பாட்டு அப்படி இல்லை சார், எப்போ வேணாலும் கேக்கலாம் சார்."

" :) " (மனதிற்குள் : நீங்க மட்டும் பதிவரா இருந்தா உங்களைக் கும்மிருப்பாங்க)

"நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுல ஒரு ரேடியோ இருக்கும் சார், அதுல தினமும் காலைல கொஞ்ச நேரம் பாட்டு போடுவாங்க, அதக் கேட்டுட்டுதான் சார் ஸ்கூலுக்கே போவோம். இப்போதான் டிவி வந்துடுச்சு எப்போ பாத்தாலும் பாட்டு போடுறாங்க.."

"உங்களுக்கு இளையராஜா பாட்டு புடிக்குமா இல்ல ரகுமான் பாட்டு புடிக்குமா சார்"

" .... "

"ரெண்டு பேரும், நல்லாதான் சார் போடுறாங்க, ஆனாலும் நமக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒன்னு இருக்கும்ல சார்"

" ..... "

" இளையராஜாவோட பாட்டுல ஒரு உயிர் இருக்கும் சார். அவரு எல்லாத்தையும் ஏற்கனவே போட்டுவச்சுட்டாரு சார், இப்போ இருக்கவங்க அவரு போட்டு வச்சதை அங்கங்க உருவி கலந்து அடிக்கிறாங்க சார் அவ்ளோதான்"

" :) "


" நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

" .... "

" அப்படின்னா என்னா செய்வீங்க? எனக்கு கூட ஸைன்ஸல் ரொம்ப இண்டரஸ்ட் உண்டு சார்?

அது எப்படி வேலை செய்யுது, இது என்ன? இதை எப்படி சார் கண்டுபிடிச்சாங்க? என தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

" இந்த மனுசன் தனக்காக என்னவெல்லாம் கண்டு பிடுச்சு வச்சிருக்கான் சார், நினைச்சுப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு சார்"

" சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா சார்? எத்தனை மொழி சார் தெரியும்"

"ஹிந்தி தெரியாதுங்க.."

" நமக்கு தமிழும் கொஞ்சம் இங்கிலீசும் தான் வரும். அதான் நம்ம கலைஞர் ஹிந்தியெல்லாம் வேணாண்டா தமிழ மட்டும் படிடா போதும்னு சொல்லிட்டாரு"

" கோயம்பத்தூர் செம்மொழி மாநாடு டிவில பாத்தீங்களா சார்? எவ்ளவோ பேர் வெளிநாட்லேருந்தெல்லாம் வந்திருந்தாங்களாம் சார்"

அதெல்லாம்விட இந்த மொழின்றத யார் சார் கண்டுபிடிச்சாங்க? இது இப்படி எழுதினா இதுன்னு யாரு சொன்னாங்க? எப்படி உலகத்துல இத்தனை மொழியைக் கண்டுபிடிச்சாங்க?

எனக்கு தெரிந்தவரை எதையோ சொல்லி வச்சேன்.

" உங்களாள இன்னைக்கு ஒரு புது விசயம் தெரிஞ்சிகிட்டேன் சார், இதை நியாபகம் வச்சிருப்பேன், இரஞ்சித் சார் வந்தாரு அவருகிட்டேருந்து இதைத் தெரிஞ்சிகிட்டோம்னு"

"காபி சாப்பிடலாமா சார்.. "

" ம்.. சாப்பிடலாங்க.."

மொத்தமாக காரில் அவருடன் பயணம் செய்த அந்த ஐந்து மணி நேரத்தில், எவ்வளவோ பேசமுடிந்தது. அடிக்கடி " நான் ரொம்ப பேசி டிஸ்டர்ப் பண்றேனா சார் " னு கேட்டுக்கொண்டார். ஆனாலும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதோயொரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டும் என்று நினைக்காமல், தனக்கு என்ன தெரியும், எது தனக்கு ஆர்வமூட்டும் என்பதை அறிந்து அந்த திசையிலேயே உரையாடலை இட்டுச் சென்றுகொண்டிருந்தார். இடையிடேயே காரின் டோர்லாக்குகளைக் கையால்வது பற்றியும், தற்போது வெளிவரும் பல மாதிரிகளின் நிறை குறைகள் என்னென்ன என்றும், தனது பணி நிமித்தமான அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த பயணத்தின் உரையாடல் அவருடைய போக்கிலேயும், மையக்கரு அவரிடமிருந்தே வருமாறும் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். இந்த சார் எல்லாம் வேணாம்னு சொன்னாலும், பின்னர் சாரோடு எனது பெயரைச் சேர்த்திக்கொண்டு இரஞ்சித் சார் என்று அழைக்க ஆரம்பித்தார். புகைப்படக் கருவி எதுவும் கையில் இல்லாததால் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியோ ஆர்வமூட்டும் ஒரு மனிதராகவும் நல்ல பயண அனுபவமும் தந்தார் என்பது மட்டும் உண்மை.








Wednesday, September 1, 2010

உமாசங்கர் I.A.S. - விண்ணப்பம்





உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************************************************

இந்தத் தேரிழுப்பில் சற்று தாமதத்தில் வந்த கையாக இங்கே பதியப்படுகிறது.

Thursday, June 10, 2010

எதிர் கேள்விகள் - மின்னஞ்சலில் வந்தது

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் குழுமத்தில் கொலம்பஸிற்கு திருமணம் ஆகியிருந்தால் அவரது மனைவி கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் என ஒரு பட்டியல் அனுப்பினார். உடனடியாக அதற்கு எதிர்வினையாக தோழி ஒருவர்,
திருமதி கொலம்பஸ் எவ்வகையான கேள்விகளை எதிர்நோக்கியிருப்பார் என ஒரு பதிலுரையை அனுப்பினார். உங்கள் பார்வைக்கு இங்கே இரண்டும்.
------------------------------------------------------------------------------------------------

கொலம்பஸ் எதிர்நோக்க வேண்டியிருந்த கற்பனைக் கேள்விகள்

எங்கே போகிறாய்?

யாருடன் போகிறாய்?

ஏன் போகிறாய்?

எப்படிப் போகிறாய்

எதைக் கண்டுபிடிக்கப் போகிறாய்?

ஏன் நீதான் போகவேண்டுமா?

நீ இல்லாத போது நான் என்ன செய்வது?

நானும் உன்னுடன் வரலாமா?

எப்போது திரும்புவாய்?

இரவு உணவுக்கு வருவாயா?

எனக்கு என்ன கொண்டு வருவாய்?

நீ வேண்டுமென்றே என்னைத் தவிர்த்து பயணம் செய்கிறாய் இல்லையா?

நீ இது போன்ற பயணங்களைக் கடைசி நேரங்களில் செய்கிறாய்

எனக்கு பதில் சொல்?

நான் என் தாயார் வீட்டுக்குப் போக வேண்டும்.

என்னை அங்கு விட்டுவிட்டுச் செல்

எனக்குத் திரும்ப வரவே விருப்பமில்லை.

சரி. என்றால் என்ன அர்த்தம்?

ஏன் என்னை மறுக்காமல் இருக்கிறாய்?

என்ன கண்டுபிடிப்போ? என்னவோ? எனக்குப் புரியவில்லை

நீ எப்பவும் இப்படித்தான் செய்கிறாய்

சென்ற முறையும் நீ இப்படித்தான் செய்தாய்.

இப்போது நீ அடிக்கடி இது போலச் செய்கிறாய்.

இன்னும் என்னதான் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறதோ எனக்குப் புரியவேயில்லை.

****************************************************************************

இதுவே திருமதி கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்காக கிளம்பியிருந்தால் எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் கேள்விகள் என தோழி எழுதியவை.


"இது திருமதி கொலம்பஸ் என்றில்லை எந்த திருமதியானாலும் கீழ்க்கண்ட கேள்விகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்" - தோழி

குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?

என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்?

நீ இப்படி போகிறேன் என்றால் என் பெற்றோர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

உன்னுடைய பொறுப்புகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்ள முடியாது.

நீ நெடுங்காலம் வராதிருந்தால் நான் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கலாமா?

நீ உன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது, மொத்தக் குடும்பத்தையும் சேர்ந்து சிந்திக்க வேண்டும்.

நீ போவதால் எனக்கோ எனது குடும்பத்திற்கோ என்ன லாபம்?

"அதனால், ஆண்கள் மட்டும் இதுபோன்ற கேள்விகளை எதிர்நோக்குவது கிடையாது, ஒரு கண்டுபிடிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் பெண்கள் சந்திக்கும் கேள்விகளும் அதிகம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "- தோழி

********************************************************************************

கொலம்பஸ் எதிர்நோக்கிய கேள்விகள் பற்றி நேற்றோ முந்தைய தினமோ வலைப்பதிவுகளில் வாசித்ததாக நினைவு. எந்தப் பக்கத்தில் என்று உடனடியாக நினைவுக்கு வரவில்லை, பின்னூட்டத்தில் யாராவது தெரிவித்தால் சுட்டியைச் சேர்த்து விடலாம்.

கண்டுபிடித்துவிட்டேன் திரு கேபிள் சங்கர் அவர்களின்
- கொத்து பரோட்டா-08/06/10 இல் சிறுபகுதி இருக்கிறது

Tuesday, February 9, 2010

ஆதிவாசிகள் - பகிர்வு

என்ன எழுதறது..!! ஏதாவது எழுதணுமா என்ன..!!??

************************************************



************************************************

அந்தமானிலுள்ள "ஜாரவா" க்கள் பற்றியதொரு குறும்படம்.

****************************************************

********************************************************

1. http://www.survivalinternational.org/films/mine
2. http://www.survivalinternational.org/tribes/jarawa

Wednesday, August 12, 2009

எனது உடல் எனது ஆயுதம்

இது எனக்கு நான் அளித்துக்கொள்ளும் தண்டனையல்ல.. இது எனது கடமை..

"That very happy day will come one day"... ஷர்மிளா.
உங்களது போராட்டம் வெற்றிபெறும்/பெறவேண்டும்.

*************************************************************************************


************************************************************************************
மனிதர்கள் கரணம்
குரங்குகளின் கைகளில் துப்பாக்கிகள்
-மணிப்பூர்...

நேருக்களும், கலாம்களும் கண்ட கனவு இந்தியா இதுஎனில்.. மன்னிக்கவும்.. மக்களின் கனவு வேறாகயிருக்கிறது.

மணிப்பூர் தொடர்பான வேறுசில பதிவுகள்:

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் - சுடர்


இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

Tuesday, July 21, 2009

சத்யாவின் பட்டறை

நீங்கள் வாரயிறுதி நாட்களில் அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னைப் பல்கழைக்கழகத்தின் (கிண்டி) வளாகங்களைக் கடந்திருக்கிறீர்களா, அப்படியென்றால் உணவு இடைவேளையின்போது வளாக உணவகங்களில் இவரை நிச்சயம் சந்தித்திருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கிடையில் தன்னை மறந்து கைகளால் அபிநயம் பிடித்துக் காற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறாரா ஒருவர் அப்படியானால் அவர் 'சத்யா'வாகயிருக்கலாம்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றின் கம்பவுண்டரின் மகனாகப் பிறந்து தெலுங்கு வழியிலேயே பனிரெண்டாம் வகுப்புவரைக் கல்விகற்று, மைசூரின் கல்விக்கான மண்டலக் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர் "சத்யா (எ) சத்யநாராயணன்". பின்னர் "GATE" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையத்தில்(IGCAR) தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். பின்னர் அதே IGCAR'ல் விஞ்ஞானியாகவும் இணைந்தவர். "CHAOS"ல் தனது முனைவர் பட்டத்துக்கான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் புரோட்டின்களின் அமைப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறுகளின் இயக்கம் என அவரது ஆராய்ச்சிகளும் விரிவடைந்தன, இன்றைக்கும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

இதிலென்ன சிறப்பிருக்கிறது, இந்தியாவில் பலரும் இப்படித்தானே, கிராமத்தில் படித்து பின்னர், வாழ்க்கையில் முன்னேறியவர்கள்தானே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், சத்யாவைப் பற்றி இன்னும் இருக்கிறது சொல்வதற்கு.

சென்னை மற்றும் வடதமிழ்நாட்டின் பல கிராமப் புற மாணவர்களுக்கு, இயற்பியல் ஆய்வு மேற்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும், தேசிய உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்காக (CSIR, NET, GATE, IISc, TIFR, IIT, ...) இன்றைக்கும் இலவசமாக பயிற்சியளிப்பவர்தான் சத்யா. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்திலுள்ள, அணுக்கரு இயற்பியல் துறையின் ஒரு வகுப்பறையில்தான் துவங்கியது சத்யாவின் பட்டறை. இவ்வகுப்புகள் துவங்கிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் மட்டும் நடந்து வந்தன. இலவச வகுப்பு என்பதால் அந்த ஆண்டுக்கான முதல் வகுப்பில் வகுப்பறை நிரம்பி வழியும், எப்படியும் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அப்படியே தேய்ந்து ஆண்டு இறுதியில் சராசரியாக 20 மாணவர்கள் எஞ்சியிருப்பார்கள்.

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வகுப்புகளை நீட்டித்தார்.
அதில் ஒருவர் வேலூருக்கருகிலுள்ள போலூர் எனும் கிராமத்திலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி 9.30 மணிக்கு வகுப்புக்கு வந்து சேர்ந்து பின்னர் மாலை வகுப்பு முடிந்து பின்னர் நள்ளிரவு நேரத்திற்கு வீட்டிற்கு செல்பவரும் உண்டு. அவரது பயண உழைப்பை அறிந்து கொள்வதற்காக அவருடனேயே ஒருமுறை பயணம் செய்தும் பார்த்தார் சத்யா. அடுத்தடுத்த ஆண்டுகளில், வகுப்பின் இறுதிவரை தொடரும் மாணவர்கள் பெரும்பாலும் புறநகர் மற்றும் கிராமப் புற மாணவர்களாகவேயிருப்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள் என சனி மற்றும் ஞாயிறு என்று நீட்டித்தார், ஒரு சில மாணவர்களை ஒரு இரவுக்குத் தமது வீட்டிலேயே தங்கிக்கொள்ளவும் உதவிகள் செய்தார்.

இதே போல், நாகர்கோயில் அருகில் ஒரு கிராமத்திலிருந்து வந்த மாணவி முதுகலைப் படிப்பிற்கே போராடித்தான் சேர்ந்திருந்தார். சத்யாவின் வகுப்பிற்குப் பின்னர், இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் ஒரு விஞ்ஞானியாகச் சேருவதற்கு தேர்ச்சி பெற்றுப் பணியாற்றிவருவதோடல்லாமல், பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாகவும் இப்போது வகுப்பறைத் துணையாகவும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

வருடத்தில் இரண்டு முறை நடக்கும் CSIR நுழைவுத் தேர்வுகளின் போது சில மாணவர்கள் அவரோடு அவரது வீட்டிலேயே திருவான்மியூரில் தங்கிவிடுவதும் உண்டு. தேர்வு முடியும் வரை அவர்களோடு சேர்ந்து நள்ளிரவு வரை கண்விழிப்பார் சத்யா. பொதுவாக கல்பாக்கத்தில் தனக்காக வழங்கப்பட்ட தனி வீடொன்று இருந்தாலும், தேர்வு சமயங்களில் மாணவர்களுக்காக தினமும் மாலை சென்னையிலிருக்கும் அவரது வீட்டிற்கு வந்துவிடுவார். தனது தாய், தங்கை என மூன்று பேர் மட்டுமே வாழக்கூடிய ஒரு சாதாராண ஓட்டுவீடுதான் சத்யாவினுடையது, ஆனாலும், மாணவர்களுக்காக ஒரு வாரம் அந்தக் குடும்பமே கண்விழிக்கும், உணவு சமைக்கும்.

முதலில், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் தொடங்கி, பின்னர், ஞாயிறு மற்றும் சனி பகல் வேலை முழுவதுமாக எனப் பரிணமித்து பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது சத்யாவின் பட்டறை. மேலும், முதலில், தனது வகுப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகம், பின்னர், இவ்வகுப்பின் வெற்றியையும், மாணவர்களினது ஆர்வத்தையும் கண்டு, பல இருக்கை வசதிகளும், பலகை வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்குகளுக்கான தனது சிறப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இன்றைக்கும் இவ்வகுப்புகள் இலவசமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இயற்பியலுக்கான ஒவ்வொரு CSIR தேர்விலும், தமிழகத்தின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தாலும், அதில் இருவர் கண்டிப்பாக சத்யாவினது வகுப்பு மாணவராயிருப்பர். CSIR தேர்வுகளில் எல்லா தேர்வுகளிலும் அவரது வகுப்பிலிருந்து குறைந்தது ஐந்திலிருந்து பத்து மாணவரைத் தேர்ச்சி பெறவைப்பதையே அவர் அவரது வகுப்பினது வெற்றிக்கான அளவுகோலாக வைத்திருந்தாலும், அவரது பட்டறையின் துவக்க காலங்களில் அவரிடம் பயின்றவர்களுள் சிலர் இன்றைக்கு,IIT, மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைப் பேராசிரியாரகவும், பலர், இந்திய அரசின் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகளாகவும், பல தேசிய ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மாணவர்களாகவும் பணி புரிகின்றனர்.

இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து இந்தியாவின் பல ஆய்வு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் இணையும் பலர் சத்யாவின் பட்டறையிலிருந்து வந்தவராகயிருப்பர் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்

மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளி கரைந்து நண்பர்கள் குழுவொன்று அறிவியல் விவாதிப்பது போன்ற சூழலை வகுப்பறையில் கொண்டுவருவார். இதுவே அவரின் பலம் அல்லது அந்த வகுப்பறையின் பலம். இவரது மாணவர்கள் பெரும்பாலும், முதுகலை இயற்பியல் படிப்பவர்களே. இவ்விடுகையப் படித்து உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

சத்யா என்று உரிமையோடும் நட்போடும் அழைத்தாலும், அவர் இப்போது ஒரு மத்திய பல்கலைக்கழத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஆம் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே கல்பாக்கத்தில் பணியை விட்டுவிட்டு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


புகைப்படம்: மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் சத்யா.
(புகைப்படம் outlook அங்கில இதழில் திரு ஆனந்த் அவர்களால் வகுப்பரையிலேயே நேர்முகம் காணப்பட்டு வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுக்கப் பட்டது.)
அவரது வகுப்பு குறித்து டிசம்பர் 2004ல் "outlook" இதழில் வெளிவந்த கட்டுரையின் சுட்டி கீழே.

http://www.outlookindia.com/article.aspx?226027

சத்யாவைப் பற்றிப் பேச இவ்வொரு இடுகை போதாது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் உண்டுவிட்டு வெட்டிக்கதை பேசும்போதுதான் சத்யாவைப்பற்றிக் குறிப்பிட்டார் எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவரான நண்பர் குருவெங்கட். அன்றிலிருந்து இன்றுவரை ஞாயிற்றுகிழமைகளில் சென்னையிலிருந்தால் சத்யாவின் பட்டறைக்குச் செல்வது என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. ஆனால், எல்லா வகுப்பறையிலும் கடைசிபெஞ்ச் மாணவனாகவேயிருந்ததாலோ என்னவோ இந்தப் பட்டறையிலும் கடைசிபெஞ்ச்தான்.

அவரிடம் பயின்ற மாணவரும் எனது நெருங்கிய தோழியுமான ஒருவர் சத்யாவின் தீவிர மாணவியாகி கடும் பயிற்சிக்குப் பின்னர் CSIR தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு பின்னர் அவரிடம் முடிவைத் தெரிவிக்கும் போது இருவருமே கண்ணீர் மல்க நின்றகாட்சி இன்றும் பசுமையாக இருக்கிறது.

இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தருணத்தை என்னால் உங்களுக்கு வழங்கமுடியாமல் போயிருக்கலாம் சத்யா, ஆனால், ஒவ்வொரு மனிதரது வாழ்க்கையும் அவரவர்க்கு ஒரு கலைக்கூடமெனில், எனது கலைக்கூடத்தின் சுவர்கள் நீங்கள் சத்யா....


Thursday, July 16, 2009

ஆங்கோர் மாணவருக்கு கல்வி உதவி செய்தல்

மின்னஞ்சலில் வந்தது வலையுலக சமூக ஆர்வலர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.

************************************************************************************
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் “நமது பிள்ளைகள்” என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.

ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 ) வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy


SWIFT CODE: ICICINBB

Bank code: 6204


மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087


தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம். என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.

"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்
"

என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!

எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்


தமிழக அரசியல் குழுமம் சார்பாக

த.சுரேஷ்

பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

இதைப் பற்றிய விவாதத்தினை காண http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=7222740&tid=5357422439875434097&start=1
--
C.Sakthivel ( தொடர்புக்கு: 9843283778)
Research Scholar
School of Chemistry
Bharathidasan University
Tiruchirappalli-24, India
E-mail: skvchem@yahoo.com , skvchem@gmail.com

*************************************************************************************

ஈடுபட்டுள்ளோரின் முழு விபரமும் இங்கே உள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு பின் ஆவன செய்யலாம்.


நன்றி

Monday, June 22, 2009

சில நேரங்களில் சில முகங்கள்

மறத்தல், நினைத்தல், மறந்தது போல் நடித்தல், பின் மீண்டும் நினைத்தல், மறத்தல்...... என்பதாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு.

பல சமயங்களில் இவையெல்லாம் மறந்து போனால் என்ன? என்று தோன்றுவதுண்டு. இவற்றை எனது மூளைச் செல்களின் இடுக்குகளில் துழாவி எடுத்து வெளியே எறிய முடிந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று கூடத் தோன்றுவதுண்டு.

வகைதொகையில்லாமல் ஒன்று கூடி பித்து நிலைக்கு விரட்டிவிடுவதுண்டு சில முகங்கள்.

அவர்கள் இப்போது எப்படியிருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு?
என திடீரென்று மின்னலாய் வெட்டிச் செல்லும் சில நினைவில் தங்கிய முகங்கள் பற்றிய ஒரு மீள்பார்வையே இவ்விடுகை.

**********************************************************************************************

மழையினை இரசிக்காத நாளும், ஆளுமுண்டா? ஆனால், அப்படியொரு மழைச்சாரலில் திடீரென தோன்றும் சில கேள்விகள் இவை "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? "

சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தினை உயர்த்தி தனது பெருமையை உயர்த்தத் துடித்துக்கொண்டிருந்தது அரசு. அதன் விளைவாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகள் இடம்பெயற நிர்பந்திக்கப்பட்டனர், வழமைபோல், சரியான மாற்று நிலங்கள் வழங்காமை, மற்றும் போதிய பதிலீடு செய்யாமை என அரசின் எல்லா குப்பைச் செயல்பாடுகளும் இங்கேயும் உண்டு. மேலும், அதிகமான ஊழல் நடந்துள்ளதாக உலக வங்கி பின்வாங்கிக் கொண்ட பெருமைமிகு செயல்பாடுகளும் இவ்வணைக்கட்டுத் திட்டத்திலுண்டு.





புகைப்படம்: http://www.narmada.org/images/satyagraha2003/sat8.jpg

"Narmada Bachao Andolan" மற்றும் மேதா பட்கர் உண்ணாநிலை ஆகியவை அநேகமாகப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், அதைப்பற்றி ஒன்றும் பேசப் போவதில்லை. அதுகுறித்த விரிவான கட்டுரையொன்று இங்கே
(நர்மதா தரும் செய்தி - http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html) இருக்கிறது. இது குறித்து மேலதிகத் தகவல்கள், தற்போதைய நிலவரம் மற்றும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்: http://www.narmada.org/

இவ்வணைப் பிரச்சனையை முன்வைத்து "Drowned out" என்ற ஆவணப்படமொன்று வெளிவந்தது. அதிலே புகாரியா மற்றும் அவரது மனைவி என்றொரு சிறு அதிவாசிக் குடும்பம் வரும். திடீரென மழை பொழியும் நாட்களில் அவர்களைப் பற்றிய நினைவு வரும். அப்போதே அவர்கள் வீட்டு வாசல்வரை தண்ணீர் வந்திருந்தது, "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? " கீழே அவ்வாவணப்படத்தின் சிறு பகுதியொன்று இருக்கிறது.




அத்திரைப்படத்தில் வரும் ஆதிவாசிகள் பலரும் பயன்படுத்தும் வார்த்தைகள் "அவர்கள் " - "நாங்கள்" ... எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் வல்லரசு இந்தியாவின் நவீனப் பிரஜைகள், மண்ணின் மைந்தர்களிடமிருந்து.. திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் புகாரியின் மனைவி "அவர்கள் நாங்கள் சாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்" - என்று குறிப்பிட்டு ஒரு விநாடி நிறுத்துவார், விழிகளிலிருந்து ஒரேயொரு சொட்டுக் கண்ணிர் விழும். அவ்வொருவிநாடி மொளனமும் ஒரு சொட்டுக் கண்ணீரும் ஏற்படுத்தும் வலி ..........

*************************************************************************************************

அடுத்ததாக கீழேயுள்ள ஆவணப்படம், ஆனந்த் பட்வர்தன் அவர்களால் எடுக்கப்பட்ட மற்றொரு ஆவணப்படம் "War and Peace". தலா 50 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் இரண்டு குறுந்தகடுகளாக கிடைத்தது. இப்படத்திலும் அரசியல் தளத்தில் உரையாடப பல இருந்தாலும், அதுபற்றி பேசப்போவதில்லை. கீழே கொடுக்கப்பட்ட சிறுபகுதியில் கூட அரசியல் உரையாடல் மட்டுமே இருக்கும், வேறு பகுதிகள் இணையத்தில் கிடைக்கவில்லை தற்போதைக்கு இதுதான் கிடைத்தது.







இவ்வாவணப் படத்திலும், பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் இருக்கும் அதிவாசிகள் சமூகத்தினர் பற்றிய சில பகுதிகள் உண்டு. அங்கேயே பிறந்து வளர்ந்து, பின் மருத்துவம் பயின்ற மருத்துவர் மீண்டும் தம்மக்களிடமே சென்று அங்கே அவரது மக்களுக்கு யூரேனியத் தாதுக்களினால் ஏற்படும் கதிரியக்கக் பாதிப்புகளுக்கான சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இறுதியில் அவருக்கும் புற்றுநோய் தாக்க, கண்கள் மட்டும் வெளித்தெரியும் படி ஒரு முகமூடியுடன் "உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்று பேட்டி அளித்திருப்பார்.

"அவர் இப்போது எப்படி இருப்பார்? என்னவாகியிருக்கும் அவருக்கு? "

அங்கேயிருக்கும் மக்களும் தங்கள் உரையாடலில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் "அவர்கள்"-"நாங்கள்"... ஆம் அவர்களினது வடுக்களின் மீது ஏறிநின்றுதான் நாம் தினமும் மாலையில் மின்விளக்கையேற்றுகிறோம்/ ஏற்றப்போகிறோம் வல்லரசுக் கனவுகளோடு.

***********************************************************************************

இவ்விடுகையை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் மேற்கு வங்கத்தின் "லால்கார்க்"கில் சில முகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு http://sanhati.com/front-page/1083/


தமிழில்: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!
இங்கேயும்: http://www.thenaali.com/thenaali.aspx?A=349
புகைப்படம் 29/06/09 அன்று பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டது.
************************************************************************************

இதெல்லாவற்றுக்கும் மேல் பித்து நிலைக்கு் விரட்டும் முகங்கள் சிலவுண்டு.

சில மாதங்களுக்கு முன் பி.பி.சி தனது வலைத்தளத்தில், பதுங்கு குழிகளுக்குள்ளே இருந்து மருட்சியோடு வானை நோக்கும் ஈழத்துப் பள்ளிச் சிறுவர் சிறுமியர் சிலரினது புகைப்படத்தை வெளியிட்டது. குண்டடிபட்ட இறந்த உடல்களைவிட இக்குழந்தைகளின் மருட்சி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாகவேயிருக்கிறது. மேலேயுள்ள எல்லா முகங்களும் குற்றவுணர்ச்சியில் சிறுகச் செய்தாலும், இக்குழந்தைகளின் முகங்கள் என்கைகளில் இருக்கும் உறைந்து போன இரத்தக் கறையின் வாடையோடு வந்து போகிறது. என்ன செய்து கழுவுவது....
????

************************************************************************************
மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......

Sunday, October 7, 2007

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??





இந்தியா - அமெரிக்கா இடையேயான உடன்படிக்கையைப்பற்றிப் பல காரசாரமான விவாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், பொதுவெளியில் பெரிதும் பேசப்படாத சிலவற்றை இங்கே பதித்து வைக்கிறேன்.

அணு ஆற்றல் மற்றும் அணு உலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களில் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் இருக்கும் தொடர்பு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால வரலாறு. அதைப்பற்றிய சில குறிப்புகளை இங்கே காண முடியும்[1]. சமீபத்திய இந்திய - அமெரிக்கா உடன்பாட்டினைப் பற்றி நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் திரு. புஷ் இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது வெளியிட்ட கூட்டறிக்கையில், இவ்வுடன்படிக்கை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, இராணுவப் பயிற்சி மற்றும் முக்கியமான இந்த அணு ஆற்றல் துறையின் வளர்ச்சி என அனைத்துவகையிலும் இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பட்டியலிட்டனர்[2].


இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பற்றிப் பலரும் பட்டியலிட்டுள்ள இவ்வேளையில், இவ்வுடன்படிக்கையினால் அமெரிக்காவிற்கு என்ன லாபம். ஏன் இந்தியாவின் மேல் அதற்கு இவ்வளவு அக்கறை..???? எனப் பலத் தொடர்கேள்விகள் எழுவது நியாயமான ஒன்று.

இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டு வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் தம் மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வுடன்படிக்கைப் பற்றி நான்கு முக்கியமான காரணிகளை குறிப்பிட்டுள்ளார் [3,4].


(i) இவ்வுடன்படிக்கை ஆற்றல் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவைப் பலப்படுத்தும். மேலும், உலகில் தற்போது ஆற்றல் தேவை மற்றும் பயன்பாட்டில் ஐந்தாம் இடத்தில் இந்தியா இருப்பதாகவும், மேலும் இத்தேவை 2015 ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக உயரும் எனவும், இத்தேவையை இந்தியா நிறைவேற்றிக்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வண்ணம் ஆற்றல் உற்பத்தியைப் பெறுக்கிக் கொள்ளவும் இவ்வுடன் படிக்கை உதவும். [this act will strengthen cooperation between India and United states on Energy, one of the most important challenges of the 21st Century].

(ii). இவ்வுடன்படிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். அமெரிக்காவின் அணுக்கரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்தியா ஒரு புதிய வர்த்தகமாக விளங்கும். [This Act will help economic growth...]

(iii). இவ்வுடன்படிக்கை, ஆற்றல் உற்பத்தியில் தற்போது 70% நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்களிலிருந்து இந்தியா தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கும். மேலும் வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் இந்தியா தன் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்கும். [This act will help make it possible for India to reduce emissions and improve its environment].

(iv). இவ்வுடன்படிக்கை இந்தியாவை அணு ஆயுதத் தடுப்புக்கான சர்வதேசமுயற்சிகளில் பங்கெடுக்க வழிவகுக்கும். இதன் மூலம் அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும். [This Act will help keep america safe, by paving way for india to join the global effort to stop the spread of nuclear weapons].

மேலும் புஷ் தமது உரையில், அமெரிக்காவும், இந்தியாவும் தங்களுக்கிடையே ஆழ்ந்த நட்பையும், நேசத்தையும் கொண்ட நாடுகள் என்றும், இவ்விரண்டு குடியரசுகளும் தீவிரவாதத்திற்கெதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுகிறார். மேலும், இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்த அனைத்து அமெரிக்க அலுவலர்களையும், அக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் இந்திய அமெரிக்கப் பிரதிநிதிகளையும், இவ்வுடன்படிக்கை ஏற்படுவதற்காக அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்கவில் அவர்கள் ஆற்றிய பணி முக்கியம் வாய்ந்தது என்றும் புகழுரைத்திருக்கிறார் [4].

எப்படிப் பார்த்தாலும் புஷ் அவர்கள் கூறியிருக்கும் நான்கு காரணிகளில் அமெரிக்காவிற்கு இலாபகரமாக இருக்கப் போவது, இரண்டு காரணிகள்தான். அமெரிக்க அணு உலைத் தொழிற்சாலைகளுக்கான புதிய மற்றும் நிரந்தரமான வர்த்தகமாக இந்தியாவை மாற்றுவது, மற்றும் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கெதிரான புனிதப் போர்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்குத் துணைபோவது. இதுதான் அமெரிக்கா பெறும் லாபம் அல்லது பயன் என்பதை புஷ்ஷின் உரையிலுருந்து தெளிவாக உணர முடிகிறது. மற்றயிரண்டு காரணிகளும், இந்தியாவிற்குச் சாதகமானது போல் தோன்றினாலும் மறைமுகமாக அவை முந்தய இரண்டு காரணிகளுக்கான துணைக்காரணங்கள் என்பது தெளிவாகிறது.

இடையில் யார் இந்த இந்திய அமெரிக்கர்கள்? அவர்கள் ஏன் இந்த உடன்படிக்கை ஏற்பட பாடுபடவேண்டும். அவர்களுக்கு இந்திய-அமெரிக்க வெளியுறவு உடன்படிக்கையில் வெள்ளை மாளிகை ஏன் நன்றி கூறுகிறது? இவர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று குடியேறி குடியுரிமை பெற்ற இந்தியர்கள். அமெரிக்க அரசியலில் இவர்கள் பங்கு தற்போது தவிர்க்கமுடியாததாகிவிட்ட ஒன்று. இவ்வுடன் படிக்கையை செயல் படுத்த இவர்கள் முனைப்புடன் இருக்கக் காரணம், பதிலுதவியாக அமெரிக்க அரசாட்சித் துறைகளில், குறிப்பிட்ட சில பணியிடங்களில் இவர்களையோ அல்லது இவர்களது வாரிசுகளையோ அமர்த்துவதற்கு இருக்கும் தடைகளைத் தளர்த்த அமெரிக்கா பரிசீலித்திருக்கிறது. மேலும், ஹிலாரி மற்றும் ஒபாமா போன்ற தேர்தல் போட்டியாளர்களுக்கு இவர்களது ஒருங்கிணைந்த வாக்கு எண்ணிக்கை முக்கியம் வாய்ந்ததாகிறது[5]. இவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி வேறு தனி பதிவில் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் இவ்வுடன்படிக்கையில் இவர்களின் தலையீடு புறக்கணிக்க முடியாத ஒன்று.


அமெரிக்கத் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட காரணிகள் இவ்வாறிருக்கையில் இந்தியா அறிவியல் ரீதியாக முன்வைக்கும் சில வாதங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியத் தரப்பில் பலதரப்பட்ட நன்மைகளை முன்வைத்தாலும் அணு ஆற்றல் துறையின் தற்போதைய நிலைமையையும் பங்களிப்பையும் மட்டும் விமர்சித்திருக்கிறேன்.


முதலில் இந்தியா ஏன் யுரேனியம் தாதுக்களை இறக்குமதி செய்யவேண்டும்? இந்தியாவிலுள்ள பெரும்பாலான அணுக்கரு உலைகள், இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தட்டுப்பாட்டை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டவை. இதற்காக நிச்சயம் விஞ்ஞானி ஹோமி பாபாவின் விஞ்ஞான அறிவிற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தரம் மற்றும் அளவு மிகவும் குறைவு. சர்வதேசத் தர அடிப்படையில் 0.06% தான் இந்தியாவிலுள்ள யுரேனியத் தாதுவின் அளவு. அமெரிக்கா, கனடா போன்ற சர்வதேச நாடுகளில் 0.25% என்ற தர அளவிற்குக் கீழுள்ள நிலப் பகுதிகளை அந்நாடுகள் யுரேனியச் சுரங்கங்களாகப் பயன்படுத்துவதில்லை. அப்படியானால் இந்தியாவில் யுரேனியம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்[7]. இப்படி 0.06% தாதுவை வைத்துக்கொண்டு ஆற்றலைப் பெருக்க நினைப்பது நிச்சயம் பாராட்டத்தக்க செயல் அல்ல. யுரேனியத் தேவைக்காக மேலும் மேலும் தாதுக்களை வெட்டுவதனால் இயற்கைச் செல்வங்கள் பலவற்றை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.

அப்படி யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்று என்றால், யுரேனியம் ஏற்றுமதி மற்றும் தரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் இருக்கும் கனடாவிடம்தானே உடன்படிக்கையை செயல்படுத்தியிருக்க வேண்டும்[6]. அதைவிடுத்து சர்வதேச அளவில் யுரேனியத் தாதுக்களின் அளவு மற்றும் தர வரிசையில் 13 வது இடத்தில் இருக்கும் இந்தியா 8 ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் ஏன் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும், என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

இவற்றுக்கெல்லாம் ஏதாவது புத்திசாலித்தனமாக மற்ற ஆதாயங்களைப் பேசினாலும், வல்லரசுக் கனவு காணும் இந்தியாவின் அணுக்கரு உலைகளின் தரம், குறுகிய காலத்தில் வல்லரசாகத் துடிக்கும் மக்களின் தேசப்பற்றையும் எப்படி பிரதிபலிக்கிறது என்று பார்ப்போம். இந்தியாவைப் பொறுத்தவரை இரகசியங்கள் என்பது, அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் தவறுகளையும் மறைப்பதற்காக மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம், என்பதற்கு அணு ஆற்றல் துறை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.


(1) இராஜஸ்தானிலுள்ள ராவட்பாட்ட(Rawatbhata) அணு உலையைச் சுற்றியுள்ள 50 கி.மீ நிலப்பரப்பிலுள்ள கிராம மக்களின் உடல் நலம் பலவகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடலில் மேல்புறம் மற்றும் உள்ளே தோன்றும் கட்டிகள் (Tumours) இந்தியாவின் சராசரி விகிதத்தைவிட பல மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. விசித்திரமான வடிவக் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 திற்கு 77.5 என (14 வட மாநிலங்களின் சராசரி 9.5/1000) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கருக்களைவு, உடல் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகள், இப்பகுதி மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவரைவிட 11ஆண்டுகள் குறைவாக இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [7].


(2) உத்தரப்பிரதேசத்தில் நரோரா அணுக்கரு உலையில் 31 மார்ச் 1993 அன்று டர்பைன் கட்டுபாட்டு ஆறை திடீர் தீவிபத்துக்குள்ளானது மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாமல் இரண்டு மணிநேரம் எரிந்திருக்கிறது. இதனால், அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் 17 மணிநேரம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நிறுத்திவைக்கப் பட்டாலும், அணு உலையின் கதிரியக்க மையப்பகுதிக்குத் தொடர்ந்து நீர் சுழற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆதாலால், கையில் டார்ச் விளக்குடன் இரண்டு பொறியாளர்கள் அணுக்கரு உளையின் மேல் தவழ்ந்து சென்று தங்களது கைகளாளேயே திறந்திருக்கின்றனர். அதன் மூலம் நரோரா மற்றொரு ஹிரோஷிமாவாக மாறுவதைத் தடுத்திருந்தாலும், ஒட்டு மொத்த கதிரியக்கத்தையும் தங்கள் மேல் தாங்கியுள்ளனர் அவ்விருவர்[7].

இதில் கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், டர்பைனில் இருந்த இக்குறைபாடு அணு ஆற்றல் துறைக்கு முன்னரே தெரியும் என்பதுதான். ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ்(GE), UKவைச் சேர்ந்த டர்பைன் வடிவமைப்பாளர் அணு உலையை நிறுவும் போதே இதை அறிவித்திருக்கிறார்[8].


(3) நரோராரிவில் ஏற்பட்ட தீவிபத்தினால் இந்தியாவின் அணு உலைகள் முழுவதும் முடக்கப்பட்டிருந்த நேரத்தில், குஜராத்தில் 16 ஜுன் 1994 அன்று ஏற்பட்ட வெள்ளம், கக்ராபர் அணு உலையினுள் புகுந்துவிட்டது. இதில் கொடுமை என்னவெனில் கதிரியக்கக் கழிவுக்களங்கள் நீரில் மிதந்து செல்லத் துவங்கிவிட்டனவாம். பின்னர் அவ்வூழியர்கள் மாரளவுத் தண்ணீரில் சென்று மிதந்து கொண்டிருந்த அக்கழிவுக் கலன்களைப் பத்திரப் படுத்தியுள்ளனர்[7,9]. இவ்வேளையில் அணு உலை இயக்க நிலையில் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று தனியாக விளக்கத் தேவையில்லை.


(4) இந்திய அணு ஆற்றல் துறையின் தலைமையிடமான BARC எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பது போல், அங்கு ஏற்பட்ட ஒரு திடீர் விபத்தில் கதிரியக்க நீர் கடலுக்குள் பாய்ந்துவிட்டது. இவ்விபத்திற்குப் பிறகு பல நூறு மீட்டர்களுக்கு அப்பால் கடலுக்கடியில் எடுக்கப்பட்ட மணலில் சீஷியம் - 137 என்ற கதிரியக்கப் பொருள் பெரிதும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் 1991ல் சைரஸ் மற்றும் துருவா அணு உலைகளுக்கு இடையேயான நீர்க்குழாய் வெடித்துச் சிதறியதில் அதிலுள்ள கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மேல் பாய்ந்துவிட்டது. பின்னர் அவர்களைக் குளிக்கச் செய்து மாற்று உடை கொடுத்து அனுப்பிவிட்டது நிர்வாகம். குறைந்த பட்சம் 300 - 1000 மில்லிரெட் அளவிலான கதிரியக்கத்திற்கு அவர்கள் உட்பட்டிருக்கலாம் என்று பின்னர் அந்நீரினை ஆராய்ந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்[7].


இப்படி பல விபத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே செல்லலாம். மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் இருக்குமாயின் கீழுள்ள தரவுகளில் 7 வதை மட்டுமாவது வாசித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

ஆனால் இது போன்ற விபத்துக்கள் எல்லா மின் உற்பத்தித் துறையிலும் உண்டு என்றும் வளர்ச்சிக்குப் பரிசாக சிலவற்றைக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிற்குச் செல்லும் முன்னர் யுரேனியத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.


ஏறத்தாழ இந்தியாவின் மொத்த யுரேனியம் தாதுக்களும், அதைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் இந்திய யுரேனியம் கார்பரேஷனும் (UCIL) பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் உள்ளது. வழக்கம் போல் எல்லா இடத்திலும் பூர்வீக மக்களை வஞ்சிக்கும் வழிமுறைகளான, வேலைவாய்ப்பு, சரியான இடப்பெயர்வு வசதிகள் இல்லாமை என்ற எந்த வகையிலும் இம்மலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளும் தப்பித்துவிடவில்லை. மேலும் வேலை வாய்ப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற முறையில் கதிரியக்கத் தாதுக்களை தோண்டி எடுக்கவும், தோண்டி எடுக்கப்பட்ட தாதுக்களை UCILக்கு கொண்டு செல்லுதல் போன்ற கதிரியக்க ஆபத்து நிறைந்த வேலைகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

இப்பகுதிகளிலிருந்து ஓராண்டிற்கு சுமார் 200டன் யுரேனியம் தாது வெட்டி எடுக்கப்படுகிறது. அப்படியாயின் இதுவரை ஏறத்தாழ 3,30,000 - 3,60,000 டன்கள் யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்ட கழிவுகளாக வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. இக்கழிவுகள் பாதுகாப்பான முறையிலோ அல்லது ஆதிவாசிகளுக்கு பாதிப்பில்லாத இடங்களிலோ வெளியேற்றப்படுவதில்லை. ஆதிவாசிகள் குடிநீருக்காகவும், அன்றாடத் தேவைகளுக்காகப் பயன் படுத்தும் ஏரிகளுக்கு வெகு அருகில் இக்கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன[7,10]. இத்தாதுகளிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்டாலும், தோரியம் - 230, ரேடியம் - 226, ரேடான் - 222 போன்ற கதிரியக்கப் பொருட்களும், தீங்கிழைக்கக்கூடிய, ஜின்க் (Zn), காரீயம் (Pb), மான்ங்கனீசு (Mn), காட்மியம் (Cd), மற்றும் ஆர்சனிக்(As) எனப் பல நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இக்கழிவுகளில் மிகுதியாக இருப்பவை.


சுரங்கத்திலுருந்து UCILக்கு கொண்டு செல்லப்படும் தாதுக்கள் எவ்வளவு பாதுகாப்புடனும், மற்றும் அவ்வூழியர்களுக்கு எவ்வளவு பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுகிறது என்பது மேலயுள்ள படத்தில் தெளிவாகத் தெரியும். மேலும், அவர்கள் செல்லும் பாதைகளில் இருக்கும் ஆதிவாசிக் குடில்களுக்கிடையேயான பாதை சீராக இல்லாததால் தளும்பும் தாதுக்களினால் சாலையோரங்களில் எல்லாம் பெறுமளவு கதிரியக்கத் தன்மை கொண்ட தாதுக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கின்றன இவ்வூர்திகள். இதனால் ஏற்படும் எண்ணற்ற உடல் நலக் கோளாறுகளுள் ஒன்று வடிவக் கோளாறுகளுடனான குழந்தைகள் பிறப்பது. இதைப் பற்றியும் மேலயுள்ள இரண்டாவது படம் ஆயிரம் பதிவுகள் பேசும்.
தற்போது ஏற்படவுள்ள ஒப்பந்தத்தினால் இறக்குமதி செய்யப்போகும் யுரேனியத் தாதுக்களிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் பணியைக் கூட UCIL தான் செய்யவுள்ளது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


சர்வதேச அளவில் உலகிலுள்ள அனைத்து கதிரியக்கக் கழிவுகளையும் நிரந்தரமாகச் சேர்த்து, அச்சுரங்கம் நிரம்பியபின் அதை நிரந்தரமாக மூடிவிடும் பணியில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஃபின்லாந்து நாட்டில் அச்சுரங்கத்தைத் தோண்டியிருக்கின்றனர். 2020ல் மூடப்படவிருக்கும் அச்சுரங்கத்தைப் பற்றி அந்நாட்டு மக்களும், அரசும் விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொள்ளும் ஒரே விசயம், 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் தங்கள் சந்ததியினருக்கும் இப்படி தங்கள் பூமிக்கு அடியில் கதிரியக்கச் சுரங்கம் இருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாழப்போகும் சந்ததியினருக்காக வருத்தப்படும் பொறுப்புள்ள அரசு மற்றும் விஞ்ஞானிகள் ஒருபுறம்... கண் முன்னே ஒரு ஊனமான அடுத்த தலைமுறையை உருவாக்கிய சுவடு கொஞ்சமும் இல்லாமல் பாரத ரத்னாக்களுடனும், வல்லரசுக் கனவுகளுடனும் வலம் வரும் நம் தேசிய விஞ்ஞானிகளும், அரசியல் வாதிகளும், மற்றும் நாம்... மறுபுறம்.

அணு ஆற்றலைப் பொறுத்த வரையில் சர்வதேச மதிப்பீட்டில் இந்தியாவிடம் நிச்சயம் தற்போது யுரேனியம் தாதுக்கள் இல்லை என்றே கொள்ளலாம். அப்படியாயின் எல்லோரும் திரும்பக் கற்காலத்திற்கே செல்லமுடியுமா என்ன? ஆனால் மேலும் மேலும் மூலப்பொருள் இல்லாத ஆற்றல் வழிமுறையை விரிவுபடுத்தாமல், சுயமாக ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயப்பிடியிலிருக்கிறோம். வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே 5 மணி நேரத்திற்குமேல் சூரியனைப் பார்க்கும் சில நாடுகளே சூரிய ஆற்றலை இயன்றவரை உபயோகப்படுத்தும் போது.. நம் நாட்டில் சூரிய ஆற்றல் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. தற்போது ஏதோ அவசரத் தேவை என்கின்ற ரீதியில் இவ்வுடன்படிக்கை நிகழ்ந்தாலும் அல்லது நிகழாவிட்டாலும் 20 ஆண்டுகள் கழித்து நிரந்தரமாகக் கையேந்தாமல் இருக்க நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். இப்போது கூட நாம் ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைகளில் விழித்துக்கொள்ளவில்லையென்றால்..... ??????




[1]. M.R.Srinivasan, Current Science, Vol 90, 1316 (2006). http://www.ias.ac.in/currsci/may252006/1316.pdf
[3].http://www.whitehouse.gov/news/releases/2006/12/20061218-1.html
[6].http://www.uic.com.au/nip41.htm
[7] http://www.anawa.org.au/india/india.PDF- "Nuclear India" a report on No nukes asia forum 1999.
[8]“Issues of Nuclear Safety”, A. Gopalakrishnan, Frontline magazine March 26, 1999, http://www.frontlineonnet.com/fl1606/16060820.htm
[9]An overview of the Indian nuclear program: Report to the No Nukes Asia Forum 1997, held in the
Philippines. http://members.tripod.com/~no_nukes_sa/overview.html
[10] "War and Peace", A documentry movie by Anand Patwarthan.

**The Figures used in this article are reproduced from reference 7 and is used only for information and creation of awareness. The author claims no commercial interest over the same.

Saturday, September 22, 2007

கடல் நீருக்கடியிலுள்ள இந்திய - இலங்கை நில இணைப்பு

சேது சமுத்திரத்திட்டம், இந்திய - இலங்கை கடல்நீருக்கடியிலுள்ள நில இணைப்பு, இதைப்பற்றி இணையத்தில் பலரும் அவர்களுடைய கருத்துக்களைப் பதித்துவிட்ட நிலையில், இந்நிகழ்வு பற்றியும் அதற்குத் தொடர்புடைய சிலவற்றையும், இந்தக் கையேட்டில் பதித்து வைக்கிறேன்.

நாசாவின் புகைப்படம் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், நாசா இப்புகைப்படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது. நாசா, இந்திய - இலங்கைக்கிடையேயான இந்நில அமைப்பின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி ஒற்றை வரியில் கூறியிருக்கிறது[1]. இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற ஒரு யூகத்தையே இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன [2,3]. இந்நில அமைப்பு மனிதனால்தான் எழுப்பப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்களில்லையென்றுதான் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது[2,3]. கால அளவுகளைப் பொருத்து இது இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவுடன் ஒத்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்து மித்தாலஜி என்று நாம் கூறினால் கூட அந்நில அமைப்பிற்கு இராமர் பாலம் என்று பெயரிடாமல் ஆதாம் பாலம் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறது நாசா. இதற்காக நீங்கள் புஷ்ஷின் தலையையெல்லாம் கேட்கக் கூடாது.
இப்படிப்பட்ட ஒரு நில இணைவு வரலாற்றில் முக்கியம் வாய்ந்த மற்றொரு நிகழ்விலும் இருக்கிறது. இங்கே கி.மு 332. கிரேக்க மன்னனாகிய மாவிரன் அலெக்சாண்டர் உலகை வெற்றி கொள்ளப் படையெடுத்த போது, தற்போதைய லெபனானும் அப்போது ஃபினீஷியன் நகரங்களான பிப்லோஸ் மற்றும் சிடான் ஆகிய நகரங்களைக் கைப்பற்றியவுடன் அருகில் இருக்கும் டையர் என்ற தீவினை நோக்கிப் போர் தொடுக்கும் போது கடலில் அவனது பொறியாளர்கள் எழுப்பிய பாலத்தை வரலாற்று அதிசயமாகவே அனைவரும் சிலாகித்தனர்[4].

ஆனால் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்புறச்சூழல் மற்றும் புவிஅறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தைச் (Center for Research and teaching on the geoscience of the environment (CEREGE)) சேர்ந்த நிக் மரினர் (Nick Marriner) தலைமையில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து ஏற்பட்ட நிலப் படிமங்களை(sediments) ஆராய்ந்து, இப்பாலம் பற்றிய உண்மையை ஆராய்ச்சி செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் 5500 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து, அருகிலிருந்த லிடானி டெல்டா பகுதிகளிலிருந்து வந்த நிலப் படிமங்கள், டையர் தீவிற்க்கும், தற்போதைய லெபனானிற்கும்மிடையே நீருக்கடியில் ஒரு நிலப்பரப்பைத் தோன்றச் செய்ததாகவும், மேலும், டையர் தீவு லெபனானை நோக்கி வந்த பெருவாரியான கடலலைகளைத் தடுத்ததோடல்லாமல், மேலும் நிலப்படிமங்கள் எளிதாக அத்தீவிற்கும் லெபனானிற்குமிடையே சேர்வதற்குத் துனைபுரிந்திருக்கிறது, என்று கூறியுள்ளனர். இவ்வாய்வறிக்கையைப் பற்றி வாஷிங்டன் டி.சி.யிலுள்ள Jean Stanley (Smithsonian Institution) எனும் geoarcheologist (புவியியத்தொல்பொருள் ஆரய்ச்சியாளர்-இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை) கூறுகையில், நீரோட்டங்களினால் ஏற்படும் படிம நகர்வு மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்தால் இப்படி நீருக்கடியில் ஏற்படும் நிலப்பாலங்கள் வியக்கத்தக்க ஒன்று அல்ல என்றும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் 332 B.C யில் 10 மீட்டர் ஆழம் கொண்ட கடலில் அலெக்சாண்டரின் பொறியாளர்கள் பாலம் எழுப்பினார்கள் எனும் வரலாற்றுச் செய்தி உண்மையல்ல என்றும், அது இயற்கையாகவே ஏற்பட்ட ஒன்று என்றும் அவ்வறிக்கையின் மூலம் நிரூபித்துள்ளனர் [4].

ஒரு தீவிற்கும் அருகிலிருக்கும் நிலப்பரப்பிற்கும் இடையே நீருக்கடியில் எழும் நில இணைப்பு இயற்கையான ஒன்று என்றாலும், இங்கே அதன் வடிவத்தை நிர்ணயிப்பது எது? அதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நிச்சயம் தீவின் வடிவம் மற்றும் அருகிலிருக்கும் பெரிய நிலப்பரப்பின் கடற்கரைகள் மற்றும் நில அமைப்பு ஆகியவை உடனடியாகத் தோன்றும் காரணிகள், புவியியல் படித்தவர்களால் இதைவிடச் சிறப்பான மற்றும் முக்கியமான காரணிகளைக் கூறமுடியும்.

இலங்கைத் தீவின் நில அமைப்பையும், வடிவத்தையும், பாலம் தோன்றிய இடத்தையும் பார்க்கும் போது, நிச்சயம் பாலத்திற்கு இரண்டு பக்கங்களிலிருந்து வரும் கடல் நீரோட்டம் சமமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தென்னிந்திய மற்றும் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள நிலத்தின் தன்மை மற்றும் கருப்பொருள், இத்தனை இலட்சம் ஆண்டுகளாக ஏற்பட்ட கடல் நீரோட்ட மாற்றங்கள், மற்றும் புவியியல் மாற்றங்கள் எனப்பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா, அப்படியாயின் அவற்றின் முடிவுகள் என்ன??

இப்படி இந்தியா - இலங்கைக் கிடையே நீருக்கடியிலுள்ள நில இணைப்பு மனிதனால் கட்டப்பட்டது என்று திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாகக் கூறுவதற்கான போதிய சான்றுகள் இல்லை எனும் நிலையில், இதைக் கட்டிய கொத்தனார் யார் மற்றும் சித்தாள் யார் என்பது போன்ற கேள்விகள் இன்னும் பின்னுக்குத்தள்ளப்படவேண்டிய ஒன்று.

இவ்விவகாரத்தில் பெரும்பாண்மை மக்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்று கூறும் சிலருக்கான கேள்விகள்.

செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.

அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும். இங்கே அந்த நம்பிக்கை எந்த பெயரைத் தாங்கிக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் பார்வைக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் உண்மை.


இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப் பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையை நம் அரசு கையாண்டிருக்கும் விதம் மிகவும் கண்டனத்துக்குறியது. அரசியல் காரணங்களுக்காக ஆய்வுகள் அடிப்படையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஏதோ தட்டச்சுப் பிழையைத் திருத்துவது போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திருத்திக்கொள்வதாயிருந்தால் எதற்காக இவ்வரசுக்கு விஞ்ஞானிகள். காங்கிரஸ் உயர்மட்டக் குழுவே கூடி ஒரு முடிவெடுத்திருக்கலாமே.

பெருவாரியான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் கருத்துக்களை அவ்வாய்வறிக்கை தெரிவிப்பதாயிருந்தால், அவ்விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை, சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் இருக்கும் மற்ற, தொல்பொருள், ஆராய்ச்சியாளர்களின் துணையோடு சரிபார்த்திருக்கலாம், அல்லது சர்வதேச தொல்பொருள் விஞ்ஞான இதழ்களுக்கு சமர்ப்பித்து ஆய்வுகளையும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகளையும் சரி பார்த்திருக்கலாம். இதனை விடுத்து அறிவியல் ஆய்வறிக்கையை தங்களின் வசதிக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது, சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது வரலாறு கூறும் உண்மை.

அப்படி இராமர் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன் வழி எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது ஆதாரப்பூர்வமான உண்மை எனும்பட்சத்தில், காஷ்மீரிலிருந்து, குமரிவரை அனைவருடைய நம்பிக்கையும் பொய்த்துப்போனாலும் சரி அதை தம்முடைய மக்களுக்குச் சொல்ல வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. ஒருவேளை அவ்விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையிலுள்ள கூற்றுக்களுக்கு போதிய ஆதாரங்களோ அல்லது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைபாடும் இருக்குமாயின், அவ்விஞ்ஞானிகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

3- ஜனவரி 2007 அன்று சிதம்பரத்தில் நடந்த 94 வது இந்திய அறிவியல் கூட்டமைப்பை (94th- Indian Science Congress) துவங்கி வைத்து ஆற்றிய உரையில், இந்திய அறிவியல் கல்வித்தரம், மற்றும் ஆராய்ச்சித் தரம் ஆகியவை குறைந்து வருவதாகவும், மேலும் இந்நிலைத் தொடருமானால், ஆராய்ச்சிக் கூடங்களை சர்வதேசத் தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்போவதாகவும் தெரிவித்தவர் நம் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள்[5]. இப்படிக் கூறிய அவரது அரசு ஒரு ஆய்வுக்கட்டுரையைக் கையாண்டிருக்கும் விதம் கண்டனத்துக்குரிய, மற்றும் வேதனைக்குரிய விசயமாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை நிச்சயமாகக் குறைத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.


அந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை அரசியல் காரணங்களுக்காகவும், மத சிந்தனைகளுக்காவும் அரசு அவ்வறிக்கையை மூடிமறைக்குமானால், பல தலைமுறைகளைத் தாண்டி எதிரொளிக்கக் கூடிய ஒரு தவறுக்குப் பொறுப்பேற்கின்றன, நம் அரசியல் கட்சிகளுள் பல. மேலும் அவ்வாய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதை ஒரு சமூக நலன் கருதி அரசு வெளியிடுமானால் தற்போது ஆட்சி கவிழலாம், அல்லது கலவரங்கள் எழலாம் ஆனால் இது வரும் காலங்களில் தொடரவுள்ள பல அடிப்படைவாத செயல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. ஒரு வகையில் பைபிலுக்கும், டார்வின் மற்றும் கலிலியோ கூறிய விஞ்ஞான உண்மைகளுக்கும் இடையே நடந்த ஒரு போராட்டத்திற்கு இணையானது இந்நிகழ்வு.

இனி என் தனிப்பட்ட கருத்துக்கள் - அவ்விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகள் சரியென்று சர்வதேச விஞ்ஞானிகளால் ஒப்புக்ககொள்ளப்படுமானால், நிச்சயம் அவ்விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குவேன்.

சர்வதேச அளவில், மானுடவியல், தொல்பொருள் ஆராய்ச்சி, மொழியியல் மற்றும் மரபணு சோதனைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டாய்வின் மூலம் பல வரலாற்றுத் திரிபுக்கதைகளின் பின்புலத்திலிருக்கும் உண்மைகளை அறிவியல் உலகம் விளக்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் தோன்றிய இடத்தையும், அங்கிருந்து எப்படியெல்லாம் பிரிந்து பல்வேறு நிலப்பரப்புகளுக்குச் சென்று இன்றைக்கு வெவேறு இனமாக, நாடாக, சமூகக்குழுக்களாகப் பிரிந்து சென்றான் என்ற உண்மையை ஒரளவுக்கு நெருங்கிவிட்டது அறிவியல் உலகம்.

அப்படிப்பட்ட உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்கு மற்றும் விடைதெரியாத சில புதிர்களை விளக்குவதற்கும் இந்தியா-இலங்கை இடையே நீருக்கடியில் இருக்கும் இப்பாலம் மிகவும் இன்றியமையாதது. பெரிங் ச்ட்ரைட் என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் ஒரு நில இணைப்பு இருந்ததற்கான சில ஆதாரங்களும் தற்போது அவ்விணைப்பு இல்லாததாலும் இருக்கும் ஆராய்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் ஏராளம்[6].

இந்தச் சூழலில் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதக் கூட்டம் பற்றியும், அவர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமிருக்கும், இருந்த தொடர்புகள் பற்றியும் பல குழப்பமான அனுமானங்களுக்கான சில தீர்வுகளுக்கு இப்பாலம் உறுதுணையாக இருக்கலாம். இந்திய நிலப்பரப்பிற்கு வெவேறு காலகட்டத்தில் வந்த திரவிட மற்றும் ஆரிய இனங்கள் பற்றிய உண்மையை உலகிற்கு உணர்த்தியது மரபணு சோதனைகள். மேலும், இராமன் இருக்கிறானா இல்லையா என்பதை ஆராய்வதற்குக் கூட அப்பாலம் இடிக்கப்படாமல் இருப்பது அவசியமே.

மீண்டும் என் தனிப்பட்ட கருத்தை தெளிவுபடுத்துவது நல்லது. இப்புவிப்பரப்பில், மனிதனின் தோற்றம், சமூக வாழ்வு, மற்றும் வெவ்வேறு கண்டங்களுக்கான அவனது பயணம், என்பது போன்ற உலக வரலாற்றை நிர்ணயிப்பவை இந்த நில இணைப்புகள். ஆதலால், இப்படிப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பாலத்தை இடிப்பதனால் வரக்கூடிய பொருளாதாரத்தை விட நிச்சயம் முக்கியமான ஒன்று. ஆதலால் அந்தப் பாலம் இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் இன்னும் பல தலைமுறைகளுக்கு, பொய்க் கூற்றுக்களும், செவிவழிச்செய்திகளும் நிரந்தரமான வரலாறாகிவிடும் அபாயம் இருக்கிறது.



[1].http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA06670
[2].
http://www.geocities.com/uk20020/bridge_Srilanka_review.htm
[3].
http://www.lankalibrary.com/geo/dera2.html
[4].John Simpson, Science NOW, 14 May 2007. http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2007/514/1?etoc
[5]. K.S. Jayaraman, Nature, Volume 445, 134 ( 11th Jan 2007).

[6]. http://www.sciencedaily.com/releases/2002/08/020816072026.htm

**References 4 and 5 might require subscribtion.

Sunday, September 9, 2007

நமக்கான அறிவியல்...!!!???

நமக்கான மொழி, கலாச்சாரம், இசை, வரலாறு என்று பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நமக்கான அறிவியல் என்று ஒன்று இருக்கிறதா என்கிற சிந்தனையின் பயனாக எழுதப்பட்டது இப்பதிவு. இங்கே நாம், நமக்கான, என்று பொதுவான சொல்லாடல் இருப்பதால் இந்த நாம் என்பதற்கான பயன்பாட்டினை விளக்கிவிடுவது நல்லது. நாம் என்பது பழமை பற்றிப் பேசும்போது தமிழர்களையும், பின்னர் நவீன கால எடுத்துக்காட்டுகளின் போது ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களைக் கொண்ட இந்தியாவையும், குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாதக் கருத்தின் காலங்களைப் பொறுத்து இந்த நாம் பற்றிய ஒரு புரிதலை வாசகரிடம் விட்டுவிடுகிறேன்.

நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் பற்றிய கேள்வியெழும்போது, எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று நினைவிற்கு வந்தது. அதில் வேம்பையும் அதன் பண்புகளைப் பற்றி பத்துப்பாடல்கள், வயலில்வாழும் நண்டுபற்றிப் பத்துப் பாடல்கள் என்று தொகுக்கப்பட்டிருக்கும். இப்படி வாழ்வியலோடு இயைந்த பலவற்றைப் பற்றி பத்துப் பத்துப்பாடல்களாக தொகுக்கப்பட்டிருக்கும். இப்போது நிழல்படக்கருவியையும், தொழில்நுட்பத்தையும் வைத்து நேஷனல் ஜியாகரஃபி தொலைக்காட்சி செய்வதை மிக எளிதாக மொழிவடிவத்தில் இலக்கியத்தில் பதியவைத்திருப்பது நிச்சயம் அதிசயிக்க வைக்கின்ற ஒன்று. இலக்கியமும், கலையும், வாழ்வியலுடன் பிண்ணிப் பிணைந்திருந்தால் மட்டுமே இரண்டிலுமே வளர்ச்சியிருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது கிடையாது. அதே போல் சித்தர் பாடல்களில் மருத்துவம், மற்றும், பல அறிவியல் சார்ந்த கூறுகளைக் காண இயலும். இங்கே எடுத்துக்காட்டாக எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டுமே கூறியிருக்கிறேன். தமிழை தன்னார்வத்துடன் படித்தவர்கள் நிச்சயம், இதைவிடச் சிறந்த பல உதாரணங்களைக் கூறமுடியும். ஆனால் பக்தி இலக்கியங்கள் பெருகியபின் இலக்கியத்தில் அறிவியல் பார்வை எந்த அளவு இருந்தது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. ஆனால், எல்லாம் நீயே, என்று தொழுது எழுதப்பட்டிருக்கும் அக்கடினமான மொழிவடிவங்களுக்கிடையே அறிவியல் கூறுகளைத் தேடுவது சற்று அயர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியே ஏதாவது தோன்றினால் கூட அது என் கற்பனையா அல்லது பாடலாசிரியரின் உண்மையான கூற்றா என்கின்ற சந்தேகமே விஞ்சுகிறது. எப்படியிருந்தாலும் பண்டைய இலக்கியங்களில் வாழ்வியலோடு சேர்ந்த அறிவியல் கூற்றுகள் நிரம்பக்காணக் கிடைக்கிறது.

நவீன அல்லது தற்போது நாம் வாழ்கின்ற சமூகத்தில் வாழ்வியலும் அறிவியலும் இணைந்து இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் சிக்கியவற்றைப் பார்ப்போம். நவீன அறிவியலைப் பற்றி நாம் பேசும் முன்னர் இந்த அறிவியல் என்ற வார்த்தையின் பயன்பாட்டினை வரையறுத்துவிடுவது நல்லது. பொறியியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் எனப் பகுக்கப் பட்டகாலங்கள் மாறி எல்லாமே அறிவியல் என்ற ஒரு பொது வரையறைக்குள் மீண்டும் புகுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான் உண்மை. ஆனால் நமது வசதிக்காக அடிப்படை அறிவியல் பயன்பாட்டு அறிவியல் என இரண்டே பிரிவுகளாக வைத்துக்கொள்வோம். உதாரணமாக ஒரு கோழிமுட்டையை எடுத்துக் கொள்வோம், ஏன் அது கோளவடிவத்தில் இல்லாமல் நீள்கோள வடிவில் இருக்கிறது, அதனுள்ளே இருக்கும் கூழ்மங்கள் ஏன் ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவது அடிப்படை அறிவியல் எனவும், முட்டை உற்பத்தியை பெருக்குவதற்கு, மற்றும் அவற்றைப் பாதுக்காப்பதற்கான சாதனங்களைச் செய்வது போன்றவற்றை பயன்பாட்டு அறிவியல் எனவும் பிரிப்பது ஒரு குறைந்த அல்லது ஏறத்தாழ சரியான வரையறை (close to proper definition) எனக்கொள்ளலாம். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இதில் அடிப்படை அறிவியல் என்பது உடனடியாகப் பயன்பாட்டிற்கு உதவாமலும், அல்லது அது ஒரு அறிவுத்தேடல் என்பதோடு நின்றுவிடுவது போலவும் ஒரு தோற்ற மயக்கத்தை அளிக்கக்கூடியது. ஆனால் சற்று உற்றுநோக்கினால் இதுபோன்ற அடிப்படை அறிவியல் சிந்தனைகள் பல பொதுவான அறிவியல் உண்மைகளை விலக்கவல்லவை. ஆதலால் சமுதாயத்தின் மொத்த அறிவியல் வளர்ச்சிக்கு இரண்டுமே இன்றியமையாதது. இப்போது நம்முடைய சமுதாயத்தில் வாழ்வியலும் அறிவியலும் ஒரு சேர இருக்கிறதா என்பதற்கான விளக்கங்களைச் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
ஒரு வசதிக்காக விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் முதன்மையாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில், வெளிவந்த பூங்கா மின்னிதழில் ஒருவர் புற்றுநோய் பற்றியும் அச்சிகிக்கைக்கான மருத்துவச் செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தொகைகள் மலைக்க வைக்கின்றன, நடுத்தர வர்க்கத்து மக்களால்கூட கொடுக்க இயலாத ஒரு தொகை. இந்த தொகை மிகுதியாக இருப்பதற்குப் பல சமுதாய மற்றும் மருத்துவமனையின் பேராசை எனப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு நேரடிக்காரணமாகப் பல வெளிநாட்டு மருத்துவக் கருவிகளுக்கான இறக்குமதிச் செலவு மிகுதியாக இருப்பதுவும் ஒன்றாகும். இங்கே அறிவியலின் பயன்பாடு என்ன செய்துவிடமுடியும் என்பதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாம். தமிழகத்தில் உள்ள அரவிந்த் கண்மருத்துவமனை, 1990 ஆம் ஆண்டுவரை கேடராக்ட் சிகிச்சைமுடிந்தபின் பொருத்தப்படும் கான்டாக்ட் லென்சுகளை தலா 200$ என்கின்ற மதிப்பில் இறக்குமதி செய்தன. ஆனால் அவற்றை நம் நாட்டிலேயே தயாரித்து, மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தாமே வடிவமைத்து, பின்னர் இந்திய விஞ்ஞான மையத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் இணைந்து, அந்த லென்சுகளின் புறப்பரப்பை ஃபுளோரினேற்றம் செய்து பயன்பாட்டினை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து தற்போது அதே லென்சுகளை தலா 5$ என்கின்ற மதிப்பில் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளனர்[1].
சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையை ஆதரித்து ஒருவர் கூறுகிறார் "மூக்கைச் சிந்திப்போட்ட கைகளால் அளக்கப்படும் காய்கறிகளையும், நசுங்கி, அழுகிய பழங்களையும் எத்தனை நாட்களுக்கு உண்பது" என்று. ஏதோ அவர்கள் தங்களுடைய மூக்கை ஒழுகிய நிலையில் வைத்துக் கொண்டிருப்பதையே பெருமையாக நினைப்பது போலவும், நகரத்து மக்களுக்கு அழுகிய பழங்களையும் காய்கறிகளையுமே விற்பது என்று சபதம் எடுத்திருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவின் பழங்கள் மற்றும் தானிய உற்பத்தி மேம்பட, அல்லது எதிர்பார்த்த அளவு மேம்படாமல் இருப்பதற்கான காரணிகளாக, தன்னுடைய 2006 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் உலக வங்கி சிலவற்றை முன்வைக்கிறது. அவற்றுள், போதிய மின்சார மற்றும் நீர்வளமின்மை, போதிய சேமிப்பு வசதிகள், கிடங்குகள் இல்லாமை எனப்பலக் காரணங்களையும் கூறியுள்ளது[2]. மேலும் வேதியல் உரங்கள் மற்றும் பருவகால மாற்றங்களால், பயிர்களைத்தாக்கும் புதியவகை நோய்க்கிருமிகள், என இவையும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கக்கூடியவை. இங்கே சமுதாய அடிப்படையிலான பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் அறிவியல் துணைகொண்டு அழிக்கக்கூடிய நேரடிப் பிரச்சனைகளை மட்டுமே கூறியுள்ளேன்.
இவை போன்ற சில வாழ்வியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் நம்முடைய தேசிய விஞ்ஞான ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் பங்களிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம், அல்லது மிகமிகச் சொற்பம் என்று சொல்லலாம். இப்பங்களிப்பை நிகழச்செய்வதற்கு, இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், மற்றும் தேசிய நிறுவனங்கள் என அனைத்தும், சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கான அறிவியல் தீர்வுகளில் தங்களது ஆராய்ச்சிகளை ஈடுபடுத்த வேண்டும், அல்லது ஈடுபட அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவைபோன்ற ஆராய்ச்சிகள் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் என இரண்டிலும் ஒரு சேர மேம்படவேண்டும். இப்படியான ஒரு முன்னேற்றம் நிகழ இந்தியாவிலுள்ள, பல்கலைக்கழங்கள், மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒரு கூட்டு முயற்சிக்கான இணைப்பு மிக அவசியம். இக்கூட்டுமுயற்சி பல வகைகளில் பயனளிக்கக் கூடியது, 1. ஒரே வழிமுறையில், ஒரே பிரச்சனைக்கானத் தீர்வை இருவர் அல்லது இருகுழுக்கள் முயல்வதைத் தவிர்க்கும், 2. ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைகழக ஆய்வகங்களிலும் இருக்கும் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும், 3.சிந்தனைப் பகிர்வுகள் எனப்பல வகைகளில் இந்தக் கூட்டுமுயற்சி உதவிபுரியும். பல்கலைக்கழக அறிவியல் துறைகளை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (DST/CSIR) துறையின் ஆய்வகங்களுடன் இணைத்தல். இங்கே இணைத்தல் என்பது தேசிய ஆய்வுக்கூடங்களில் இருக்கும் விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கிடயேயான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுகளை ஒருசேரச் செய்தல் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள், கடைநிலை மக்களிடம் நேரடித்தொடர்புள்ள, மருத்துவமனைகள், வேலாண் அலுவலகங்கள் ஆகியவற்றுடனான தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் தேசிய ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், மக்களுக்குமான ஒரு தொடர்பு அல்லது உறவைப் பலப்படுத்தமுடியும்.
இங்கே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, இந்தத் தொடர்பு ஏதோ ஏட்டில் படித்தவன் ஏட்டில் படிக்காதவனுக்கு அளிக்கும் அறிவுரையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பல தலைமுறைகளாக ஒரு துறையில் அனுபவம் உள்ளவர்கள் ஏட்டில் படித்ததைவிட சிலவற்றில் மதிநுட்பம் உடையவர்களாக இருப்பர். இதற்கு உதாரணமாக இயற்கை விவசாயத்தைக் கொள்ளலாம். மேலும், மரக்காணம் பாலா அவர்களின் புகைப்படங்களில் பனங்கள்ளில் பல்லி விழுந்தால் அது நச்சுத்தன்மை பெறுவதில்லை எனவும் குறிப்பிடிருந்தார். இதை நேரில் கண்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அனுபவ உண்மையாகக் கொள்வோம். இவை போன்ற அனுபவ அறிவுகளின் பின் உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தால் அவை மிகுந்த பயனளிக்கக்கூடும். உதாரணமாக, பல்லி விழுந்தால் அக்கள் ஏன் நச்சுத்தன்மை பெறுவதில்லை என்பதை உயிர்வேதியல் மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான ஒரு ஆய்வை அருகிலுள்ள பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், தேசிய வேதியல் ஆய்வகமும் இணைந்து கண்டறிவதாகக் கொள்வோம். இக்கண்டுபிடிப்பானது, சத்துணவுக் கூடங்களில் உணவில் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான ஒரு மருந்து தயாரிக்கப்பயன்படலாம். ஆதலால், மக்களுக்கும் ஆராய்ச்சி மையங்கலுக்குமான உறவு இருவழிப்பதையாக இருக்கவேண்டியது அவசியம்.
இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி நடைபெறுவதற்கு நிச்சயம் மூலதனம் ஒரு தடையல்ல, ஏனெனில், 2005-06 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சி நிதியில் 20% செலவிடப்படவேயில்லை எனக்கூறுகிறார் குடியரசுத் தலைவர் [3]. அதனால் பழியை எளிதாக அரசியல்வாதிகளின் மேல்போட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது. ஆனால் இது சாத்தியப்படுவதற்கு, தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழங்களைத் தாழ்வாகவும், பல்கலைக்கழகங்கள் அவற்றுக்குக் கீழுள்ள கல்விநிறுவனங்களைத் தாழ்வாகவும் நோக்காமல் இருக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு நிச்சயம் பெருந்தடையாக இருக்கும். ஆக, நமக்கான அறிவியலைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பல அறிவியல் கூட்டணிகள் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, 70% கிராமப்புற மாணவர்களைக் கொண்ட நம் நாட்டில் உள்ள பாடப்புத்தகத்தில், குடும்பப் படத்தில் தந்தையார் கப் அன்ட் ஸாசரில் தேநீர் அருந்துவது போன்ற படங்களுடன் கூடிய கல்வித்திட்டத்தையும், காலையில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு பற்றிப் பாடம் நடத்திவிட்டு மாலையில் வீட்டில் தம் குழந்தைகளுக்கு அனுமார் சூரியனைப் பிடித்த கதைகளைச் சொல்லும் ஆசிரியர்களையும், இந்தப் பட்டம் வேண்டுமா இவ்வளவு கொடு என்று கேட்கின்ற பல்கலைக்கழகங்களையும், மனுதர்மத்திர்க்கு எவ்வித தீங்கும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பாதுகாக்கும் பணியிலேயே பாதி நேரத்தைச் செலவிடும், இந்திய விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ மற்றும் மேலாண்மை நிறுவனங்களையும், மற்றும் விண்வெளிக்குச் செயற்கைகோள் அனுப்பும் போதுகூட இராகு காலம் எமகண்டம் பார்க்கும் ஆராய்ச்சிக் கூடங்களையும், வைத்துக் கொண்டு நான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நமக்கான அறிவியல் என்று கனவு காண்கிறேன் என்பது உண்மைதான். என்ன செய்வது 2020 க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமே அதனால்தான் கனவு காண்கிறேன். சரி ஒன்றும் கவலைப்படாதீர்கள், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் வந்துவிட்டது, அணுகுண்டுகளைக் கூடையில் சுமந்து விற்றாவது வல்லரசாக்கிவிடலாம். என்ன இது இவ்வளவு துர்நாற்றம், ஓ வீட்டின் கீழே இருக்கும் பாதாள சாக்கடைக் குழி நிரம்பிவழிகிறது, இந்த நாற்றத்தால் கனவு பெரிதும் தடைபடுகிறது. அந்த சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை எடுக்கும் தொழிலாளி நாளைதான் வருவாராம், அதனால் என்ன.. நம் வல்லரசுக் கனவுகளை ஒரு நாள் ஒத்திவைப்போம்.
[3] K.S. Jayaraman, Nature, vol 445, 134 (2007).

Friday, August 31, 2007

மன்னிப்புக் கடிதம்

மரணம் என்கின்ற வாழ்வியல் யதார்த்தத்தை எந்த நொடியிலும் நான் சந்திக்க நேருமாதலால், இக்கடிதத்தை உனக்காக இப்போதே எழுதிவைக்கிறேன். முதலில் என்னை மன்னித்துவிடு. சரி, நான் செய்த குற்றங்களும், துரோகங்களும் மன்னிக்க முடியாதவைதான், ஒப்புக்கொள்கிறேன்.

அதனால் தயவு செய்து என்னை மன்னித்துவிடாதே.

குற்றங்களும் துரோகங்களும் எண்ணிலடங்காதவை, நீ பிறந்தவுடனேயே உன்னைப் பால்வகைப்படுத்தி அடையாளப்படுத்தும் அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ கொஞ்சி விளையாடிய உன் மழலை மொழியல்லாத வேற்றுமொழியில் உனக்கு இவ்வுலகத்தை அறிமுகப்படுத்தும் பழக்கங்களைப் போற்றியமைக்காகவும், நான் உனக்காக வைத்திருக்கும் ஒரு கல்விமுறையை, தினமும் பள்ளிமுடிவின் மணியோசையில் பீரிட்டு எழும்பிய சந்தோசக்கூக்குரல் அதை எள்ளி நகையாடியதைப் புரிந்துகொள்ளாமைக்கும், குறிப்பிட்ட குடிலில் பிறந்தமைக்காக நீ இந்தப் பிரிவைச் சேர்த்தவன் என்றும், இந்தக் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்பவை போன்ற அடிப்படை மனித உரிமையைத் தட்டிப்பறிக்கின்ற அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ வளர்ந்தபின் உயிரியலின் அடிப்படைச் சாரமான காதலை வெளிப்படுத்துவதற்குக்கூட நீ ஒரு கள்வனைப்போல் பயந்து பதுங்கிச் செய்கின்ற ஒரு ஈனத்தை வளரவிட்டமைக்கும், பின்னர் உயர்கல்வி என்கின்ற போர்வையில் முகம்தெரியாத முதலாளியின் தேவைக்கேற்ப உன்னைத் தயார்படுத்தும் அவலநிலையை வளர விட்டமைக்கும், உன் வாழ்க்கைத்துணையத் தேர்ந்தெடுப்பதைக்கூடக் கண்மூடிச் சடங்குகளால் வியாபாரமாக்கியதற்கும், போலியான தேசியவாதம், மற்றும் ஒடுக்குமுறைகள், என ஏராளமான அவலங்களைக் களையாமல் விட்டுச் செல்வதற்காகவும் அல்லது இந்தச் சூழலில் உன்னைத் தவிக்கவிடுவதற்காகவும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

மேற்கூறிய குற்றங்களுக்கெல்லாம் நீ ஒருவேளை என்னை மன்னிக்கலாம், ஆனால் மன்னிப்புக் கோருவதற்குக் கூட அருகதையற்ற ஒரு மாபெரும் குற்றம், இல்லை, ஒரு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறேன். நீ வாழப்போகும் சூழலை ஒரு குப்பைத் தொட்டியாக்கி, நீ சுவாசிக்கப் போகும் காற்றைக் கரியாக்கி, குடிநீருக்காகக் கூட நீயொரு போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலையை விட்டுவைக்கிறேன். இத்துரோகத்திற்காக ஒரு இரக்கமற்ற தண்டனையைக் கொடுத்துவிடு நிச்சயம் மன்னித்துவிடாதே.

ஆனால், இக்கடிதத்தை நீ படிக்கும் போது இக்கடிதத்திற்கான அவசியமில்லாமலிருக்க வேண்டும் என்பது என்னுடைய ப்+ஏஏஏஏஏஏ.... ராசை. ஆனால் நீயும் இப்படி ஒரு கடிதம் எழுதிவிடக்கூடாது என்பது என்னுடைய கனவு.

ஒரு வேளை இக்கடிதத்துடன் நான் உன்னை நோக்கிப் பயணிக்கும்போது மரணித்திருந்தால், யாராவது இக்கடிதத்தை இன்று புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையிடம் சேர்த்துவிடுங்களேன். தயவுசெய்து இதை அரசு மருத்துவமனையிலுள்ள தொட்டில் குழந்தையிடம் கொடுத்துவிடாதீர்கள். அது படிக்கும் முன் கிழித்துவிடும், "தண்டனை கொடுக்கும் முன் தப்பிவிட்டான் துரோகி" என்று.


இப்படிக்கு,

நிகழ்காலம்.