Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Thursday, November 13, 2008

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்


மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து "உயித்தொகுப்புகளும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?


படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை "phylogeny" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.


4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது "நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.


5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?




படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.


6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.


7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது "உயிரின்" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக "உயிர்த்தொகுப்புகளின்" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain "origin of life", it (tries to) explains "origin of species").

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.


8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).


9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. "சில" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.


10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது "மனிதன்" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.


ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

"It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

தகவல் மூலங்கள்:

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/learn.html
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_toc_01

பரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்
http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

"Phylogeny" குறித்த விரிவான விளக்கங்களுக்கு
http://evolution.berkeley.edu/evolibrary/article/phylogenetics_02

படங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.


பின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


Monday, August 11, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி.

"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.


II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.


இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.


கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )

ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.

தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).


உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.


ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.

தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.

சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.

ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).


[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).