Tuesday, November 4, 2008

சினிமா - தொடர் பதிவு

சினிமா பற்றிய கேள்விகளுக்கான தொடர் பதிவில், நண்பர் Sen's senses..- செந்திலின் அழைப்பை ஏற்று ஒரு சினிமா பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால், சிறு வயதில் அதிகம் விரும்பியது சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையே. எனது ஆரம்பப் பள்ளி பருவங்களில் திரையுலகில் முக்கியப் பங்கு வகித்தவை டி.இராஜேந்தரின் திரைப்படங்களே. மேலும், அப்போதைய அவரது தி.மு.க ஆதரவினால் கொட்டகைக்குமுன் அவரது திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமாக கட்சிக்கொடி அலங்காரங்கள் இருக்கும். அதனால், அத்திரைப்படங்களே நான் ஆரம்ப காலங்களில் பார்த்தவையாகத் தற்போது நினைவில் இருப்பவை. மேலும், அப்போது எனக்கு தோன்றிய சந்தேகங்கள் இப்போதும் பசுமரத்தானிபோல் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் இறுதியில் டி.இராஜேந்தர் இறப்பதுபோன்ற காட்சி வரும். பின்னர் அவரது அடுத்த படம் வந்தவுடன் அவர்தான் போன படத்திலேயே இறந்துவிட்டாரே மீண்டும் எப்படி மற்றுமொரு படம் என்று அனைவரையும் (அவர்கள் என்னையும்)புரட்டியெடுக்கும் கேள்விகள் கேட்பதுண்டு?

எனது இக்கேள்வியைப்பற்றி எழுதும்போது எங்கேயோ வாசித்தது நினைவில் வருகிறது. கிராமத்தில் எம்.ஜி.ஆரின் திரப்படத்தைப் பற்றி இரு பெரியவர்கள் பேசிக்கொள்ளும்போது "எப்படி அந்த ஊர் கொட்டகையிலும் அவரது படம் ஓடுது, நம்மூர் கொட்டகையிலும் அவரது வேறொரு படம் ஓடுது?" என்று கேட்டாராம். அதற்கு அருகில் இருந்த பெரியவர் கூறினாராம் "இரண்டு கொட்டகைக்கும் அடியில் சுரங்கம் இருக்கிறது, அவர் அச்சுரங்கம் வழியே இரண்டு கொட்டகைக்கும் இடையே ஓடி ஓடி நடிப்பார் என்று. இடையில் சுரங்கத்திலேயே உடை மாற்றமும் செய்துகொள்வார்" என்று கூறினாராம். இதை ஏதோவொரு புத்தகத்தில்தான் வாசித்தேன், எழுதியவர் யார்? என்ன புத்தகம் என்பது தற்போது நினைவிலில்லை.

சரி விசயத்துக்கு வருவோம், எனக்கு நினைவிலிருப்பவை டி.ஆரின் ஆரம்பகாலத் திரைப்படங்களே, ஏனெனில், படம் பார்த்தபின் ஒரு வாரத்திற்கு எங்கள் விளையாட்டுகளில் எல்லாம் அவரது வசனங்களே தெரிக்கும். இது தவிர திரைப்படம் பார்க்காத தன் நண்பர்களுக்கு என் அக்கா கதை சொல்ல அதைக் கேட்டுக்கொண்டே பள்ளிக்கு நடந்து் செல்வது போன்ற நிகழ்வுகளே அவற்றை நினைவில் நிறுத்துபவை. ஆறாம் வகுப்பின் துவக்கத்திலிருந்து எனது பொழுதுபோக்கு சிந்தனை என அனைத்தையும் ஆக்கிரமித்தது கால்பந்தாட்டம் (எல்லாம் சேர்ந்த பள்ளி அப்படி). அதனால் அதன்பிறகு சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி ஆர்வமேயிருந்ததில்லை. அதற்காக நான் பெரிய கால்பந்தாட்டவீரனென்றெல்லாம் நினைக்காதீர்கள், கடைசிவரை ஒரேயொரு ஆண்டு மட்டும் மாற்று ஆட்டக்காரனாயிருந்தேன், அதுவும் ஒரேயொரு ஆட்டத்தில் அவ்வளவுதான். மற்றபடி தெருவில் விளையாடுவதோடு சரி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாக அரங்கில் பார்த்த சினிமா வேட்டையாடு விளையாடு என்று நினைக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக அரங்கிலன்றி, இணையத்தில் பார்த்த தமிழ் சினிமா "ஈ". என்ன உணர்ந்தேன் என்பதை அடுத்த கேள்வியில் சேர்த்து பதிலளித்துவிடுகிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய தமிழ்சினிமா என்பதைவிட சில சினிமாக்கள் இருக்கின்றன.
அவற்றில், உதிரிப்பூக்கள், மகாநதி, அன்பேசிவம், மொழி மற்றும் கடைசியாகப் பார்த்த "ஈ".
மேலே குறிப்பிட்ட பல திரைப்படங்கள் குறித்து பலரும் எழுதிவிட்டதால் "ஈ" குறித்த எனது பார்வையை மட்டும் குறிப்பிடுகிறேன்.

சினிமா குறித்த எனது பார்வை மிகவும் குறுகியது, மேலும், பல திரைப்படங்களை நான் பார்த்ததுகிடையாது, என்றாலும் திரு.சீவநாதன் இயக்கத்தில் வந்த "ஈ" திரைப்படம் என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக ஒரு மாறுபட்ட திரைப்படம். அதிலும் பல குறைகள் உண்டு ஆனால் அதைப் பற்றி இறுதியாகப் பார்க்கலாம். எனக்குத்தெரிந்த வரை மிகவும் குவிமையப்படுத்தி ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை பகிரங்கமாக வேறெந்த படமும் பேசியதில்லையென்றே கருதுகிறேன். இத்திரைப்படத்தினைப் பல வகைகளில் அனுகலாம். நூறு ரூபாய்க்காகத் திருட்டுத்தனமாக செய்ல்படும் பிணவறைத் தொழிலாளியோ, அல்லது அப்பேட்டை தாதாவோ அல்லது அவனது கையாளோ ஏதோயொரு வல்லரசின் பின்புலத்தில் நடக்குமொரு மிகப்பெரிய ஆபத்திற்குத் துணைபோகலாம் அவருக்குத் தெரியாமலேயே, அல்லது அப்படியான மலினப்பட்ட இலஞ்ச இலாவன்யமும் அறியாமையில் இருக்கும் மக்கள்தான் அவ்வலரசுகளுக்கு தேவையாகவும் இருக்கலாம். உலகமயமாக்கலினால் உருவாகக்கூடிய மோசமான விளைவுகளுள் ஒன்றை இத்திரைப்படம் நிச்சயம் தோலுரித்திருக்கிறது. இதே போல சமூகச் சிக்கல்களை நேரடியாகத் தாக்கிய வேறு சில திரைப்படங்கள் இருந்தாலும், ஏதோயொரு வகையில் ஒரு அரசியல் அடையாளத்தையே அவை முன்னிறுத்தின என்பது எனது பார்வை.
ஆனால், "ஈ" திரைப்படத்தில் வணிக ரீதியான சிலவற்றை சேர்த்திருந்தாலும் இரண்டு விடயங்களைக் குறையாகக் காண்கிறேன்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தியது பாராட்டப்படவேண்டியதே, ஆனால், அனைத்து மருத்துவர் மற்றும் அனைத்து மருத்துவச் சோதனைகள் குறித்தும் ஒரு நிரந்தர பீதியையும், அச்சத்தையும் உருவாக்கி அதனை அப்படியே விட்டுவிட்டதை ஒரு குறையாகவே காண்கிறேன்.
அதைவிட முக்கியமாக அதே திரைப்படத்தில் வழக்கமான இதிகாச, புராண கதைகளின் அடிப்படையான வாய்ப்பட்டைப் பயன்படுத்தும் வழக்கமான தமிழ்சினிமா பாணியிலேயே முடித்திருப்பது. மக்களுக்கு ஏதோவொரு சமூகப் பிரச்சனையென்றால், உடனே அநாதரட்சகனாகவும், அவதாரமாகவும் யாராவது தோன்றி தீமையை அழித்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவது. மக்கள் தங்கள் சமூகப் பிரச்சனைகளுக்காக சிந்தித்து அதற்காக உழைக்கவோ போராடவோ வேண்டாம், கைகளை மேல்தூக்கி ஒரு தவத்தையோ, முறையீடையோ வைத்தால் போதும், அங்கே நாயகன் தோன்றுவார் என்ற புண்ணாக்குத் தனத்தை எப்போதுதான் விடுவார்களோ தெரியவில்லை. (சரி, இன்றும் நமது குழந்தைகளுக்கு ஒரு யானை, மக்களை ஆட்சி செய்யப் போகும் அரசரைத் தேர்ந்தெடுத்தது என்ற அம்புலிமாமாக் கதைகளைத்தானே சொல்லிகொண்டிருக்கிறோம், அதனால் அதன் நீட்சி இப்படித்தான் இருக்கும்.) இந்த அடிப்படையிலேயே "ஈ" திரைப்படத்திலும் நெல்லைமணி என்ற ஒரு போராளி/தீவிரவாதி இப்படிப்பட்ட மருத்துவர்களைக் கொல்வார், பின்னர் முடிவில் அதனையே நாயகனும் தொடர்வார். மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சனையைக் கதையில் கையாண்டுவிட்டு, கடைசியில் அதற்கான முடிவாக தீவிரவாதத்தை முன்வைப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். இவை இரண்டும் எனது பார்வையில் "ஈ" திரைப்படத்தின் குறைபாடுகளாகக் காண்கிறேன்.


5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றுமில்லை.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எனக்கு சினிமா குறித்த தொழில் நுட்ப அறிவு சுத்தமாகக் கிடையாது. ஆனால், (அக்காலத்தைய) புதிய தொழில்நுட்பம் ஒன்று மிகவும் அனுபவித்தது, வியந்தது இன்றும் நினைவிலிருக்கும் ஒன்று என்றால் அது முப்பரிமாண விளைவுகளோடு வந்த "மைடியர் குட்டிச் சாத்தான்" திரைப்படம். பல இடங்களில் ஏமாந்த அனுபவம் இன்றும் நினைவில் இருக்கிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தீவிரமாக வாசிப்பதில்லை, அவ்வப்போது உண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மட்டுமே எனது இசை குறித்த அறிவு. திரைப்பாடல்களில் எல்லா சூழ்நிலைகளுக்கும், காலத்திற்கும் ஏற்ற இசையும் பாடல் வரிகளும் உண்டு என்றே கருதுகிறேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

"உலக மொழி சினிமா? " இக்கேள்வி ஆங்கிலத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். எனது பார்வையில் எல்லா மொழிகளும் உலக மொழியே.. :)

தாய்மொழியல்லாத வேற்றுமொழிப் படங்கள் என்றால்
கடந்த 5 ஆண்டுகளாக அதிகம் பார்த்ததுண்டு.
ஹிந்தி, சுத்தமாகப் புரியாது, அதையும் மீறி ஹிந்தியில் பார்த்த ஒரு படம் "லகான்" மட்டுமே.


அநேகமாக அனைத்து புரூஸ்லீயின் திரைப்படங்களும் பார்த்ததுண்டு. எல்லாமே தாக்கும் படங்கள்தான்..:) ஒரு ஆர்வக்கோளாரில் ஓராண்டு காலம் குங்ஃபூ வகுப்புக்குச் செல்லும் அளவிற்குத் தாக்கியவை.

பல ஆங்கிலப் படங்கள் பார்த்ததுண்டு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை மூன்று ஆங்கிலத் திரைப்படங்கள்.
The Pianist, Life is Beautiful.

மூன்றாவது் திரைப்படம் "Wait until dark" - இது ஒரு கருப்பு-வெள்ளைத் திரைப்படம். படம் முழுவதும் ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கண்தெரியாத பெண் மற்றும் அவளது கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் அவ்வீட்டில் பதுங்கும் இரண்டு கொலைகாரர்கள் என நீளும். அந்நடிகையின் பெயரோ அல்லது அத்திரைப்படம் குறித்த வேறெந்த குறிப்புமோ நினைவிலில்லை, யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். அந்நடிகையின் இறுதிக்காட்சி நடிப்பு நிச்சயம் பிரமிக்க வைக்கும்.

ஆங்கிலம் அல்லாத மொழியில் என்றால் பிரெஞ்ச் மற்றும் ஈரானியத் திரைப்படம் ஒன்று "subtitles" உதவியுடன் பார்த்தது முறையே "Amelie" மற்றும் "children of heaven".


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை எவ்வித நேரடித்தொடர்புமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் பற்றிக் கூறும் அளவிற்கு கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உற்றுநோக்கியதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பழகிவிடும் அல்லது வேறுயேதோவொன்று அவ்விடத்தை நிரப்பிவிடும். ஒரு வேளை மெகா சீரியல்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம்.

வேறு சிலரை அழைக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி. அநேகமாகப் பலரும் எழுதியிருப்பார்கள் அதனால் பொதுவான அழைப்பாக வைத்து விடுகிறேன். விருப்பமிருப்பவர்கள் எழுதுங்கள்.

ஒரேயொரு வரை மட்டும் கண்டிப்பாக எழுத அழைக்கிறேன். பலகாலமாக வெறும் புகைப்படங்கள் மட்டும் பதிவிலேற்றும் எங்கள் அன்பு அண்ணன்
உடுக்கை அடிக்கும் உடுக்கை முனியாண்டி அவர்களை அழைக்கிறேன்.



3 comments:

Ŝ₤Ω..™ said...

இராஜேந்தர் படங்களெ நகைச்சுவைகள் தான்.. அதிலும் உமக்கு நினைவில் நிற்கும் நிகழ்வுகளோ top..

Ŝ₤Ω..™ said...

எனக்கு நினைவில் உள்ளமட்டும், சமூக சீற்கேடுகளை களைய ஒரு super hero தான் வருவான்.. இறுதியில் தீவிரவாத போக்கு தான் இதுவரை தமிழ் திரையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது..

நம்ம mass heros எல்லாம், ஓர் பிஸ்கோத்து பிரச்சினைக்காகவே வில்லன்களிடம் மல்லுக்கு நிற்பது போலவும், இறுதியில் நாயகன் வெல்வது போலவுமே தமிழ் சினிமா கர்த்தாக்களால் இதுவரை சிந்திக்க முடிந்ததது..

புதுமையான சிந்தணையுடன் வரும் இயக்குனர்களும் இந்த சூழலில் மாட்டிக்கொள்வது தான் பரிதாபம்..

கையேடு said...

நன்றி செந்தில்.. :)