Showing posts with label செல். Show all posts
Showing posts with label செல். Show all posts

Monday, March 3, 2008

இறப்பு - உரையாடல் - IV - இதழுதிர்தல்

இறப்பு பற்றிய தொடருரையாடலில் சென்ற பகுதியில் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்ட ஒரு இருதயச்செல்லைப்பற்றிப் பேசினோம். அவ்வகை நிர்பந்திக்கப்பட்ட இறப்பு (Necrosis) முறை மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு என்றும் பார்த்தோம். ஆனால், இறப்பு எப்போதும் கொடூரமானதாக இருப்பதில்லை. இயற்கை அல்லது நிர்ணயிக்கப்பட்ட செல் இறப்பு (Programmed Cell Death -PCD) அபோடொசிஸ் (Apoptosis) என்றழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வைச் செல்லின் தற்கொலை என்றே குறிப்பிடுகின்றனர். Apoptosis - ap'o-to'sis என்ற கிரேக்க வார்த்தயின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர். இதன் பொருள் மலரிலிருந்து இதழ் உதிரும் நிகழ்வைக்குறிக்கும். இது தற்கொலை என்றழைக்கப்பட்டாலும், இந்நிகழ்வு, சூழல் நிர்பந்தங்களினாலோ அல்லது தியாகத்தினாலோ எழுவதல்ல.

பின்னர் ஏன் அபோடொசிஸ் இறப்புமுறை தற்கொலையென்றழைக்கப்பட வேண்டும்?

ஏனெனில், ஒரு செல் இறக்கவேண்டுமென்ற கட்டளை அச்செல்லினுள்ளிருந்துதான் வருகிறது. செல்லிலுள்ள உறுப்புகளின் செயல்பபட்டிற்கான கட்டளைகள், அச்செல்லின் உட்கருவிலிருந்து வருவதை முந்தய பகுதிகளில் பார்த்தோம். அப்படி ஒரு செல் இறக்கவேண்டும் என்ற கட்டளையும், உட்கருவிலிருந்தே வருகிறது. ஆனால், இறப்பு குறித்தான இக்கட்டளையும் செல்லின் பிறப்பின் போதே உட்கருவில் பொறிக்கப்பட்ட ஒன்று. இதுதான் உட்கருவிலிருந்து வரும் செல்லிற்கான கடைசிக்கட்டளை. தன்னையே அழித்துக் கொள்ளும் இக்கட்டளையை வெளியிடுவதாலேயே இந்நிகழ்வு தற்கொலையென்றழைக்கப்படுகிறது.

இக்கட்டளையைப் பொறுத்தவரை செல்லிற்குத் தேர்வுச்சாத்தியங்கள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும், ஏற்றுக்கொண்டுதானாகவேண்டும் (It has no option). கட்டளை பிறப்பிக்கப்பட்டபின் மாற்றிக்கொள்ளவோ, அல்லது இறப்புக்கான கட்டளையை பிறப்பிக்காமலோ இருக்கமுடியாது. செல்லின் உட்கருவில் இருக்கும் DNA க்களில் இறப்பிற்கான கட்டளையும் சேர்ந்தே பதிக்கப்பட்டிருக்கிறது. செல்லின் செயல்பாட்டிற்கான கட்டளைகளைப் பிறப்பிப்பது போலவே, இறப்பிற்கான கட்டளையையும் பிறப்பிக்கிறது.

செல்லிறப்பு எனும் நிகழ்வின் துவக்கம், மேலே குறிப்பிட்ட கட்டளையில் துவங்குகிறது. இறப்பிற்கான இக்கடைசிக் கட்டளையைப் பிறப்பித்த பின்னர், இறப்பு என்கின்ற நிகழ்வு துவங்க ஆரம்பிக்கிறது. இக்கட்டளையை உட்கருவிற்கு வெளியில் செல்லுக்குள் இருக்கும் சைட்டோப்ளாஸம் எனும் திரவத்தின் மூலம் மற்ற உறுப்புகளுக்குப் பரவச்செய்துவிட்டு, கடமைகள் முடித்த ஒரு திருப்தியோடு தம்முடைய இறப்பைத் துவங்குகிறது. இக்கட்டளைக்குப் பின் செல்லின் உட்கருவிற்கும் செல்லின் மற்ற உறுப்புகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டித்துக் கொள்கிறது. உட்கருவினுள் இருக்கும் DNA க்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. (DNA என்பது ஒரு வகை நியூக்ளிக் அமிலம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், அதில் நியூக்ளியோடைடுகள் எனப்படும் நான்கு வகையான மூலக்கூறுகளின் சீரான அமைப்பை உடையது என்று ஏற்கனவே நான் அறிந்தது) இங்கு இச்சீரான அமைப்பிலிருந்து தனித்தனிச் சிறு மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதையே DNA அழிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகின்றனர்.[*]

இது இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாக தாமாகவே நடக்கிறது, அதாவது புறத்திலிருந்து எவ்வித நிர்பந்தங்களும் இல்லாத போதும். தாம் இருக்கும் செல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கான கட்டளையைப் பிறப்பித்துவிட்டது என்பதை அறியாத உறுப்புகள் தமது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் வரிசையில் இருப்பதால், அவை இறப்பிற்கான கட்டளையை உணருவதில்லை. இது ஏறக்குறைய மனிதனின் மூளை இறந்தபின்னும், ஒரு சில உறுப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு இணையான நிகழ்வு.

இந்த Programmed Cell Death (PCD) எனும் நிகழ்வை நேரடியாக நாம் தொலைநோக்கியில் நோக்கும் வாய்ப்பிருந்தால், அதன் நிகழ்வுகள் கீழுள்ள வரைபடத்திலுள்ள படிகளில் நிகழும்.



அபோப்டொசிஸ் இறப்பு முறையின் முதல் நிகழ்வாக அச்செல் தனது சுற்றுப்புறத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறது. பின்னர், தனியாக ஒரு ஒற்றைச்செல்லாகத் தனித்து நிற்கிறது. பின்னர், இறப்பிற்கான முதல் அறிகுறியாகச் செல்லின்சுவரான ப்ளாஸ்மா இழைச் சுருங்கத் துவங்குகிறது. இதைச் சுருக்கம் என்பதைவிட செல்சுவரின் சுருங்கி விரிதல் போன்ற ஒரு அலைவுறு இயக்கம் என்று கொள்ளலாம். இதனை செல்லின் இறப்பின் நடனம் (dance of death) என்றழைக்கின்றனர். பின்னர், தனது செல்சுவற்றை மிகவும் சுருக்கிக்கொள்கிறது. பின்னர், சிறு பகுதிகளாகப் பிரிந்து பின்னர் செல்லின் இறப்பிற்கான ஆதாரமாக அதன் உடலின் சிறு பகுதிகளாக மிதக்கத்துவங்கி விடுகிறது. அபோப்டொசிஸ் இறப்பின் படிநிலைகளை முதலில் 1972 ஆம் ஆண்டு விளக்கியவர்கள், University of Aberdeen ஐச் சேர்ந்த Scottish விஞ்ஞானிகள்.

இப்படியாகச் சிதைந்த அச்செல்லின் உடல் என்ன ஆகும்? ஆம், அவைச் சத்தமில்லாமல் அருகிலிருக்கும் செல்களினால் உணவாக உட்கொள்ளப்பட்டுவிடுகின்றன. சிலநேரங்களில், அருகிலிருக்கும் செல்லினுள் சென்றபின்னும் சில உறுப்புக்கள் முழுமையாகவே இருக்கும். இப்புதிய செல்லின் குப்பைத்தொட்டிக்குள் (lysosomes) தள்ளப்பட்டு மக்கிய சூப்பாக மாறும் வரை அவை தமது கடமையைச் செய்துகொண்டிருப்பதும் உண்டு, தாமிருந்த செல் இறந்துவிட்டது என்பதையறியாமல்.

இப்படியாகவொரு செல் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடுகிறது.

இயற்கை இறப்பு அல்லது செல் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாக இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலில் ஒரு தாயின் கருவறைக்குள் நுழைவோம். எல்லாரும் அங்கிருந்துதான் வந்தோம் அதனால் இந்தக்கருவறைக்குள்ள யார்வேண்டுமானாலும் நுழையலாம், வாங்க. தாயின் கருவறைக்குள் முதல் எட்டு வாரம் ஏறக்குறைய தடையற்ற செல்களின் பிறப்பு மட்டுமே இருக்கும். இவ்வெட்டு வாரங்களில் மொத்த உடலுக்கான வரைவுத்திட்டம் தீட்டப்படுகிறது. எட்டாவது வாரத்தின் இறுதியில் ஏறக்குறைய மனித உருவத்தைப் பெறுகிறது கரு. இப்போது, அவ்வுறுவத்தின் கைகளும், கால்களும் ஒரு துடுப்பு போலவே இருக்கும். பின்னர், நிகழ்கின்ற தொடர் செல்லிறப்புகளினால் கைகளிலும், கால்களிலும் விரல்கள் தோன்ற ஆரம்பிக்கும். இறந்த செல்களை அருகிலிருப்பவையே உணவாக்கிக் கொள்கின்றன. இப்படியாகப் பல இறப்புகளினால் நமக்கு வடிவம் கிடைக்கிறது.

மற்றுமொரு முக்கியமான செல்லிறப்பு நிகழ்வு நியூரான்கள் எனப்படும் நரம்புச்செல்களில் நிகழ்வது. மூளையிலும், தண்டுவடத்திலும் (spinal cord) இருக்கும் நியூரான்கள் மற்ற உறுப்புக்களுடன் ஒரு நரம்பு இழையினால் இணைக்கப்பட்டிருக்கும். அவை, ஒரு மின் சமிஞ்சைகளின்(impulses) மூலம் தாம் தொடர்பு கொண்டிருக்கும் உறுப்புகளின் இயக்கத்திற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும். இவ்விணைப்பை அவை ஏற்படுத்திக்கொள்ளும் விதம் மிகவும் அதிசயிக்கவைக்கும் நிகழ்வு.

கருவின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இந்நியூரான்கள் மிகவும் அதிக எண்ணிக்கையிலான நரம்பு இழைகளை எல்லா திசைகளிலும் தமது புறத்தில் உற்பத்தி செய்து அப்படியே படரவிட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட இழை, இணைப்பு தேவைப்படும் ஒரு செல்லையோ, திசுவையோ சந்திக்க நேர்ந்தால் அவை தமக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். இப்படி உடலில் தேவையான இணைப்புகள் நடந்து முடிந்து ஒரு வளர்ச்சி நிலையை அடைந்தவுடன் இணைக்கப்படாமல் நியூரான்களின் புறத்தில் இருந்த இழைகள் மெதுவாக இறக்கத்துவங்கும். வேறு செல்களுடனோ அல்லது உறுப்புகளுடனோ தொடர்பு கொண்டால் மட்டுமே இவை தொடர்ந்து வாழமுடியும். அப்படி இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அவை இறக்கவேண்டும். இவ்விறப்பு நாம் மேலே பார்த்த அபோடொசிஸ் வகையைச் சேர்ந்தது. இந்நிகழ்வின்பின் பல வியப்பான அறிவியல் உண்மைகள் உள்ளன, பதிவின் நீளமும் பேசுபொருளும் கருதி அவற்றை வேறு பதிவுகளில் பார்க்கலாம்.

இது ஏறக்குறைய நம் கைகளில் ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்ட்ட ஒரு மின்கம்பிக்கற்றைகளைப் போலவும், அக்கம்பிகளில் நமக்குத் தேவையானவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டபின்னர், மின்சுற்றில் இணைக்கப்படாத மின்கம்பிகள் தாமாகவே மறைந்து போவதற்கு இணையான ஒரு நிகழ்வு.

இந்நியூரான்கள் குறித்த எடுத்துக்காட்டை தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு காரணம் neural networks என்ற நியூரான்கள் குறித்த ஆய்வுகள் சமீப காலங்களில் மிகவும் பிரபலமானவையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றன.

ஆனால், இத்தொடரில் இதுவரை இறப்பின் வகை மற்றும், இறப்பின் போது நிகழும் நிகழ்வுகள் குறித்துதான் பார்த்திருக்கிறோம். மிகவும் முக்கியமான கேள்வி, ஒருசெல் ஏன் இறக்கவேண்டும்? இறப்பு ஏன் நிகழவேண்டும் என்பதுதான் சுவாரஸ்யமான புதிர். இனி வரும் தொடர்களில் ஏன் இறப்பு? மற்றும், இறப்பு என்ற நிகழ்வு பரிணாமத்தில் சில உயிர்களிடம் (செல்களிடம்) மட்டும் எப்படித் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது என்று பார்ப்போம்.

இனி வரும் தொடர்களில் இறப்பு என்றால் அது அபோடொசிஸ் (PCD) இறப்பையே குறிக்கும்.

*******************
1."SEX & THE ORIGINS OF Death", by William R. Clark
Figure Source:

*******************
குறிப்பு:
[*]
//(DNA என்பது ஒரு வகை நியூக்ளிக் அமிலம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், அதில் நியூக்ளியோடைடுகள் எனப்படும் நான்கு வகையான மூலக்கூறுகளின் சீரான அமைப்பை உடையது என்று ஏற்கனவே நான் அறிந்தது) இங்கு இச்சீரான அமைப்பிலிருந்து தனித்தனிச் சிறு மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதையே DNA அழிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகின்றனர்.[*]//

மேலே மீண்டும் பேசப்பட்ட வரிகளில், மிகவும் சுவாரஸ்யமான ஒரு அறிவியல் சிக்கல் புதைந்துள்ளது. ஒரு DNA அழிக்கப்படுகிறது என்பது அதில் இருக்கும் நியூக்ளியோடைடுகளின் சீரான அமைப்பைக் குலைப்பது என்பது ஒரு உயிரின் முடிவைக்குறிக்கிறது. அப்படியானால், அதன் உயிர்த்தலுக்கான பண்புகளுக்கு எது காரணம்? அது உருவாகியிருக்கும் மூலக்கூறுகளா அல்லது மூலக்கூறுகளின் அமைப்பா? Is it the Matter or Configuration?

ஒரு DNAவில் இருக்கும் நியூக்ளியோடைடுகளின் அமைப்பை அழித்தால் ஒரு DNAவை அழித்ததாகிறது என்றால், நாம் மேலே பேசிய கட்டளைகள் போன்றவை, அதன் அமைப்பிலேதான் பொதிந்திருக்க வேண்டும். அப்படியானால் அவ்வமைப்பில் எந்த ஒரு மூலக்கூறை உட்காரவைத்தாலும் அது ஒரு உயிர் ஆகிவிடுமா, என்றால் நிச்சயம் இல்லை. அப்படியானால் இரண்டுமே தேவை என்பது ஊகிக்க முடிகிறது.

ஆனால், இருப்பது நான்கு மூலக்கூறுகள் அதன் அமைப்பில் பிறப்பிலிருந்து இறப்புவரையான செய்திகள் பொதிக்கப்பட்டிருக்கின்றன என்றால், அது என்னவகையில் பொதிக்கப்பட்டிருக்கும்? அமைப்புமுறையிலிருந்து அந்தக் கட்டளைகள் எவ்விதம் மூலக்கூறுளாக சைட்டோப்ளாசத்தின் உதவியில் செல்லின் உறுப்புகளை சென்றடைகின்றன? (மனிதனின் பல்வேறு உறுப்புகளுக்கிடையேயான தொடர்போடு குழப்பிக்கொள்ள வேண்டாம்). அவை மூலக்கூறுகளாக இருந்தாலும் அவற்றைச் சுற்றியுள்ள மின்புலமும், மின்சமிஞ்சைகளும்தான் இத்தொடர்புக்கு முக்கியமானதா? ஒருவேளை, மின்புலத்தின் முக்கியத்துவம் கருதிதான், செல்லுக்குள் இருக்கும் பொட்டாசியம் அயனியின் செறிவு அதன் உயிர்த்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாகிறதா?

இப்படி உங்களுக்கு எழுந்தது போலவே எனக்கும் பல விடைதெரியாத கேள்விகள் அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்த தேடலில், ஏறகனவே சில முடிவுகள் தெரிந்தாலோ அல்லது எங்காவது விளக்கப்பட்டிருந்தாலோ தெரியப்படுத்துங்கள். நானும் தேடுகிறேன், ஏதாவது கிடைத்தால், கிடைத்தது புரிந்தால், இது குறித்து மேலும் உரையாடுவோம்.

உயிருள்ளவை, உயிரற்றவை என பேதமில்லாமல் இயற்கையில் இருக்கும் சீர்மையும் (Symmetry) மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இது குறித்து வேறு சமயத்தில் விரிவாக உரையாடுவோம்.

Thursday, February 14, 2008

இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை

இறப்பு குறித்த இத்தொடர் உரையாடலில், முதல் இரண்டு பகுதிகளில் உயிர்த்தோற்றம் பற்றிய ஒரு சிறு உரையாடலும், செல்கள் குறித்தும் உரையாடினோம். செல்லுக்குள்ளான நமது சுற்றுப்பயணம் உங்களையும் வியக்கவைத்திருக்குமென்று நினைக்கிறேன். 10 மைக்ரான் இருந்து கொண்டு உள்ளே ஒரு தனி அரசாங்கம் செய்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் வெளியே இருக்கும் ஒரு பெரிய மிருகக்கூட்டை (நாமதான்)இயக்கிக்கொண்டிருக்கிறது.

போனபகுதியில நாம பேசுனது ஒன்னும் ஞாபகமில்லாவிட்டாலும் பரவாயில்லை இப்பகுதி உரையாடலுக்கு சில அடிப்படைகள் மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆங்காங்கே தேவைப்பட்டால் எட்டிப்பார்த்துவிட்டு தொடர்ந்து பேசுவோம்.

நாம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செல்லிற்கு வெளியே வரும்போது, ஒரு பரபரப்புசூழல் உருவானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏன் அந்த பரபரப்பு?

இப்போது கவனித்தீர்களா செல்லின் மேல் இருந்த lymph திரவத்தின் ஓட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த திரவம் இரத்தஓட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்றல்லவா பார்த்தோம், இப்போது அதன் ஒட்டம் குறைந்திருக்கிறது என்றால்..?? ஆமாம் நீங்கள் ஊகித்தது சரிதான் இவ்விருதயச் செல்லான மையோகார்டியல் (myocardial) செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ குறைபாடு. அதனால் தான் இந்த லிம்ப் திரவத்தின் ஓட்டத்திலும் குறைபாடு இருக்கிறது.

அது என்னங்க குறைபாடு? ஏன் இந்தக் குறைபாடு? அதவிடுங்க.. அதுவா முக்கியம், ஒரு செல்லுக்கு.. அதுவும் இருதயச்செல்லுக்கு இரத்தம் செல்லவில்லையென்றால்..என்ன ஆகும்!? இது ஒரு மோசமான அறிகுறியாச்சே? மனித உடலிலுள்ள ஒரு செல்லுக்கு இரத்தம் போகலைன்னா என்ன அர்த்தம்? அச்செல்லுக்கு உணவும், ஆக்ஸிஜனும் போகவில்லையென்று அர்த்தம். ஒரு செல்லுக்குள் உணவும் ஆக்ஸிஜனும் செல்லவில்லையென்றால் என்னாவது? இருப்பு போதவில்லை அல்லது போதிய காச்சாப்பொருளின்மையால் தனது ஆற்றல் உற்பத்தியை உடனடியாக நிறுத்திக்கொள்கிறார் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). உங்கள் பதட்டம் புரிகிறது , மைட்டோகாண்டிரியா தனது வேலையை செய்யமுடியாத சூழலில் இருந்தால் என்னாவது, செல்லின் உயிர்த்தலுக்குத் தேவையான ATP (adenosine triphosphate) இல்லாமல் போய்விடும்.

ATP இல்லையென்றால் செல்லின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றல் இல்லையென்று அர்த்தம். செல்லுக்குள் ATP ன் அளவு தேவையான அளவைவிடக் குறைய ஆரம்பிக்கிறது. நம் செல் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்பார்க்காத ஒன்றல்ல, உடனடியாக மாற்று ஆற்றல் மூலங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. அது என்ன மாற்று ஆற்றல் மூலம்? செல்லுக்குள்ளேயே இருக்கும், கொழுப்பு மற்றும் சில புரதங்களை ஆற்றலாக மாற்றிக் கொண்டு இவ்வாற்றல் தேவையை சமாளிப்பது. (செல்கள் கூட மாற்று ஆற்றலின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன). ஆனால் இது ஒத்திப்போடுதலுக்கான ஒரு முனைப்பேயன்றி இதுமட்டுமே தீர்வல்ல. செல்லின் உயிர்ப்பு இயக்கம் உறைநிலையை நோக்கிச் சென்றுவிட்டது அல்லது செல்லுக்குளிருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

ஏறக்குறைய அந்நிகழ்வு துவங்கியாகிவிட்டது. மேலே விளக்கப்பட்ட நிகழ்வில் பெரிதும் பாதிக்கப்படுபவை செல்லின் சுவற்றில் இருக்கும் பம்புகள்தான். இவற்றின் முக்கியப் பணியே, உள்ளே இருக்கும் பொட்டஷியம் அயனியின் செறிவை சீராக வைத்திருப்பதும், உள்ளே புகும் நீரையும் கால்ஷியம் அயனியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் என்று பார்த்தோம். மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை இறப்பு நேராமல் இருப்பதற்கு இப்பம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். செல்லின் செயல்பாடுகளையும் மீறி வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது நம் செல். இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.**

செல்லுக்குள்ளிருக்கும் புரதத்தாயாரிப்புகள் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டுவிட்டன, மேலும் உட்கருவிலிருந்து வரும் கட்டளைகள் உறுப்புகளுக்குப் போய்ச் சேராமல், உறைந்து கிடக்கின்றன. இப்படி வேளை செய்யாத உறுப்புகள் எல்லாம் அப்படியே கழிவு போல தனது மறுசுழற்சியாளரான லைசோசோம்களுக்குள் தள்ளப்படுகின்றன. ஆனால், போதிய ஆற்றலின்மையால் அவையும் திணறிக்கொண்டிருக்கின்றன. இப்போது, செல்லுக்குள் எங்கு நோக்கினும் ஒரே கேள்வி, எங்கே ATP ?

என்னதான் கையிருப்பு ஆற்றலை செல்லின் சுவரில் இருக்கும் பம்புகளுக்கு மட்டுமே கொடுத்தாலும், தொடர் பற்றாக்குறையினால் பம்புகளும் இப்போது வேலை செய்ய முடியாமல் திணறி தனது முயற்சியை கைவிட்டு அமைதியாகின்றன. இதற்காகவே காத்திருந்தது போல் கால்ஷியம் அயனி மெதுவாக செல்லுக்குள் நுழைந்து அனைத்து உறுப்புகளையும் அரிக்கத் துவங்குகின்றன. மேலும், வெளியிலிருக்கும் நீர் மெதுவாக செல்லின் உள்ளே நுழைந்து, அச்செல்லை ஒரு பலூன் போல உப்பச் செய்து விடுகிறது. ஓரளவிற்கு மேல் செல்லை அதன் சுற்றுப்புறத்திலிருந்து காத்துவந்த செல்சுவரில் விரிசல்விழத் துவங்குகிறது. பின்னர் நீரின் அழுத்தத்தால், தன் உறுப்புகளை உடலின் இருளில் உமிழ்ந்துவிட்டு சலனமற்று கிழிந்து தொங்குகிறது அச்செல்.

இப்படி இறப்பதற்கு நிர்பந்திக்கப்படும் இறப்பு முறை நெக்ரோசிஸ் (Necrosis) என்றழைக்கப்படுகிறது.


சரி இப்போ இது ஏன் நிகழ்ந்தது? அல்லது இச்செல் இறப்பதற்கு நிர்பந்தித்தக் குறைபாடு என்ன? என்று பார்ப்போம். எல்லாம் கொழுப்புதான்.. அட திட்டலங்க.. கொழுப்புதான் காரணம். இருதயத்திற்கு செல்லும் இரத்தப் பாதையில் சேர்ந்த கொழுப்பு, இரத்த செல்களின் இறந்த உடல் என ஒரு குப்பையான கலவை அதன் சீரான ஓட்டத்தை தடைசெய்து கொண்டே இருந்து ஒரு நாள் அதுவே மிகப்பெரிய அபாயமாக மாறிவிட்டது. இதுபோன்ற கழிவுகளின் சேர்க்கையைக் களைவதற்கு உடலில் தற்காப்பு வீரர்கள் இருந்தாலும் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அவையும் இத்தடையை அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பலநாட்கள் சேர்ந்த கழிவுகள் தீடீரென்று ஒருநாள் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையே தடுத்துவிடுவதால், இருதயச் செல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இதை மாரடைப்பு என்ற பெயரில் புற உடலில் இதன் தாக்கங்களைப் பற்றி பலரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்.

ஆனால் செல்களின் இறப்பு என்பது இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுதானா? வேறு வழிகளில் செல்கள் இறப்பதற்கான வழிமுறைகளே கிடையாதா? என்ற கேள்வி நியாயமானதுதானே. ஆனால், உயிரியலில் இறப்பு என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் (நெக்ரோசிஸ்) என்று பலகாலம் நம்பிவந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் பிறப்பைவிட அல்லது அதற்கு இணையான சுவாரஸ்யமான விசயம் இயற்கை இறப்பு. Programmed cell death (PCD) அல்லது அபோப்டிஸ் (Apoptosis) என்றழைக்கப்படும் இறப்பு முறை பின்னர் கண்டறியப்பட்ட ஒன்றுதான். இதன் கிரேக்க அர்த்தம் மலரிலிருந்து உதிரும் இதழ்கள் என்பது. இவ்வகை இறப்புமுறை தான் பரிணாமத்தில் விளைந்தது. இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் உரையாடுவோம்.

************************************

1. "SEX & THE ORIGINS OF Death", by William R. Clark


** குறிப்பு


//இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.** //


இவ்வாக்கியத்தில் ஒரு மிக முக்கியமான உண்மை புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன். வாழ்வதற்கான முனைப்பில் அச்செல் அதன் முக்கியப் பணியான சுருங்கி விரிதல் குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல், தனது உயிரைக்காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. இதை இரண்டு வகைகளில் அனுகலாம், 1. இது போன்ற சூழ்நிலையில், இச்செல் உயிர்த்திருந்தால்தான் மொத்த விலங்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதால் இப்படிப்பட்ட செயலைச் செய்ய அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். 2. தாம் ஒரு பகுதியாக இருக்கின்ற விலங்கின் உயிர்ப்போ அல்லது இறப்போ பற்றிக் கவலையில்லாமல், தன்னுடைய உயிரைக்காத்துக் கொள்வதில் அச்செல் முனைப்புடன் இருக்கலாம்.


இயற்கையாக இறக்கின்ற ஒரு மனிதனின் உடலில் ஒருவரது மூளையும், இருதயமும் முழுவதுமாக (இயற்கையாக) இறந்துவிட்டபின்னும், உடலின் பல பகுதிகளிலிருக்கும் உறுப்புகளின் செல்கள் இயற்கையாக இறக்காமலிருக்கும். மேலும், அவை பின்னர் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு நெக்ரோசிஸ் இறப்பு முறையில் இறக்கின்றன. இந்நிகழ்வு நாம் மேற்கூறிய இரண்டு காரணிகளில் இரண்டாவது காரணியையே முன்னிலைப்படுத்துகிறது.

உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது. வெறும் முனைவு என்பதைவிட இம்முனைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், பரிணாமங்களும் பிரமிக்க வைக்கின்றன அல்லது மிகவும் சிறுக்க வைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

Wednesday, February 6, 2008

இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்

இறப்பு குறித்தான இத்தொடர் உரையாடலின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அனைத்து உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமானமாக இருப்பது செல்கள்தான். மனிதனின் இறப்பு என்பது அவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது கண்டறியப்பட்ட உண்மை. ஆதலால், இறப்பை குறித்து எழுந்த தொடர் கேள்விகளை செல்களை ஆராய்ந்ததன் விளைவாக அறியப்பட்ட முடிவுகளினடிப்படையிலேயே தொடருவோம். இப்பகுதியில் உயிரின் தோற்றம் மற்றும் செல் குறித்த ஒரு சிறு அறிமுகமும் அதன் பின்னர் அதன் இறப்பில் ஏற்படும் நிகழ்வு குறித்தும் உரையாடுவோம். இப்பகுதியில் பேசப்பட்டிருக்கும் பலவும் உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கலாம், ஆனாலும் ஒரு முழுமைக்காக அல்லது ஒரு revisit ஆக இருக்கட்டும் என்பதால் மீண்டும் பேசியிருக்கிறேன்.

உயிர்த் தோற்றம்:

பலருக்கு இருக்கும் ஒரு ஆவலான கேள்வி பூமியின் முதல் உயிர்த்தோற்றம் பற்றியது. பூமியில் உயிர்த்தோற்றம் என்பது நம்மைப்போன்ற பலசெல் உயிரிகளுடன் துவங்கவில்லை என்பது உறுதியாக அறியப்பட்ட ஒன்று. இப்பூமியின் வயது ஏறத்தாழ 5 பில்லியன் (5x10^9 - சுமார் 500 கோடி) ஆண்டுகள்.

துவக்கத்தில் பூமியின் வளிமண்டலம் தற்போதிருப்பது போல இருந்திருக்க வாய்ப்பேயில்லை, ஏனெனில் புதிதாக இறுக்கமடைந்த பூமியின் கருப்பொருட்களிலுருந்து வெளிவந்த வாயுக்கள், தற்போது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து மிகவும் மாறுபட்டது. புவியின் பரப்பிலிருந்த அதீத அழுத்தம், அபரிமிதமான வெப்ப, மின் மற்றும் கதிரியக்க ஆற்றல்களினால், கடலிலிருந்த கார்பன் மற்றும் நைட்ரஜன் அடிப்படையிலான மூலக்கூறுகள் உயிரின் அடிப்படைக்கட்டுமானமான புரோட்டின்களையும் நீயூக்ளிக் அமிலங்களையும் தோற்றுவித்தன. இவ்வேதிவினையானது, அப்போதைய சூழலை உருவாக்கி, ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டவை.

மேற்கூறிய உயிரின் அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து முதல் உயிர்த்தோற்றம் அதாவது முதல் செல், சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தோன்றிய முதல் உயிரின் வழிமுறை இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் ஒருவாறு அனுமானிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
அது என்னங்க உயிர்? உயிருள்ளவைன்னா என்ன?


முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுக்கும் இந்த உயிருள்ள என்று சொல்லப்படுகின்ற செல்லுக்கும் என்ன வித்தியாசம். இந்த வேதிவினையில்(chemical reaction) விளைந்த இந்த விளைபொருளுக்கு (product) மட்டும் என்ன ஒரு தனியான உயிர் என்ற மரியாதை.

உயிருள்ளவை என்பதை ஒரு சில பண்புகள் அடிப்படையிலேயே வரையறுக்கிறோம். உணவு உட்கொள்ளுதல், சூழலுக்குத் தகுந்தார்போல் இடம்பெயர்தல், இனப்பெருக்கம் செய்தல் அல்லது தம்மைப்போன்ற ஒன்றை உருவாக்குதல் (பிரதியெடுத்தல்-self replicating). இவையனைத்தும் ஒரு செல்லுக்கு உண்டு. ஆனால், முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுகளுக்கு இப்பண்புகளில்லை. இப்படிப்பட்ட உயிரிகள், பாக்டீரியா, அமீபா போன்ற பல ஒரு செல் உயிரிகளாக இன்றும் இருக்கின்றன. ஆனால் மேற்கூறிய, வேதிவினையடிப்படையில் புதிய உயிர்தோன்றும் சாத்தியக்கூறுகள் தற்போது பூமியிலில்லை, இனப்பெருக்கம் அல்லது பிரதியெடுத்தல் அடிப்படையிலேயே புதிய உயிரிகள் தற்போது தோன்றுகின்றன. (**குறிப்பு)

சரி ஒரு வேதிக்குழம்பிலிருந்து முதல் உயிர் தோன்றியாயிற்று, இப்போது அது வாழ வேண்டுமே. அவ்வுயிர் வாழும் சூழலானது மிகவும் ஆபத்தானது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாறக்கூடிய வெப்பநிலையும், நீரும், உணவும் மாறி மாறி வந்து செல்லக்கூடிய சூழலும், அமிலத்தன்மையும் (acidity), உப்பினளவும் (salt level) நினைத்த நேரத்தில் மாறக்கூடிய சூழலுக்கும் நடுவே வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமே. இப்போராட்டத்தை அவ்வுயிரி தனித்துச் சந்தித்தேயாக வேண்டும், குறுக்கு வழிகள் கிடையாது. இப்படிச் சூழலுக்குத் தகுந்தாற் (ஒரு வரம்புக்குள்) போல் தம்மை மாற்றிக்கொள்ளும் (physiological balancing) செயலை உயிரியலில் ஹோமியோஸ்டேடிஸ் (homeostatis) என்று குறிப்பிடுகின்றனர்.

மேலே குறிப்பிட்டதைவிட அவ்வுயிரிக்கு மிகப்பெரிய ஆபத்து அல்லது வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் விளிம்பிற்குத் தள்ளுவது யார் தெரியுமா? நம்ம குடும்பத் தலைவர் சூரியன் தான். அதிலும் குறிப்பாக சூரியனின் கதிர்வீச்சிலுள்ள புறஊதாக் கதிர்களும் அதர்க்குமேல் அதிர்வெண்ணும் கொண்ட கதிர்களும்தான். சூரியனின் கதிர்வீச்சிலுள்ள பலவகைக் கதிர்கள்குறித்தான மேலதிகமான தகவல்கள் இங்கே கிடைக்கும். இக்கதிர்வீச்சிலிருந்து அவைத் தப்பிக்க வேண்டுமெனில் அவை ஆழ்கடலுக்குள்ளோ அல்லது பாறைகளுக்கு அடியிலோ இருந்தால் மட்டுமே உண்டு. இந்த ஒளி குறித்தான ஆபத்தைப் பற்றி நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஒரு மிகமுக்கியமானப் பரிணாமக் காரணம் இருக்கிறது.

நமது மூதாதையரான ஒருசெல் உயிரிகள் வாழ்தலுக்கான வேட்கையில் இந்த கதிர்வீச்சுப் பிரச்சனையை எப்படிக் கையாண்டனர் என்பது பரிணாமத்தில் ஒரு முக்கியமானத் திருப்பு முனை என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். ஒரு வகையில் இந்த ஆபத்திலிருந்து தாமாகவே தம்மைக் காப்பற்றிக் கொள்ளும் முயற்சியில் தோன்றியவர்கள்தான் நாம்.

நம்மையெல்லாம் உருவாக்குவதற்கு நம் மூதாதையர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்.!! வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமாயிருந்தாலும் அதில் அம்முதல்வுயிரி வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கான சாட்சி..?? இதைப்படிக்கும் உங்களையும், தட்டச்சு செய்த என்னையும் உள்ளடக்கி, இப்படியாகப் பரிணமித்திருக்கும் பல வகையான உயிர்கள்தான்.

அப்படி என்ன வித்தை செய்தது அவ்வுயிரிகள்? தமக்கான இருளை தாமே உருவாக்கிக்கொண்டன. அதாவது பல செல்கள் ஒன்று கூடி ஒன்றன் கீழ் ஒன்றாகத் தங்கிக் கொண்டு தம்மை ஒளியிலிருந்து காப்பற்றிக் கொண்டன. இதுதான் பல செல் உயிரிகளின் தோற்றத்திற்கான அடிப்படை. அப்படியானால் மேலேயுள்ள செல்கள் என்னவாயின? பரிணாமத்தில் நடந்த பல உயிர்ப்புகளின் பின் பல இறப்புகள் இருக்கின்றன, அல்லது அப்படி நடந்த பல இறப்புகளினால்தான் புதியவையே பிறந்தன என்று கூறலாம். ஆனால், அது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான், பலசெல் உயிரிகளாக மாறிய பின்னர் அவை பாதுகாப்பாக இருக்கத் துவங்கின. ஆனால் என்ன?அவை இதற்கு முன்னர் அவற்றிற்கு இருந்த உயிர்த்தலுக்கான போராடும் குணத்தை இழந்தன என்பது இந்நிகழ்வின் பின் இருக்கும் தீமை. சூழ்ல் மாற்றத்தினை எதிர்கொள்ளும் கடினத்தன்மையை இழந்தன. இவ்வுயிர் தோற்றத்தை இங்கே விட்டுவிடுவோம், தேவைப்பட்டால் மீண்டும் வந்து செல்வோம்.

கவனிக்கவும்: முதல் உயிரிகளில், ஆண், பெண், விலங்கு, தாவரம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மேலும் அவற்றின் இனப்பெருக்கம் குறித்து நான் எதுவும் குறிப்பிடவில்லை (அங்குதான் நமது உரையாடல் தலைப்பின் கருவே இருக்கிறது அதனால் இனப்பெருக்கம் குறித்து விரிவாக வரும் பகுதிகளில் உரையாடுவோம்).


செல் அறிமுகம்


இப்படி மிகச்சிறந்த போராளியான ஒரு செல்லின் அளவு சுமார் 10^-5 மீட்டர்(1/100,000). இதை 10 மைக்ரான் (1 மைக்ரான் = 10^-6 மீ)என்றும் கூறலாம். ஒரு மீட்டர் நீளமுள்ள ஏதாவது ஒரு பொருளை 1 லட்சம் சம பங்குகளாகப் பிரித்தால் அப்பங்குகளின் அளவு 10 மைக்ரானாக இருக்கும். நுண்ணோக்கிகளின் உதவியுடன் மட்டுமே காணயியலும்.

உங்கள் கைகளில் உலகின் தலை சிறந்த தொலைநோக்கியிருந்தால் (telescope) நீங்கள் அதில் காணக்கூடிய பிம்பத்தின் தூரம் 10^24 என்று கொள்வோம். அதே போல் உலகின் தலை சிறந்த நுண்ணோக்கியிருந்தால் (microscope) நீங்கள் அதில் காணக்கூடிய பொருளின் அளவு 10^-16 என்று கொள்வோம். இந்த எண்கள் பற்றிய மேலதிகப் புரிதலுக்கு பிம்பங்களுடனான எடுத்துக்காட்டுகள் வேண்டுமாயின், இங்கே (அவசியம்/பரிந்துரைக்கிறேன்) செல்லுங்கள்.

ஆனால் நம் கையில் நுண்ணோக்கியிருந்தாலும் சரி தொலைநோக்கியிருந்தாலும் சரி, இறுதியில் சிறுத்துப்போவது என்னமோ நாம்தான். சரி, ரொம்ப வெட்டிப்பேச்சு பேசாமல் விசயத்துக்கு வருகிறேன்.

ஒரு செல்லின் அளவு 10 மைக்ரான்தான். அதனால் சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கிகளின் உதவியுடன் தான் அவற்றைக் காணமுடியும். அப்படியொரு கண்ணுருஒளி நுண்ணோக்கியில் (optical microscope) ஒளியுடம் சேர்ந்து தற்போதிருக்கும் ஒரு விலங்கு செல்லுக்குள் நாமும் பயணிப்போம், என்னதான் தெரிகிறது என்று பார்ப்போம். கீழிருக்கும் படம் போன்ற ஒரு அமைப்புதான் தெரியும்.





அட, நமக்கு யாருங்க வழிகாட்றது செல்லுக்குள்ள, ஒரே இருட்டா இருக்கு இதெல்லாம் என்ன எதுக்கிருக்குன்னு எப்படித் தெரிஞ்சுகறது. இதோ, நம்ம தியோடர் ஷ்வான் (Theodre Schwann) மற்றும் மத்தியாஸ் ஷெலெய்டன் (Matthias Shleiden) ரெண்டு பேரும் வாசல்லயே காத்துகிட்டுருக்காங்க. இவங்க வேற யாருமில்ல நமக்கு செல் கொள்கையை அறிமுகப்படுத்தினவங்க. இதைப்பற்றின சுவாரஸ்யமான வரலாறு இங்கே கொஞ்சம் இருக்கு, ஆர்வமிருந்தா போய் பாத்துட்டு வரலாம்.

இது என்னங்க..!!?? இந்த செல் மேல ஒரு மெல்லிய நீரோடைமாதிரியான திரவம் செல்மேல பரவிகிட்டேயிருக்கு. இத்திரவம்தான் lymph (interstitial fluid), இது இரத்த ஒட்டத்துடன் தொடர்புடையது, அதாவது இந்த lymph சீராகச் செல் மேல பரவிகிட்டுருக்கு அப்படின்னா நம்ம இருக்குற செல்லுக்கு உணவும் ஆக்ஸிஜனும் சீரா வந்துகிட்டுருக்குன்னு அர்த்தம். சரி செல்லுக்குள்ள போவோம்.

இதோ இங்க இருக்கு பாருங்க செல்லின் பெரும்பகுதிய அடைச்சுகிட்டு அதுதான் உட்கரு (nucleus), நமக்கு இருக்குற மாதிரி செல்லுக்கு மூளைன்னு ஒன்னு இருந்துச்சுன்னா அது இவ்வுட்கரு தான். இவ்வுட்கருக்குள்தான் அச்செல்லின் DNA(Deoxiribonucleic acid) (ஜீன்கள் வடிவில்) இருக்கிறது. இதில்தான் ஒரு செல்குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் செல்லின் உள்ளிருக்கும் உறுப்புகளின் செயல்பாட்டிற்கான கட்டளைகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு பகுதி DNA க்களில் மட்டும்தான் உருப்படியான விசயங்கள் இருக்கும் மீதமெல்லாம் சும்மா வெட்டியா இருக்கும் அவ்ளோதான் (nonsense DNAs). அது என்ன உட்கருவின் புறப்பரப்பில் ஏதோ சிறு துளைகள் இருக்கின்றன? இத்துளைகளின் மூலம்தான் கருவின் உள்ளும் புறமும் சில மூலக்கூறுகள் (molecules) பயணிக்கும்.

இது என்ன இது கருவுக்கு வெளியே, செல்லுக்குள்ளயும் கூழ்மாதிரி திரவம் சுத்திகிட்டுருக்கு. இந்த திரவம்தான் சைட்டோப்ளாசம்(cytoplasm). இத்திரவம் முழுவதும் சில வேதிப்பொருட்கள், புரோடின்கள் மற்றும் சில அயனிகள், உப்புகள் என செல்லின் உயிர்தலுக்கு தேவையானவை இருக்கும்.

இங்கே உருளை மாதிரி மிதந்துகிட்டிருக்கு பாருங்க இவைதான் செல்லின் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). இவற்றின் முக்கியப் பணி உணவிலிருந்து செல்லின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலாக அதாவது ATP யாக் (adenosine triposphate) மாற்றுவது.

இதோ இங்கே ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்டிருக்கும் ரைபோசோம்கள் (ribosomes) மிக முக்கியமாக செல்லுக்குத் தேவையான புரோட்டின் உற்பத்தியாளர்கள். இவை தனியாகவும் சுழலும் அல்லது mRNA(messenger Ribonucleic acid) என்ற இழையால் கொத்தாகக் கட்டப்பட்டும் இருக்கும்.

இங்க கொஞ்சம் பாத்து ஜாக்கிரதையா வாங்க தடுக்கி இந்த லைசோசோம்களுக்குள் (lysosomes) விழுந்துராதீங்க. இதுகுள்ள செல்லின் அத்தனைக் கழிவுகளும் கொட்டப்படும், இதனுள் கொட்டப்படும் எதையும், சில வேதிப்பொருட்கள் மற்றும் என்சைம்கள் (enzymes) உதவியுடன் அது ஒரு மக்கிய சூப்பாக மாற்றிவிடும்.

அட இது என்ன பல இழைகள் சேர்த்துக் கட்டப்பட்ட கயிறு போல செல்லுக்கு குறுக்கே போயிகிட்டுருக்கு? ஓ!! இதுவரைக்கும் நாம பார்த்த பல உறுப்புகள் எல்லா செல்லுக்கும் பொதுவானவை, ஆனா நாம கொஞ்சம் சிறப்பு பணிகள் செய்கிற ஒரு செல்லுக்குள் நுழஞ்சிட்டோம். இக்கயிறு போன்ற நார்அமைப்புகள் இச்செல்லின் சிறப்பு பணிக்காக உள்ள ஒன்று அதனாலதான் மேல இருக்குற வரைபடத்துல கூட இந்தக்கற்றையான நார்கள் இல்லை. நாம அவசரத்துல ஒரு மனிதனின் இருதயச் செல்லுக்குள் நுழைஞ்சுட்டோம், அதனால இதயத்தின் சிறப்புப் பணியான சுருங்கி விரிதல் என்ற சிறப்புப்பணியை இந்தச்செல்தான் செய்யவேண்டும். அப்படிச்சுருங்கி விரியருத்துக்கான ஒரு சிறப்பு உபகரணம் தான் இப்புரோட்டின் நார்கள். இவை சுருங்கி விரிவதற்கு உதவியாகத் தேவையான ஆற்றலை அளிக்க ஆற்றல் மூலங்களான மைட்டோகாண்டிரியாக்கள் பக்கத்துலயே இருக்கு. இதேபோல், சிறப்புப் பணிகளுக்கான செல்களில் அப்பணியைச் செய்வதற்கான சிறப்புறுப்பிருக்கும்.

ஒரு வழியா செல்லின் மறு முனைக்கு வந்தாச்சு, இதோ நாம வெளியே வரும்போது இருக்குதே இந்த பஞ்சு போன்ற இலகுவான சவ்வுஇழைகள் இதுதான் ஒரு விலங்குச் செல்லின் சுவர். இதன் தனிப்பட்ட செயலே செல்லை அதன் வெளிப்புறச் சூழலிருந்து பாதுகாப்பதுதான். ஆனால் இது ஒரு கடினமான ஒரு சுவரைப்போன்றதல்ல, இதன் பரப்பிலும் பல சிறிய பம்புகள் (pumps - தமிழ்ல என்ன?) உண்டு. செல்லின் உள்ளே இருக்கக்கூடிய திரவத்தில் பொட்டசியம் அயனிகள் செறிந்து காணப்படும், ஆனால் செல்லின் வெளிப்புறத்தில் நீரும், கால்சியம் அயனியும் செறிந்து காணப்படும். இந்த கால்சியம் அயனி உள்ளே நுழைந்தாலும் சரி, நீர் உள்ளே நுழைந்தாலும் சரி, செல்லின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும், மேலும் உள்ளே பாயும் நீரினால் செல் ஒரு பலூன் போல உப்பி வெடித்துச் சிதறிவிடும். செல்லுக்கு வெளியே நீரின் செறிவும் அழுத்தமும் அதிகமாக இருப்பதால், எப்போதும் நீர் உள்ளே நுழைய முனைப்புடன் இருக்கும். அதனால் வெளியிலிருந்து உள்ளே நுழையும் நீரை வெளியேற்றுவதுதான் இப்பம்புகளின் வேலை.

ஆனால், முக்கியமான உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் மட்டும்தான் நாம பாத்திருக்கோம், இன்னும் செல்லுக்குள்ள நிறைய கண்டுபிடிக்கப்படாத மற்றும் ஏனென்று தெரியாத உறுப்புகளும் உண்டு.

ஒரு வழியா செல்லுக்குள்ள போயிட்டு வெற்றிகரமா திரும்பியாச்சு, ஆனா நீங்க ஒன்னு கவனிச்சீங்களா நாம வெளிய வரும்போது உள்ளே ஒரு பரபரப்பு சூழல் உருவாக ஆரம்பிச்சுது. ஆமாம் நீங்க ஊகிச்சது சரிதான் நாம உள்ளே போய் சுற்றுப் பயணம் செஞ்ச செல் இறக்கப்போகுது அல்லது இறக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆனால் அது இறக்க வேண்டிய கட்டாயம் என்ன? எப்படி இறக்கும்? என்பதை அடுத்த பகுதியில் உரையடுவோம்.(நெக்ரோசிஸ் - நிர்பந்திக்கப்பட்ட இறப்பு முறை)

************************
ஏற்கனவே குறிப்பிட்டது போல் காலஅவகாசங்கள் பொறுத்து கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவோம்.

1.http://fig.cox.miami.edu/~cmallery/150/unity/cell.text.htm
2.http://www.animalport.com/img/Animal-Cell.jpg
3.http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l1/emspectrum.html
4. "SEX & THE ORIGINS OF Death", by William R.Clark


** குறிப்பு

பூமியின் அடியாழத்தில், ஏறத்தாழ 4100 மீட்டர் ஆழத்தில், மிகவும் அரிதாக பூமியின் மையப்பகுதியில் இருக்கும் உருகுநிலை மாக்மாவும் கடல் நீரும் சேருமிடத்திலுள்ள வெப்பப் புள்ளிகளில் புதிய உயிர் தோற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் அங்குள்ள புதிய உயிரிகளைக் குறித்த மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.