Saturday, September 22, 2007

கடல் நீருக்கடியிலுள்ள இந்திய - இலங்கை நில இணைப்பு

சேது சமுத்திரத்திட்டம், இந்திய - இலங்கை கடல்நீருக்கடியிலுள்ள நில இணைப்பு, இதைப்பற்றி இணையத்தில் பலரும் அவர்களுடைய கருத்துக்களைப் பதித்துவிட்ட நிலையில், இந்நிகழ்வு பற்றியும் அதற்குத் தொடர்புடைய சிலவற்றையும், இந்தக் கையேட்டில் பதித்து வைக்கிறேன்.

நாசாவின் புகைப்படம் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், நாசா இப்புகைப்படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது. நாசா, இந்திய - இலங்கைக்கிடையேயான இந்நில அமைப்பின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி ஒற்றை வரியில் கூறியிருக்கிறது[1]. இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற ஒரு யூகத்தையே இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன [2,3]. இந்நில அமைப்பு மனிதனால்தான் எழுப்பப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்களில்லையென்றுதான் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது[2,3]. கால அளவுகளைப் பொருத்து இது இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவுடன் ஒத்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்து மித்தாலஜி என்று நாம் கூறினால் கூட அந்நில அமைப்பிற்கு இராமர் பாலம் என்று பெயரிடாமல் ஆதாம் பாலம் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறது நாசா. இதற்காக நீங்கள் புஷ்ஷின் தலையையெல்லாம் கேட்கக் கூடாது.
இப்படிப்பட்ட ஒரு நில இணைவு வரலாற்றில் முக்கியம் வாய்ந்த மற்றொரு நிகழ்விலும் இருக்கிறது. இங்கே கி.மு 332. கிரேக்க மன்னனாகிய மாவிரன் அலெக்சாண்டர் உலகை வெற்றி கொள்ளப் படையெடுத்த போது, தற்போதைய லெபனானும் அப்போது ஃபினீஷியன் நகரங்களான பிப்லோஸ் மற்றும் சிடான் ஆகிய நகரங்களைக் கைப்பற்றியவுடன் அருகில் இருக்கும் டையர் என்ற தீவினை நோக்கிப் போர் தொடுக்கும் போது கடலில் அவனது பொறியாளர்கள் எழுப்பிய பாலத்தை வரலாற்று அதிசயமாகவே அனைவரும் சிலாகித்தனர்[4].

ஆனால் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்புறச்சூழல் மற்றும் புவிஅறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தைச் (Center for Research and teaching on the geoscience of the environment (CEREGE)) சேர்ந்த நிக் மரினர் (Nick Marriner) தலைமையில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து ஏற்பட்ட நிலப் படிமங்களை(sediments) ஆராய்ந்து, இப்பாலம் பற்றிய உண்மையை ஆராய்ச்சி செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் 5500 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து, அருகிலிருந்த லிடானி டெல்டா பகுதிகளிலிருந்து வந்த நிலப் படிமங்கள், டையர் தீவிற்க்கும், தற்போதைய லெபனானிற்கும்மிடையே நீருக்கடியில் ஒரு நிலப்பரப்பைத் தோன்றச் செய்ததாகவும், மேலும், டையர் தீவு லெபனானை நோக்கி வந்த பெருவாரியான கடலலைகளைத் தடுத்ததோடல்லாமல், மேலும் நிலப்படிமங்கள் எளிதாக அத்தீவிற்கும் லெபனானிற்குமிடையே சேர்வதற்குத் துனைபுரிந்திருக்கிறது, என்று கூறியுள்ளனர். இவ்வாய்வறிக்கையைப் பற்றி வாஷிங்டன் டி.சி.யிலுள்ள Jean Stanley (Smithsonian Institution) எனும் geoarcheologist (புவியியத்தொல்பொருள் ஆரய்ச்சியாளர்-இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை) கூறுகையில், நீரோட்டங்களினால் ஏற்படும் படிம நகர்வு மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்தால் இப்படி நீருக்கடியில் ஏற்படும் நிலப்பாலங்கள் வியக்கத்தக்க ஒன்று அல்ல என்றும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் 332 B.C யில் 10 மீட்டர் ஆழம் கொண்ட கடலில் அலெக்சாண்டரின் பொறியாளர்கள் பாலம் எழுப்பினார்கள் எனும் வரலாற்றுச் செய்தி உண்மையல்ல என்றும், அது இயற்கையாகவே ஏற்பட்ட ஒன்று என்றும் அவ்வறிக்கையின் மூலம் நிரூபித்துள்ளனர் [4].

ஒரு தீவிற்கும் அருகிலிருக்கும் நிலப்பரப்பிற்கும் இடையே நீருக்கடியில் எழும் நில இணைப்பு இயற்கையான ஒன்று என்றாலும், இங்கே அதன் வடிவத்தை நிர்ணயிப்பது எது? அதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நிச்சயம் தீவின் வடிவம் மற்றும் அருகிலிருக்கும் பெரிய நிலப்பரப்பின் கடற்கரைகள் மற்றும் நில அமைப்பு ஆகியவை உடனடியாகத் தோன்றும் காரணிகள், புவியியல் படித்தவர்களால் இதைவிடச் சிறப்பான மற்றும் முக்கியமான காரணிகளைக் கூறமுடியும்.

இலங்கைத் தீவின் நில அமைப்பையும், வடிவத்தையும், பாலம் தோன்றிய இடத்தையும் பார்க்கும் போது, நிச்சயம் பாலத்திற்கு இரண்டு பக்கங்களிலிருந்து வரும் கடல் நீரோட்டம் சமமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தென்னிந்திய மற்றும் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள நிலத்தின் தன்மை மற்றும் கருப்பொருள், இத்தனை இலட்சம் ஆண்டுகளாக ஏற்பட்ட கடல் நீரோட்ட மாற்றங்கள், மற்றும் புவியியல் மாற்றங்கள் எனப்பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா, அப்படியாயின் அவற்றின் முடிவுகள் என்ன??

இப்படி இந்தியா - இலங்கைக் கிடையே நீருக்கடியிலுள்ள நில இணைப்பு மனிதனால் கட்டப்பட்டது என்று திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாகக் கூறுவதற்கான போதிய சான்றுகள் இல்லை எனும் நிலையில், இதைக் கட்டிய கொத்தனார் யார் மற்றும் சித்தாள் யார் என்பது போன்ற கேள்விகள் இன்னும் பின்னுக்குத்தள்ளப்படவேண்டிய ஒன்று.

இவ்விவகாரத்தில் பெரும்பாண்மை மக்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்று கூறும் சிலருக்கான கேள்விகள்.

செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.

அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும். இங்கே அந்த நம்பிக்கை எந்த பெயரைத் தாங்கிக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் பார்வைக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் உண்மை.


இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப் பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையை நம் அரசு கையாண்டிருக்கும் விதம் மிகவும் கண்டனத்துக்குறியது. அரசியல் காரணங்களுக்காக ஆய்வுகள் அடிப்படையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஏதோ தட்டச்சுப் பிழையைத் திருத்துவது போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திருத்திக்கொள்வதாயிருந்தால் எதற்காக இவ்வரசுக்கு விஞ்ஞானிகள். காங்கிரஸ் உயர்மட்டக் குழுவே கூடி ஒரு முடிவெடுத்திருக்கலாமே.

பெருவாரியான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் கருத்துக்களை அவ்வாய்வறிக்கை தெரிவிப்பதாயிருந்தால், அவ்விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை, சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் இருக்கும் மற்ற, தொல்பொருள், ஆராய்ச்சியாளர்களின் துணையோடு சரிபார்த்திருக்கலாம், அல்லது சர்வதேச தொல்பொருள் விஞ்ஞான இதழ்களுக்கு சமர்ப்பித்து ஆய்வுகளையும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகளையும் சரி பார்த்திருக்கலாம். இதனை விடுத்து அறிவியல் ஆய்வறிக்கையை தங்களின் வசதிக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது, சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது வரலாறு கூறும் உண்மை.

அப்படி இராமர் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன் வழி எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது ஆதாரப்பூர்வமான உண்மை எனும்பட்சத்தில், காஷ்மீரிலிருந்து, குமரிவரை அனைவருடைய நம்பிக்கையும் பொய்த்துப்போனாலும் சரி அதை தம்முடைய மக்களுக்குச் சொல்ல வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. ஒருவேளை அவ்விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையிலுள்ள கூற்றுக்களுக்கு போதிய ஆதாரங்களோ அல்லது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைபாடும் இருக்குமாயின், அவ்விஞ்ஞானிகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

3- ஜனவரி 2007 அன்று சிதம்பரத்தில் நடந்த 94 வது இந்திய அறிவியல் கூட்டமைப்பை (94th- Indian Science Congress) துவங்கி வைத்து ஆற்றிய உரையில், இந்திய அறிவியல் கல்வித்தரம், மற்றும் ஆராய்ச்சித் தரம் ஆகியவை குறைந்து வருவதாகவும், மேலும் இந்நிலைத் தொடருமானால், ஆராய்ச்சிக் கூடங்களை சர்வதேசத் தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்போவதாகவும் தெரிவித்தவர் நம் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள்[5]. இப்படிக் கூறிய அவரது அரசு ஒரு ஆய்வுக்கட்டுரையைக் கையாண்டிருக்கும் விதம் கண்டனத்துக்குரிய, மற்றும் வேதனைக்குரிய விசயமாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை நிச்சயமாகக் குறைத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.


அந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை அரசியல் காரணங்களுக்காகவும், மத சிந்தனைகளுக்காவும் அரசு அவ்வறிக்கையை மூடிமறைக்குமானால், பல தலைமுறைகளைத் தாண்டி எதிரொளிக்கக் கூடிய ஒரு தவறுக்குப் பொறுப்பேற்கின்றன, நம் அரசியல் கட்சிகளுள் பல. மேலும் அவ்வாய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதை ஒரு சமூக நலன் கருதி அரசு வெளியிடுமானால் தற்போது ஆட்சி கவிழலாம், அல்லது கலவரங்கள் எழலாம் ஆனால் இது வரும் காலங்களில் தொடரவுள்ள பல அடிப்படைவாத செயல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. ஒரு வகையில் பைபிலுக்கும், டார்வின் மற்றும் கலிலியோ கூறிய விஞ்ஞான உண்மைகளுக்கும் இடையே நடந்த ஒரு போராட்டத்திற்கு இணையானது இந்நிகழ்வு.

இனி என் தனிப்பட்ட கருத்துக்கள் - அவ்விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகள் சரியென்று சர்வதேச விஞ்ஞானிகளால் ஒப்புக்ககொள்ளப்படுமானால், நிச்சயம் அவ்விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குவேன்.

சர்வதேச அளவில், மானுடவியல், தொல்பொருள் ஆராய்ச்சி, மொழியியல் மற்றும் மரபணு சோதனைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டாய்வின் மூலம் பல வரலாற்றுத் திரிபுக்கதைகளின் பின்புலத்திலிருக்கும் உண்மைகளை அறிவியல் உலகம் விளக்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் தோன்றிய இடத்தையும், அங்கிருந்து எப்படியெல்லாம் பிரிந்து பல்வேறு நிலப்பரப்புகளுக்குச் சென்று இன்றைக்கு வெவேறு இனமாக, நாடாக, சமூகக்குழுக்களாகப் பிரிந்து சென்றான் என்ற உண்மையை ஒரளவுக்கு நெருங்கிவிட்டது அறிவியல் உலகம்.

அப்படிப்பட்ட உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்கு மற்றும் விடைதெரியாத சில புதிர்களை விளக்குவதற்கும் இந்தியா-இலங்கை இடையே நீருக்கடியில் இருக்கும் இப்பாலம் மிகவும் இன்றியமையாதது. பெரிங் ச்ட்ரைட் என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் ஒரு நில இணைப்பு இருந்ததற்கான சில ஆதாரங்களும் தற்போது அவ்விணைப்பு இல்லாததாலும் இருக்கும் ஆராய்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் ஏராளம்[6].

இந்தச் சூழலில் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதக் கூட்டம் பற்றியும், அவர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமிருக்கும், இருந்த தொடர்புகள் பற்றியும் பல குழப்பமான அனுமானங்களுக்கான சில தீர்வுகளுக்கு இப்பாலம் உறுதுணையாக இருக்கலாம். இந்திய நிலப்பரப்பிற்கு வெவேறு காலகட்டத்தில் வந்த திரவிட மற்றும் ஆரிய இனங்கள் பற்றிய உண்மையை உலகிற்கு உணர்த்தியது மரபணு சோதனைகள். மேலும், இராமன் இருக்கிறானா இல்லையா என்பதை ஆராய்வதற்குக் கூட அப்பாலம் இடிக்கப்படாமல் இருப்பது அவசியமே.

மீண்டும் என் தனிப்பட்ட கருத்தை தெளிவுபடுத்துவது நல்லது. இப்புவிப்பரப்பில், மனிதனின் தோற்றம், சமூக வாழ்வு, மற்றும் வெவ்வேறு கண்டங்களுக்கான அவனது பயணம், என்பது போன்ற உலக வரலாற்றை நிர்ணயிப்பவை இந்த நில இணைப்புகள். ஆதலால், இப்படிப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பாலத்தை இடிப்பதனால் வரக்கூடிய பொருளாதாரத்தை விட நிச்சயம் முக்கியமான ஒன்று. ஆதலால் அந்தப் பாலம் இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் இன்னும் பல தலைமுறைகளுக்கு, பொய்க் கூற்றுக்களும், செவிவழிச்செய்திகளும் நிரந்தரமான வரலாறாகிவிடும் அபாயம் இருக்கிறது.



[1].http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA06670
[2].
http://www.geocities.com/uk20020/bridge_Srilanka_review.htm
[3].
http://www.lankalibrary.com/geo/dera2.html
[4].John Simpson, Science NOW, 14 May 2007. http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2007/514/1?etoc
[5]. K.S. Jayaraman, Nature, Volume 445, 134 ( 11th Jan 2007).

[6]. http://www.sciencedaily.com/releases/2002/08/020816072026.htm

**References 4 and 5 might require subscribtion.

3 comments:

சதுக்க பூதம் said...

செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.

-Nice comparison

கோவி.கண்ணன் said...

//சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும்.//

கையேடு அவர்களே கலக்கல் !

தமிழ்மணத்தில் உங்கள் இடுகையை பார்பதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
பெருசுங்கதான் பழசை கட்டிக் கொண்டு அழறதுகள் என்றால், சில இளைஞர்கள் என்னத்த சொல்வது :( கண்முன்னே சாம்ராஜியங்கள் சரிந்திருக்கிறது என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும்.
:(

கையேடு said...

திரு கோவி.கண்ணன் மற்றும் சதுக்க பூதம் - தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி