Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, June 26, 2009

எப்போதும் வாழும் எசக்கி்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்கு




கால்களை மாற்றிப் போட்டு "தப்பு"ல தனக்கு தெரிஞ்ச தாளத்தை வாசித்துக் கொண்டிருந்தான் பத்து வயசு மாரி. அவனுக்கெதிரே கண்களில் நீர்முட்ட அமர்ந்திருந்தார் குருட்டுத் தாத்தா.

குருடு என்றால் முழுவதும் குருடுயில்ல பார்வை சற்று மங்களாகத் தெரியும் அவ்வளவுதான், அதுவும் இப்பதான் ஒரு அஞ்சாறு வருசமா. தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது, கொஞ்சம் எட்டியிருந்து பார்ப்பவருக்கு அவர் தாளத்துக்கு தலையாட்டுவது போல தெரியும், ஆனால், கிட்டத்துல வந்தாதான் தலை எப்போதுமே லேசான ஆட்டத்தோடு இருப்பது தெரியும். உடலெங்கும் வாழ்வின் வரிகளாக சுருக்கங்கள், எப்படியும் தொண்ணூறு வயசிருக்கும். பார்வைதான் மங்கலே தவிர மற்றபடி நடை, உடையுடன் தான் இருப்பார்.

திடிரென மாரி, பறையை அடித்துக் கொண்டே எழுந்து லேசாக ஆட ஆரம்பித்தான். கிழவனுக்கு உடனே எசக்கியின் நியாபகம் வர கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"அப்படிப்போடுறா என் சிங்கக் குட்டி" என்று எசக்கி வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்தது நினைவு வந்தது.

உறவுமுறையில் தாத்தா இல்லாவிட்டாலும் எதிர்க் குடிசையில் இருந்ததால, ரொம்பவும் நெருக்கமாகிவிட்டார் குருட்டுத் தாத்தா. ஊருக்குதான் அவர் குருட்டுத் தாத்தா, ஆனால் எசக்கிக்கு மட்டும் இவர் வாத்தித் தாத்தா. ஆம் பத்து வயசிருக்கும் போது குருட்டுத் தாத்தாவின் வாசிப்புக்கு ஆடத்துவங்கியவன் எசக்கி, அப்படியே அவருடைய சிஷ்யப்பிள்ளையாகிவிட்டான். அவரது முதல் அபிமான மாணவன், இரசிகன் எல்லாம் எசக்கிதான். அன்னிலிருந்து தாத்தாவோட தப்பை சூடேத்தறதுக்கு வைக்கோலை கொளுத்தறதுலேருந்து, ஊர்ல செத்துப் போன மாட்டுலேருந்து தோல் உரிக்கிறவரைக்கும் எல்லாத்துக்கும் எசக்கிதான் துணை தாத்தாவுக்கு.

குருட்டுத்தாத்தாவுக்கு பறை வாசிப்பதில் கொஞ்சம் அதிகப்படியான திறமையும் பெருமையும் உண்டு. அதுவே அவரோட தனிமைக்கும் காரணமாயிருச்சு. வெறும் மூணு தெருவுள்ள அந்த கிராமத்துல ரெண்டு தெரு தள்ளியிருந்த காலனிலதான் இருந்தார்கள் தாத்தாவும் எசக்கியும்.

வாலிப வயசுல உச்சிப் பொழுதுகூட தெக்கெயிருக்குற சுடுகாட்டுலதான் தாத்தா அதிகமா வாசிச்சுக்கிட்டேயிருப்பார். அவரு அங்க வாசிக்கிறார்னா அன்னிக்கு அவரோட மரியாதைக்கு சோதனை வந்து, தோத்துப்போன கோபத்துல இருக்கார்னு அர்த்தம். இவர் என்னதான் திணவோட காரியஞ்செஞ்சாலும், அதிக நேரம் சுடுகாட்டுலதான் செலவழிக்க வேண்டியிருந்தது. அவரோட கோபமும் தோல்வியும் காலப்போக்கில அவர தனியாளாவே விட்டிருச்சு .

எசக்கிக்குத் தன்னோட கலைய மட்டும் சொல்லிக் கொடுக்காம, அதுமேல அவருக்கிருந்த மரியாதையையும், பெருமிதத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்துட்டார். அவர் சொல்லி கொடுத்த மரியாதைதான் எசக்கிக்கும் வாழ்க்கையை போராட்டமாக்கிருச்சு. குருட்டுத் தாத்தா அளவுக்கு அவனால செயிச்சு வரமுடியலன்னுதான் சொல்லனும். தினம் அவனோட கலைக்கும், மரியாதைக்கும் ஏதாவது சோதனை வச்சிகிட்டே இருக்கும் அந்த கிராமம்.பொதுவா கிராமத்துக்கும் வடக்கெயிருக்கும் குடியானச் சுடுகாடும் தெக்கெயிருக்கும் காலனிகாரங்களுக்கான சுடுகாடும்தான் எசக்கி அதிகமா தன்னோட வாசிப்பைக் காட்டுற எடம்.

தாத்தா அளவுக்கு நெஞ்சுரம் இல்லாததாலோ, அல்லது குடும்பச்சுமையோ தெரியாது, எசக்கிக்கும் சந்தோசம் துக்கம்னு இந்த ரெண்டுக்குமிடையே தான் தேர்வு செய்ய முடிஞ்சிது.

என்னதான் உரிமையா எல்லா வேலையும் செஞ்சு குடுத்தாலும், எவ்ளோ பாசம் வச்சிருந்தாலும், தன்னோட ஆண்டையோட பொண்ணு கல்யாணத்துல "நீ என்னடா மொதோ பந்திக்கே வந்துட்ட" ன்ற ஒரு கேள்வி போதும், இவன் சுருங்கிப் போயி அன்னிக்கு ராத்திரி பூராவும் தெக்கேதான் கெடப்பான். வருத்தம் தீர்ற வரைக்கும் வாசிச்சுத் தீத்துடுவான்.

என்னதான் இவனோட திறமைக்காக வேலை குடுத்தாலும், வேலை முடிஞ்சவுடனே கூலிய கொறச்சு குடுக்கறுதுக்காகவே
" **** வேலையே அரை வேலதான்னு" காலங்காலமா சொல்லிகிட்டே வர்ற ஒரு வார்த்தை போதும் அன்னிக்கு இராத்திரி முழுக்க தெக்கதான் இருப்பான்.

இப்படி பெரும்பாலும், தெக்கயேதான் வாசிச்சுகிட்டிருப்பான். அப்பொவெல்லாம் மாரிதான் அடுத்த நாள் போயி எழுப்பிகிட்டு வருவான். பெரும்பாலும் தாத்தா கோவத்துல வாசிச்ச இடத்துல
எசக்கியால சோகமாதான் வாசிக்க முடிஞ்சுது. தாத்தாவுக்கும் இது தெரியும், அதனால தெக்கெயிருந்து சத்தம் கேட்டாலே குடிசைல இருந்த படியே மனசு கணத்து போயி உக்காந்துருப்பார்.

ரொம்ப விவரம் தெரியாத வயசுல சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தோசப்பட்டு வடக்க இருக்க குடியானச் சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கற அரச மரத்துல உக்காந்து வாசிச்சுகிட்டிருப்பான், தாத்தாவும் அவன் சந்தோசத்துல வாசிச்சா வீட்டுலயே ஒரு புன்னகையோட உக்காந்து ரசிச்சிகிட்டிருப்பாரு. ஆனா விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் அவன் வடக்க வாசிச்சு வருசக்கணக்காச்சு.

ரொம்ப வருசம் கழிச்சு முந்தாநேத்து சாயங்காலம் வடக்கேருந்து எசக்கி வாசிச்ச சத்தம் கேட்டவுடனேயே தாத்தாவுக்கு இங்க குடிசைல இருப்பு கொள்ளல. எப்ப அவன் வீடு வந்து சேருவான் விவரம் கேக்கலாம்னு காத்துகிட்டிருந்தார். ஆனா அன்னிக்குன்னு அவன் சீக்கிரம் வர்ற வழியக் காணும்.

அடுத்த நாள் எசக்கியோட குடிசைல ஒரே கலேபரம், அழுகை, கூச்சல். ஒரு வழியா தட்டுத்தடுமாறி வெளியே வந்த தாத்தா ஒரு கணம் அதிர்ந்து போயிட்டாரு. குடியான தெருக் கோடில இருந்த வீட்டுப் பொண்ணும் எசக்கியும் முந்தாநேத்து ராத்திரி டவுனுக்குப் போயி புது வாழ்க்கை தொடங்கலாம்னு இருந்தாங்கலாம். அப்படி போன எசக்கிய அந்தப் பொண்ணோட சொந்தங்கள் எல்லாம் துண்டு துண்டா திருப்பி எடுத்து வந்து காலனில போட்டுட்டானுங்கன்னு விபரம் சொன்னான், பக்கத்து வீட்டுப் பையன்.

"சரி வா தாத்தா வீட்டுக்கு போகலாம்"னு மாரிசொன்னதும் கிளம்பினார் தாத்தா. மாமன் எதுக்காக செத்துப்போனான்னு கூட விபரம் புரியாமல், கைல இருந்த எசக்கியோட "தப்புல" தட்டிகிட்டே தாத்தாவோட நடந்து கொண்டிருந்தான் மாரி. எரிஞ்சிகிட்டிருந்த எசக்கியின் உடலை திரும்பி பாத்துக்கிட்டே, இனி எல்லா குடியானச் சாவுக்கும் சந்தோசமா வாசிக்கச் சொல்லிக்குடுக்கனும் மாரிக்குன்னு வெம்மிகிட்டே நடந்தார் தாத்தா.






Sunday, March 9, 2008

அடையாளங்கள்




பல புறக்கனிப்புகளின் தொடர் விரட்டலில் ஓடிய பயனற்ற அடையாளத்தைக் கொண்ட அவன்(ள்), இறுதியில் இதோ இக்குப்பைத்தொட்டியினருகில் தனக்கான அடையாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டான். எத்தனை நாட்கள் தனது நெற்றியில் பலமுறை ஏதாவது ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைத் தேடியும், ஒட்டியதைச் சுரண்டியதிலும், உலர்ந்து போன தனது சிராய்ப்புகளை வருடியவாறு கண்காணித்துக் கொண்டிருந்தான் அவ்வழியே செல்பவர்களின் நெற்றியை. இனி அடிக்கடி நெற்றியைச் சுரண்டத்தேவையில்லை, பயனற்ற ஓர் அடையாளத்தைக் குப்பைத்தொட்டியில் வீசப்போய் புதியவொன்றைக் கண்டுகொண்டான் உள்ளிருந்த இக்குழந்தையின் மூலம்.

குழந்தையின் சிரிப்பு அவனை தலைசாய்க்கவைத்து, முன்பு நிஜங்களாயிருந்தவை மாயங்களாய் கண்முன்னே விரிந்து அவனை உள்ளே விழச் செய்தது.

அவனை விரட்டிய அத்தனைக் கேள்விகளும், மீண்டுமொரு ஒத்ததிர்வை உருவாக்கக் காத்திருந்தன. துவங்கியது மீண்டும் அந்தக் கேள்வி, என்ன பெயரைக் கேட்டால், ம.. ம.. ன்னு சொல்லிகிட்டு என்ன மண்ணாங்கட்டியா? இப்படித்துவங்கியவை தொடர்ந்தன, நீ என்ன இன்ன.. ? "இல்லை நானும் ம.." ஓ இதில்லைன்னா அப்ப நீ அந்த..? "இல்லை நானும் ம.." இன்ன நம்பிக்கைக்காரனா..? "இல்லை நானும் ம.." ஓ அப்படின்னா நீ ...? "இல்லை நானும் ம.." இன்ன மொழி..? "இல்லை நானும் ம.." இன்ன..? இன்ன..? இப்போது பல "இன்ன"க்கள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அவன் இப்போது "நானும் ம.." என்று சொல்வதை நிறுத்தியிருந்தான். ஓவ்வொரு முறையும் அவனது நெற்றியில் இன்னக்கள் ஒட்டப்பட்டும் சுரண்டப்பட்டும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது, யாருக்கும் புலப்படாமல்.

ஒரேயொருவன் மட்டும் அவனிடமிருந்ததை ஏற்றுக் கொண்டான், ஆனால், அவனும் ஆடைகளைக் கலையச்செய்து என்னவோ தேடினான், பின்னர் அவனும் நெற்றியைச் சுரண்டிவிட்டான்.

இப்படியான வெளியிலிருந்து தப்பித்து மீட்டுக்கொண்டு விழுந்தான் குப்பைத்தொட்டியினருகே. இன்னும் உடல் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது.

சுயத்திற்குத் திரும்பியவனாய் குழந்தையின் மிருதுவான நெற்றியைத் தடவியவாறு சொன்னான், உனது நெற்றிகளில் சிராய்ப்புகள் தோன்றத் தேவையில்லையென்று.

இப்போது, குழந்தை சிரித்தது, அங்கு பார்த்தாயா, இன்ன பெயரைக் கொண்ட, இன்ன தொழில் புரியும், இன்ன பிரிவைச் சேர்ந்த, இன்ன மொழி பேசும், இன்ன நிலப்பரப்பில் பிறந்த, இன்ன நம்பிக்கைகளைக் கொண்ட, இன்ன சிந்தாந்தங்கள் வழிவாழும், என்று இன்ன பிற இன்ன(ல்)க்களைக் கொண்ட இருவரின் தொழிற்சாலையின் விளைபொருள் என்பதை நெற்றியில் சுமந்து கொண்டு ஒரு குழந்தை போகிறது, என்று கூறிக்கொண்டே அதன் நெற்றியைத் தடவியது குழந்தை.

இல்லை, "இன்ன"க்கள் இல்லாதவர் என்பது மட்டும்தான் இருக்கிறது, என்றான்.

இதற்கு முன் நீ ம.. யென்றென்ன சொல்லவந்தாய்?

அதுவா.. நான்(னும்) "ம"னிதன்.... என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, குப்பையிலிருந்து எட்டிப் பார்த்துப் புன்னகைத்தது வீசப்பட்ட அவனது பயனற்ற "ம"னித அடையாளம்.

சரி வா, இனி இவ்வின்னக்கள் இல்லாதவர்கள் என்றிருக்கச் செய்வோம் அனைவரையும்.
இவர்கள் சென்ற வழிநெடுகிலும் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன பயனற்ற மனித அடையாளத்தால். அங்கே, இவர்களிடமிருந்து தப்பிய ஒருவன் நெற்றியில் காயங்களுடன் முனகிக்கொண்டிருந்தான் "நானும் ம.."

*************************************