Sunday, March 9, 2008

அடையாளங்கள்




பல புறக்கனிப்புகளின் தொடர் விரட்டலில் ஓடிய பயனற்ற அடையாளத்தைக் கொண்ட அவன்(ள்), இறுதியில் இதோ இக்குப்பைத்தொட்டியினருகில் தனக்கான அடையாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டான். எத்தனை நாட்கள் தனது நெற்றியில் பலமுறை ஏதாவது ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைத் தேடியும், ஒட்டியதைச் சுரண்டியதிலும், உலர்ந்து போன தனது சிராய்ப்புகளை வருடியவாறு கண்காணித்துக் கொண்டிருந்தான் அவ்வழியே செல்பவர்களின் நெற்றியை. இனி அடிக்கடி நெற்றியைச் சுரண்டத்தேவையில்லை, பயனற்ற ஓர் அடையாளத்தைக் குப்பைத்தொட்டியில் வீசப்போய் புதியவொன்றைக் கண்டுகொண்டான் உள்ளிருந்த இக்குழந்தையின் மூலம்.

குழந்தையின் சிரிப்பு அவனை தலைசாய்க்கவைத்து, முன்பு நிஜங்களாயிருந்தவை மாயங்களாய் கண்முன்னே விரிந்து அவனை உள்ளே விழச் செய்தது.

அவனை விரட்டிய அத்தனைக் கேள்விகளும், மீண்டுமொரு ஒத்ததிர்வை உருவாக்கக் காத்திருந்தன. துவங்கியது மீண்டும் அந்தக் கேள்வி, என்ன பெயரைக் கேட்டால், ம.. ம.. ன்னு சொல்லிகிட்டு என்ன மண்ணாங்கட்டியா? இப்படித்துவங்கியவை தொடர்ந்தன, நீ என்ன இன்ன.. ? "இல்லை நானும் ம.." ஓ இதில்லைன்னா அப்ப நீ அந்த..? "இல்லை நானும் ம.." இன்ன நம்பிக்கைக்காரனா..? "இல்லை நானும் ம.." ஓ அப்படின்னா நீ ...? "இல்லை நானும் ம.." இன்ன மொழி..? "இல்லை நானும் ம.." இன்ன..? இன்ன..? இப்போது பல "இன்ன"க்கள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அவன் இப்போது "நானும் ம.." என்று சொல்வதை நிறுத்தியிருந்தான். ஓவ்வொரு முறையும் அவனது நெற்றியில் இன்னக்கள் ஒட்டப்பட்டும் சுரண்டப்பட்டும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது, யாருக்கும் புலப்படாமல்.

ஒரேயொருவன் மட்டும் அவனிடமிருந்ததை ஏற்றுக் கொண்டான், ஆனால், அவனும் ஆடைகளைக் கலையச்செய்து என்னவோ தேடினான், பின்னர் அவனும் நெற்றியைச் சுரண்டிவிட்டான்.

இப்படியான வெளியிலிருந்து தப்பித்து மீட்டுக்கொண்டு விழுந்தான் குப்பைத்தொட்டியினருகே. இன்னும் உடல் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது.

சுயத்திற்குத் திரும்பியவனாய் குழந்தையின் மிருதுவான நெற்றியைத் தடவியவாறு சொன்னான், உனது நெற்றிகளில் சிராய்ப்புகள் தோன்றத் தேவையில்லையென்று.

இப்போது, குழந்தை சிரித்தது, அங்கு பார்த்தாயா, இன்ன பெயரைக் கொண்ட, இன்ன தொழில் புரியும், இன்ன பிரிவைச் சேர்ந்த, இன்ன மொழி பேசும், இன்ன நிலப்பரப்பில் பிறந்த, இன்ன நம்பிக்கைகளைக் கொண்ட, இன்ன சிந்தாந்தங்கள் வழிவாழும், என்று இன்ன பிற இன்ன(ல்)க்களைக் கொண்ட இருவரின் தொழிற்சாலையின் விளைபொருள் என்பதை நெற்றியில் சுமந்து கொண்டு ஒரு குழந்தை போகிறது, என்று கூறிக்கொண்டே அதன் நெற்றியைத் தடவியது குழந்தை.

இல்லை, "இன்ன"க்கள் இல்லாதவர் என்பது மட்டும்தான் இருக்கிறது, என்றான்.

இதற்கு முன் நீ ம.. யென்றென்ன சொல்லவந்தாய்?

அதுவா.. நான்(னும்) "ம"னிதன்.... என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, குப்பையிலிருந்து எட்டிப் பார்த்துப் புன்னகைத்தது வீசப்பட்ட அவனது பயனற்ற "ம"னித அடையாளம்.

சரி வா, இனி இவ்வின்னக்கள் இல்லாதவர்கள் என்றிருக்கச் செய்வோம் அனைவரையும்.
இவர்கள் சென்ற வழிநெடுகிலும் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன பயனற்ற மனித அடையாளத்தால். அங்கே, இவர்களிடமிருந்து தப்பிய ஒருவன் நெற்றியில் காயங்களுடன் முனகிக்கொண்டிருந்தான் "நானும் ம.."

*************************************

No comments: